×

சுவாமி திருமணத்திற்கு பக்தர்கள் சீர்வரிசை!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தில் பழமையான முருகன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருநாளில், முருகப்பெருமானுக்கும், வள்ளி தெய்வானை சுவாமிகளுக்கும், திருக்கல்யாண வைபோகம் வெகு விமரிசையாக  நடத்தப்படுகிறது.  இக்கோயிலில் வேறெந்த பகுதியிலும் இல்லாத வகையில், முருகன் சுவாமி திருக்கல்யாணத்திற்கு, மேள வாத்தியம் முழங்க, கிராம மக்கள் தாம்பூல சீர்வரிசைகொண்டுசெல்லும் அபூர்வமான நிகழ்வு, 100 ஆண்டுக்கும் மேலாக முன்னோர்கள் வழியாக இன்றளவும் தொடர்ந்து வருகிறது.

பங்குனி உத்திரத் திருநாளில், தங்களது வீட்டில் திருமணம் நடைபெறுவதைப்போல எண்ணும் கிராம மக்கள், அதிகாலையிலேயே எழுந்து குளித்து, குடும்பத்தோடு புத்தாடை அணிந்து கொண்டு, அரிசி, பருப்பு, வெல்லம், பழங்கள், தின்பண்டங்கள், பூக்கள், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலைப்பாக்கு ஆகியவற்றைதாம்பூலத் தட்டில் வைத்து, கிராமத்தின் நுழைவுவாயிலில் ஒன்றுகூடி, மேள வாத்தியம் முழங்க, முன்னோர்களின் பாரம்பரிய முறைப்படி, முருகன் சுவாமி திருமணத்திற்கு சீர்வரிசையை ஊர்வலமாக எடுத்துச் செல்கின்றனர்.

சீர்வரிசைத் தட்டுக்களை கோயில் மண்டபத்தில் வைத்து, உறவினர்களை போல அமர்ந்திருந்து, முருகன், வள்ளி, தெய்வானை திருமண வைபோகத்தை கண்குளிரக் கண்டுகளிக்கின்றனர். சுவாமிகளுக்கு திருமாங்கல்யம் சூட்டப்பட்டதும், பூக்களைத் தூவி வாழ்்த்தி வணங்கி வழிபடுகின்றனர். பின்னர் கோயிலில் திருக்கல்யாண விருந்துண்டு வீடு திரும்புகின்றனர்.
பங்குனி உத்திரத் திருநாளில் நடைபெறும் சுவாமி திருமணத்திற்கு, நெருங்கிய உறவினர்களின் வீட்டில் திருமணத்திற்கு செல்வதைப்போல, சீர்வரிசை கொண்டு சென்று, பக்தர்கள் இறைவனை வாழ்த்தி வணங்கி வழிபடும் இத்திருவிழா வேறெந்த பகுதியிலும் இல்லாத வியப்பூட்டும் வழிபாடாகும்.

- பெரியார் மன்னன்

Tags : Swami ,
× RELATED சரணம்… சரணம்… சரணம் காணும் சரணாலய புகலூர்