×

இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், துவண்டவர்களைத் துணிவடையச் செய்வது ஆகும்

கிறிஸ்தவம் காட்டும் பாதை

‘‘அஞ்சாதீர்கள்... அவர் கூறியபடியே உயிருடன் எழுப்பப்பட்டார்” (மத்தேயு 28:4,6). இது அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இயேசு கிறிஸ்துவின் மறைவால் அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த அவரது சீடர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அளிக்கப்பட்ட நம்பிக்கையூட்டும் செய்தியாகும். ஆம்! இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்பது உலக கிறிஸ்தவர்களின் அடிப்படை நம்பிக்கையாகும். (I கொரிந்தியர் 15:14). ஆனால் அதே சமயம் இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் செய்தி பிற சமய நம்பிக்கையுடையோருக்கும் வேறு நம்பிக்கை கொண்டோருக்கும் எழுச்சியூட்டும் செய்தியைத் தாங்கிவருகிறது.

அது என்னவெனில், இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன் இயேசுகிறிஸ்து பாலஸ்தீனத்தில் பணியாற்றினார். அவர் அன்றைய சமுக, சமய, அரசியல் அதிகாரங்களால் பெரும் பாதிப்புக்கு ஆளாகி இருந்த ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள், பெண்கள், பாவிகள் என்று பட்டம் சூட்டப்பட்டு இழிவுபடுத்தப்பட்டவர்கள் மற்றும் வேற்று இன மக்கள் முதலியோரை துணிவடையச் செய்து, தங்கள் மீது நடத்தப்படும் ஒடுக்குதல்களை எதிர்ப்பதற்குந் பயிற்றுவித்தார், உடனிருந்தார், அவர்களுக்குத் தலைமையேற்றார்.

இயேசு கிறிஸ்துவின் புரட்சிகரத் தலைமையைச் சரியாக கணித்த அன்றைய அதிகாரவர்க்கம் முழுவிசாரணை ஏதுமின்றி அவரைத் தண்டித்து சிலுவையில் அறைந்து கொன்று நிம்மதியைத் தேடிக்கொண்டது. தமது ஆணவமிக்க செயலால் இறுமாப்பு கொண்டிருந்த அதிகாரங்களுக்கு மூன்றாம் நாளே பேரிடியாகவும், அச்சுறுத்தலாகவும் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார் என்ற செய்தி எட்டியது. தமது தீடீர் படுகொலையால் திகிலடைந்து, துவண்டுகிடந்த பெண்கள், சீடர்கள் மற்றும் ஆதரவாளர்களை உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவாகச் சந்தித்து துணிவூட்டி நம்பிக்கை அளித்தார். அத்துடன் தாம் தொடங்கிவைத்த சமத்துவ சமுதாயம் என்ற இறையரசுப் பணியை தொடர்ந்து செய்திடக் கட்டளை அளித்தார்.

அஞ்சிக்கிடந்தவர்கள் துணிவுபெற்றனர், திமிறி எழுந்தனர். இயேசு உயிர்த்தெழுந்தார். `இயேசு கிறிஸ்துவே ஆண்டவர்’ என்று ஊரெங்கும் பறைசாற்றி அன்றைய அதிகாரங்களை ஆட்டம் காணச்செய்தனர். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் செய்தி உலக மக்கள் யாவருக்கும் கூறுவது என்ன? கடவுள் எப்போதும் அநீதியான அதிகாரங்களால் வீழ்த்தப்படும் மக்கள் பக்கம் இருக்கிறார். அவர்கள் துவண்டு கிடக்கையில் அவர்களுக்கு அமைதியை வழங்குகிறார் (யோவான் 20: 19,21,26). அவர்களுக்குத் துணிவூட்டுகிறார் (மத்தேயு 28: 5,10). அவர்களுக்கு ஆற்றல் அளித்து (யோவான் 20:22) ஒடுக்குதல் மிகுந்த தங்கள் சூழலை நம்பிக்கையோடும் ஆற்றலோடும் எதிர்கொள்ளவும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், அன்பு மற்றும் கருணை நிறைந்த வன்முறையற்ற உலகை உருவாக்கவும் அனுப்புகிறார்.

ஆம்! இன்றைய உலகை நேர்வழிக்குத் திருப்பும் ஆற்றல் இன்று அநீதியான அதிகாரங்களால் வீழ்த்தப்பட்டு துவண்டுகிடக்கும் மக்களிடத்தில்தான் உள்ளது என்பதை உறுதிப்படுத்துவதாக இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வருகிறது. மேலும் நீதிக்காகப் பாடுபட்டு உயிர்த்தியாகம் செய்யும் யாவரையும் கடவுள் மாட்சிமைப்படுத்துகிறார் எனும் செய்தியும் இத்துடன் இணைந்து வருகிறது. அதுபோலவே தனிமனித வாழ்வில் சோர்வுற்று நம்பிக்கையிழந்து இருக்கும் ஒவ்வொருவருக்கும் ‘‘இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” என்ற இயேசு கிறிஸ்துவின் கூற்று உங்கள் கைபிடித்துத் துணிவூட்டுகிறது. ஆம்! உயிர்த்தெழுந்த ஆண்டவர் உலகை வென்றவர். உள்ளம் சோறும் வேளை வந்து ஊக்கமளிப்பவர். ஆமென்.

பேராயர் J. ஜார்ஜ் ஸ்டீபன். (Bishop, Madras).

Tags : Jesus Christ ,
× RELATED தமிழகத்தில் ஈஸ்டர் பண்டிகை கோலாகலம்...