×

செல்வத்தை அள்ளித் தரும் வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் 12.6.2022

வைகாசி மாதம் 29 ம் தேதி 12.6.2022 ஞாயிற்றுகிழமை வைகாசி விசாகத் திருநாள். சக்தியிடம் முருகன் விசாகனாக தோன்றிய நாள்தான் வைகாசி விசாகம் என்பதாகும். அதனால்தான் முருகப் பெருமானுக்கு வைகாசி விசாகத்திருநாள் பெருவிழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் பின்னணியில் ஒரு செய்தியும் உள்ளது. ஒருமுறை அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று தமது குறைகளை முறையிட்டனர்.

சிவபெருமான் அசுரர்களுடைய கொடுமையை களைந்து அவர்களை காத்தருள விரும்பினார். தமது நெற்றிக்கண்ணில் இருந்து தீப்பொறிகளைத் தோற்று வித்தார். அவை தேவர்களினால் கங்கையில் கொண்டு விடப்பட்டன. கங்கை சரவணப் பொய்கையிலே கொண்டுசேர்த்தது.புராணங்களின்படி சிவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறி, சரவணப் பொய்கையில் ஆறு பகுதிகளாக விழுந்தது. இது ஆறு குழந்தைகளாக உருப்பெற்றது.

இது ஆறுமுகப் பெருமான் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. வைகாசி மாதம் விசாகத் நட்சத்திரம் தினத்தன்று இந்த அவதாரம் நிகழ்ந்ததால், வைகாசி விசாகத் தினம் விசேஷ தினமாகக் கொண்டாடப்படு கின்றது.உலகத்து உயிர்கள் யாவும் உய்யும் பொருட்டு சிவபெருமானின் திருவிளையாடலால் குழந்தையான நாள். ஆதலால்  மக்கள் வழிபாட்டுக்கு வைகாசி விசாக நாள் மிகவும் சிறந்ததாகும்.நட்சத்திர அடிப்படையில் நாம் தெய்வங்களைக் கொண்டாடும் பொழுதுதான் அச்சமில்லாத வாழ்க்கை நமக்கு அமைகிறது. ஆற்றலும் அவன் அருளால் நமக்கு கிடைக்கிறது. முருகனுக்கு உகந்த நாளில் குறிப்பாக வைகாசி மாதம் வரும் ‘விசாக’ நட்சத்திரத் தன்று முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வையகத்தில் நல்ல வளமான வாழ்க்கை அமையும்.
பகை விலகும்.பாசம் பெருகும். அவனது திருப்புகழைப் பாடினால் எதிர்ப்புகள் அகலும்.

அன்று அதிகாலையில் விநாயகப் பெருமானை வழிபட்டு, இல்லத்து பூஜை அறையில் முருகப்பெருமான் படம் வைத்து, அதற்கு முன்னால் ஐந்து முக விளக்கேற்றி, பல வகையான புஷ்பம் சாற்றி, மற்றும்  பழங்களை அர்ப்பணித்து, கந்தனுக்கு பிடித்த அப்பமான கந்தரப்பத்தையும், அவனுக்குப் பிடித்த மாம்பழத்தையும் வைத்து கவச பாராயணம் செய்ய வேண்டும்.
விசாகத் நட்சத்திர தினத்தன்று உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று அவருக்கு நல்லெண்ணெயில் அபிஷேகம் செய்து பார்த்தால் நல்லன யாவும் அமையும். பசும்பாலால் அபிஷேகம் செய்து பார்த்தால் விசும்பும் வாழ்க்கை மாறி வியக்கும் விதத்தில் ஆயுள் கூடும்.

பச்சரிசி மாவினால் அபிஷேகம் செய்து பார்த்தால் பட்ட கடன் பிரச்னை தீரும். பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்க்கும் செயல்கள் எல்லாம் நல்லவையாக அமையும்.
சர்க்கரையால் அபிஷேகம் செய்து பார்த்தால் எல்லோரும்  நண்பர்களாக மாறுவர். இளநீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் நல்ல  குழந்தை  பிறக்கும். எலுமிச்சம் பழத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் மரண  பயங்கள் தீரும். மாம்பழத்தில் அபிஷேகம் செய்துபார்த்தால் மகிழ்ச்சியோடு மட்டுமல்லாமல்  செல்வநிலை உயரும். திருநீறால் அபிஷேகம் செய்து பார்த்தால்  புகழ்  எட்டு திசையிலும் பரவும் வாய்ப்பு கிடைக்கும்.

