×

இரண்டு தேர்க்கால்களில் வெங்கடேசப் பெருமாள்

நன்றி குங்குமம் ஆன்மீகம்

கருங்குளம் - தூத்துக்குடி மாவட்டம்


திருவேங்கடம் என்கின்ற திருமலையில், பகவான் ஏழுமலையான் ‘நின்ற வண்ணமுள்ள பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். இந்த ஏழுமலையானைப் போல் தெற்கேயும் வகுளகிரி என்ற சிறிய மலை மேல் அருளும் வெங்கடேசப் பெருமாள் சில வித்தியாசங்களுடன் எழுந்தருளி இருக்கிறார். வகுளகிரி என்பது தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து சுமார் ஒன்பது மைல் தூரத்தில் திருச்செந்தூர் போகும் பாதையில் கருங்குளம் என்னும் கிராமத்தில் இத்தலம் இருக்கிறது. இந்தக் கிராமத்தின் வட கோடியில் ஒரு சிவன் கோயிலும், வகுளகிரியின் மேல் நிவாசப் பெருமாள் கோயிலும் இருக்கின்றன. இந்தக் கோயிலுக்குச் சற்றுத் தெற்கேதான் வெங்கடாசலபதி அர்ச்சா மூர்த்தியாக தனிக் கோயிலில் எழுந்தருளியிருக்கிறார்.

இவரும் நின்ற வண்ணம் பெருமாள்தான்!இந்த அர்ச்சா மூர்த்தியான ‘வெங்கடாசலபதிக்கும்’ சில விசேஷங்கள் காணப்படுகின்றன. இங்கு சிவபெருமானுக்குச் செய்வது போல் அபிஷேகங்கள் அதிகளவில் செய்யப்படுகின்றன. இவருக்கு மற்ற பெருமாள் கோயிலைப் போல் இங்கு புளியோதரை நைவேத்யம் கிடையாது. இந்த மூலவரான மூர்த்திக்கும் உற்சவ மூர்த்தி கிடையாது. அருகில் உள்ள மற்றொரு கோயிலில் உள்ள நிவாசருக்குத்தான் உற்சவமூர்த்தி உண்டு.

இந்த உற்சவ மூர்த்தியும் வருடத்திற்கு ஒரு முறைதான், அதாவது சித்ரா பெளர்ணமி அன்றுதான் மலையிலிருந்து கீழே இறங்குகிறார். மேலும், இந்த வெங்கடாசலபதி கோயிலுக்கு சற்று தெற்கே தலவிருட்சமான புளியமரம் இருக்கிறது. இதில் ஒரு விசேஷம் இருக்கிறது. இந்த மரத்தின் இலைகள் மற்ற புளிய மரத்தின் இலைகளைப் போல் மாலைப்பொழுதிற்குப் பிறகு மூடிக்கொண்டு உறங்கிவிடுவதில்லை. இது `உறங்காபுளியமரம்’ என்று கூறப்படுகிறது. மேலும், இங்குள்ள வெங்கடாசலபதி இரண்டு சந்தன மரக்கட்டைகளில் ஆவிர்பவித்து அர்ச்சா மூர்த்தியாக இருக்கிறார்.

இந்தத் தலத்தைப் பற்றிய மகாத்மியம் ‘பிரமாண்ட புராணத்தில்’ கூறப்பட்டிருக்கிறது. இதன் பெருமையை அறிந்த காசி நகரில் உள்ள சந்திரகாந்த அரசன் அகத்திய முனிவரிடம் கேட்கிறான். “அகஸ்திய மகரிஷியே! இரண்டு தேர்க்கால்களுக்கா இவ்வளவு அபிஷேகங்களும், ஆராதனை பூஜைகளும் நடக்கின்றன? மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறதே? இதை யார் எங்கிருந்து இங்கே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார்கள்? அதன் வரலாற்றை விஸ்தாரமாகக் கேட்க விரும்புகிறேன்!” என்றான் அரசன். அகஸ்திய மாமுனிவரும் விவரமாகக் கூற ஆரம்பித்தார்.

“அரசே! பாஹ்லிகம் என்ற தேசத்தில் கல்ஹாரம் என்ற பட்டணத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிசெய்து வந்தான் சுபகண்டன் என்ற அரசன். அவன் மகாபக்திமான். மகாவீரன். அவனுக்கு கண்டமாலை என்ற நோய் வந்து, அதீத கிருமிகளால் பாதிக்கப்பட்டான். சுபகண்டன் என்ற அவனது பெயரே ‘கிருமி கண்டன்’ என்றாகியது. திருமலை திருப்பதியில் உள்ள திருவேங்கடவனைத் தவிர வேறு கதியில்லை என்றெண்ணி, நிறைய தனத்துடன் திருமலைக்கு வந்து தங்கி பகவானை ஆராதித்து வந்தான். அப்பொழுது ஒரு நாள் பகவான் அவன் கனவில் தோன்றி, நல்ல சந்தன மரத்தால் ஒரு ரதம் செய்து விடக் கூறுகிறார். இறைவன் ஆணைப் படியே, மிகவும் அழகான சந்தனமரத் தேர் செய்து முடிக்கப்பட்டது.

