×

சம்பத்தை தந்தருளும் ஸ்ரீ சம்பத்கரி தேவி

பார்வதி தேவி காஞ்சியில் தவம் செய்த போது அரசு காத்த அம்மன், பச்சை அம்மன், சந்தை வெளி அம்மன், கருக்கினில் அமர்ந்த அம்மன் ஆகிய பெண் தெய்வங்கள் காவல் புரிந்தனர். இவர்களுக்கு தலைமை பொறுப்பேற்றவள் அரசு காத்த அம்மன். சோழ மன்னர்களின் அரசாங்கத்திற்கு பாதுகாப்பாக இருந்ததால், `அரசு காத்த அம்மன்’ என்று பெயர் வந்தது.இந்த அம்பிகை, வலது காதில் குண்டலமும், இடது காதில் தோடும் அணிந்து இருப்பாள். இவள் வடக்கு நோக்கி வீற்றியிருக்கிறாள். இரு கோரைப்பற்களும், நான்கு கரங்களை கொண்டவளாக இருக்கிறாள்.

இதில், வலது மேற்கரத்தில் உடுக்கையும், கீழ் கரத்தில் சூலமும், இடது மேல்கரத்தில் பாசம், கீழ் கரத்தில் கபாலமும் உள்ளன. ஜ்வாலா கிரீடம் அணிந்திருக்கிறாள். ஆறடி உயரத்தில் இருக்கும் இந்த அம்பிகையின் இடது காலால், அசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள். வடக்கு நோக்கிய தெய்வங்கள், நகரை காவல் காக்கும் தெய்வங்களாக விளங்குகின்றன. அரசு காத்த அம்மனுக்கு சம்பத்கரீஸ்வரி என்ற பெயரும் உண்டு. `சம்பத்’ என்றால் செல்வம். `கரி’ என்றால் யானை. யானை மீது பவனி வந்து, செல்வங்களை வாரி வழங்குவதால், இப்பெயர் வந்தது.

இதற்கு அடையாளமாக, அம்மனின் எதிரில் சிம்ம வாகனத்திற்கு பதிலாக யானை வாகனம் இடம் பெற்றுள்ளது. இந்த அம்பிகைக்கு பௌர்ணமி, வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. வைகாசி, ஆடி ஆகிய மாதங்களின் கடைசி வெள்ளிக்கிழமை அன்று அம்மன் உலா நடக்கும். நம்பினோர் கெடுவதில்லை; இது நான்கு மறை தீர்ப்பு: அவளை நம்பினால் எக்காரணத்திலும், எந்த சூழலிலும் கைவிட மாட்டாள்.யானைகளின் கூட்டத்தால் வணங்கப்படுபவள் ஸ்ரீ சம்பத்கரி தேவி. அன்னை ஸ்ரீ லலிதாபரமேஸ்வரியின் அம்சமாக அவதரித்தவள். ஓசை, உணர்வு, உருவம், சுவை,நாற்றம் என்று உணரவைக்கும் ஐம்புலன்களும், ஐந்து விதமான யானைகளாம்.

இவை வெவ்வேறு திசைகளிலோடி, நம்மை ஒருமுகச் சிந்தனையில்லாமல் தடுமாற வைக்கக்கூடியவை. ஸ்ரீசம்பத்கரி தேவி இவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தண்ட நாயகி. புலன் ஐந்தினையும் கட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கு, செல்வம் பெருகும் என்பதனை குறிப்பதே இவளது நாமம். புலன்களின் வழி உணர்வுகள் நம் மனதை தறிகெட்டு அலையவைக்கும். அம்மாள் ஸ்ரீ சம்பத்கரி தேவியின் வழிபாடு, நம்மை நிலைப்படுத்தி நம் மமதையையும், அகங்காரத்தையும் அடக்க உதவும்.

அம்மாள் ஸ்ரீ லலிதாம்பிகையின் படைத்தலைவிதான் ஸ்ரீ சம்பத்கரி தேவி. கோடிக்கணக்கான யானைகள், குதிரைகள், ரதங்கள் சூழ சகல செல்வங்களையும் தன்னுள் கொண்ட சம்பத்கரி, தன் பக்தர்களுக்கு அழியாத நவநிதிகளை வாரி வழங்கி அருள் பாலிக்கின்றாள். ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம், `சம்பத்கரி ஸமாரூட ஸிந்தூர வ்ரஜஸேவிதா’ என்று சம்பத்கரி தேவியைப் போற்றுகின்றது. அம்பாளை கோடிக்கணக்கான யானைகள் பின் தொடர, சகல அஸ்திரங்களும் தேவியைப் பாதுகாக்க தனது வாகனமாக “ரணகோலாஹலம்’’ எனும் யானையின் மீதேறி அருட்கோலம் காட்டுகின்றாள். இத்திருத்தலம், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2கி.மீ., தொலைவில் அரசு காத்த அம்மன் என்கிற சம்பத்கரீஸ்வரி ஆலயம் உள்ளது.

பிரச்னைகள் தீர்க்கும் பரிகாரங்கள் அடுத்த இதழில்...

Tags : Shri ,Sampadkari Devi ,
× RELATED ஸ்ரீ ஸாயி பாபா புராணம்!