அன்னத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் அரசுவழி ஆதரவும் சந்தனத்தால் அபிஷேகம் செய்து பார்த்தால் சருமநோய் தீரவும்பன்னீரால் அபிஷேகம் செய்து பார்த்தால் பார்போற்றும் செல்வாக்கு நமக்குச் சேரும். தேனால்அபிஷேகம் செய்து பார்த்தால்  சங்கீதம் வளரும். இதனால்தான் வைகாசி விசாகம் தினத்தன்று உலகம்  முழுவதும் முருகன் திருத்
தலங்களில் கோலாகல விழா கொண்டாடப் படுகிறது. விசாக நட்சத்திரத்தில் உதித்த விசாகன் என்று முருகன் பெயரால் இரு திருத்தலங்கள் உள்ளன. ஒன்று வைசாக் என்று அழைக்கப்படும் ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் ஆகும்.இது அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் தலங்கள் 237-ல் ஒரு திருத்தலமாகும். மற்றொரு தலம் விசாகபவனம் எனப்படும் தலமாகும். இத்தலம் தணிகைப் புராணம் எழுதிய நூலாசிரியர் கச்சியப்ப முனிவர் என்பவர் கூறும் 64 திருத்தலங்களில் ஒன்றாக உள்ளது.

சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள மாசிலாமணீஸ்வரர் கோயிலில் வைகாசி பவுர்ணமி அன்று இறைவனும், இறைவியும் லிங்கத்தில் ஐக்கியமாகும் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.விசாகம் குருவிற்குரிய நட்சத்திரமாவதால் குருவிற்கு உரிய தலமான திருச்செந்தூரில் வைகாசி விசாகப் பெருவிழா 10 நாட்கள்  வெகு சிறப்பாக நடைபெறுகிறது.கன்னியாகுமரி அம்மனுக்கு ‘ஆராட்டு விழா’ இந்நாளில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சிறப்பாக சொல்லப்படும் காஞ்சி கருட சேவை, வைகாசி விசாகத்தை ஒட்டியே நடைபெற்று வருகிறது.

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் என்ற மகான் வைகாசி விசாகத்தில் சித்தியடைந்ததால் இந்நாளில் அவரது குருபூஜை திருப்போரிலுள்ள அவரது சமாதியில்  பக்தர்
களால் விசேஷமாக நடைபெற்றுவருகிறது.இந்திரன் வைகாசி விசாகத்தன்று சுவாமி மலை முருகனை வழிபட்டு ஆற்றல் பெற்றான். உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் நடக்கும் விசாகத் திருவிழா தனித்தன்மை கொண்டது. இதில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் கலந்துகொள்வார்கள்.

விசாகத்தன்று அதிகாலையில் கடலில் நீராடி கடல் மண்ணை எடுத்து தலையில் சிறிய பெட்டிகளில் சுமந்து வந்து சுயம்புநாதர் ஆலயத்தின் அருகில் குவிப்பார்கள். இதனால்  பாவ வினைகளும், நோய்களும் தீரும்.செல்வங்கள் சேரும், புகழ் சேரும், கல்வி அறிவு அதிகரிக்கும். நினைத்த காரியங்கள் வெற்றி அடையும். சுயம்புலிங்கத்தின் அருள் என்றும் மண் சுமந்தாருடன் நிலைத்து
நிற்கும்.வைகாசி மாதம் பவுர்ணமியும், விசாக நட்சத்திரமும் கூடிய உச்சி வேளையில் எருக்கு இலையும், அரிசியும் தலையில் வைத்துக் கொண்டு உத்திரகோச மங்கை என்னும் தலத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் புனித நீராட வேண்டும். பின் ஆலயத்தின் உட் புறத்திலுள்ள அக்னி தீர்த்தத்தில் எள், அருகு, கோமியம் இவற்றை சிரசில் தெளித்துக் கொண்டு நீராடி கருவறையில் குடி கொண்டிருக்கும் மங்களநாதனுக்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். பின் தான தர்மங்களை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

குழந்தை இல்லாத தம்பதிகள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.இந்த விரதநாளில்  மோர், பானகம், தயிர் சாதம் ஆகியவற்றை ஏழை-எளியவர்களுக்குத் தானம் கொடுப்பது மிகவும் நல்லது.

குடந்தை நடேசன்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?