எவ்வளவோ கணக்குப் பார்த்தும் சிற்ப, சித்திர ஆகம விதிகளைப் பின்பற்றி பார்த்தும் கால்களை செய்தும், இரண்டு கால்கள் மீதியாகவே இருந்தன. சிற்பிகள் ஆச்சர்யத்தில் செய்வதறியாது திகைத்தனர். அப்பொழுது, பகவான் இருதேர்கால்களிலும் ஆவீர் பாகம் செய்து அசரீரியாக அந்த அரசனின் கனவில் வந்து “அரசனே! அந்த இரு சந்தனக்கட்டைகளையும் தாமிரபரணித் தீர்த்தத்திலிருக்கும் வகுளகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் உன் வியாதி முற்றிலும் குணமாகும்!” என்றார். அவ்விதமே அரசனும் வகுளகிரியின் உச்சியில் நிவாசப் பெருமாள் கோயிலுக்கும், உறங்காப் புளியமரத்திற்குள் நடுவில் அந்த இரு தேர்கால்களையும், வெங்கடாசலபதியையும் பிரதிஷ்டை செய்து கோயிலும் கட்டினான்.

இந்த இரு தேர்க்கால்களின் மேல் பாகம் நடுவில் இரண்டும் சேர்ந்து முகம் போல் தோற்ற மளிக்கும். மற்ற இரு பக்கத்திலுமுள்ள இரு பாகமும் இருகைகளைப் போல் தோன்றும். ஆகவே, இரு தேர்க்கால்களில் ‘வெங்கடேசப் பெருமாள் வெங்கடாசலபதியாக ஆவிர்பாவித்து இந்தப் பூவுலகத்தை ரட்சித்துவருகிறார். இவ்விறைவனை வழிபட்டுவந்ததால் அந்த அரசனின் வியாதியும், முழுவதுமாகக் குணமாகி மறுபடியும் சுப கண்டனாக ஆனான். மேலும், இத்திருத்தலத்தில் பல விஷேசங்கள் உண்டு.

எல்லா இடங்களில் இருப்பதுபோல் பகவான், தேவி பூதேவியுடன் காட்சியளிப்பதில்லை. தனியாகவே நின்ற திருக்கோலத்தில் அபயஹஸ்தம் காட்டியபடி நின்ற வண்ணம் கொண்ட பெருமாளாக இருக்கிறார். இங்கு பகவானுக்கு சாற்றியிருக்கும் திருநாமத்திலும் ஒரு விஷேசமுண்டு. இவருக்கு அணிவித்திருக்கும் நாமம், தென்கலை நாமத்தைப் போல் கீழ்ப் பாதம் கிடையாது. அதே சமயம் வடகலை நாமத்தின் தோற்றமுமில்லை. மேலும், இவர் ருத்ராட்ச மாலையும் அணிந்திருக்கிறார்.

இப்பெருமாளுக்கு சிவனுக்கு செய்வது போலவே தினமும் பலவகையான அபிஷேகங்கள் செய்யப்படுகிறது. மூலவரான இவருக்கு உற்சவ மூர்த்தி கிடையாது. உற்சவ மூர்த்தி அருகில் கோயில் கொண்டுள்ள நிவாசனே இந்த வெங்கடாசலபதியைத் தரிசிக்கும் முன், கட்டாயமாக வடக்கிலிருக்கும் சிவாலயத்தில் அருள்பாலிக்கும் அருள் மிகு குலசேகர நாயகி சமேத மார்த்தாண்டேஸ்வரரைத் தரிசிக்க வேண்டும்.

சைவ, வைணவ மத ஒற்றுமைக்குச் சான்றாக விளங்கும். இத்திருக் கோயிலில் நவக்கிரக நாயகர்கள் அழகிய திருக்கோலம் கொண்டு, தங்கள் நாயகியர்களுடன் வீற்றிருப்பது மேலும் சிறப்புக்குரியதாகும். இந்த வகுளகிரி திருத்தலத்துக்குப் பெருமை சேர்க்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால், இங்குதான், காஞ்சி மகாஸ்வாமிகள் தனது சிறு பிராயத்தில் சில சாஸ்திரங்களைக் கற்றுக்கொண்டாராம். அவரது குருவாகத் திகழ்ந்தவர் மஹாமஹோபாத் யாய ஸ்ரீமான் கிருஷ்ணசாஸ்திரிகள் அவதரித்தது இந்த வகுளகிரியில்தான்!

தொகுப்பு: டி.எம்.ரத்தினவேல்

Tags : Venkatesh Perumal ,
× RELATED ‘‘ஆவுடையார் மீது நின்றருளும் அரங்கன்!’’