வேதாரண்யம்: வேதாரண்யத்தில் மழைக்கு பின்பு முழுவீச்சில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது. ஆண்டு தோறும் இங்கு 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கிருந்து தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரி மூலம் மட்டுமே உப்பு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த மாதம் முழுவதும் விட்டு, விட்டு மழை பெய்ததால் உப்பு பாத்திகளில் மழைநீர் தேங்கி உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர். இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு பிறகு மீண்டும் வேதாரண்யம் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உப்பளங்களில் பாத்திகள் சரி செய்யப்பட்டு மீண்டும் உப்பு உற்பத்தி முழு வீச்சில் துவங்கி உள்ளது. இந்தாண்டு உப்பு உற்பத்தி ஜனவரி மாதத்தில் துவங்கியது. கடந்த மாதம் வரை 25 தடவைக்கு மேல் கனமழை பெய்ததால் உற்பத்தி அடிக்கடி பாதிக்கப்பட்டது. இதனால் ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் 6 லட்சம் மெட்ரிக் டன் உப்பை இந்தாண்டு உற்பத்தி செய்ய முடியுமா என்ற கவலையில் உற்பத்தியாளர்கள் இருந்தனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக வேதாரண்யம் பகுதியில் வெயில் வெளுத்து வாங்கும் நிலையில் முழு வீச்சில் தற்போது உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. மழைக்காலம் துவங்குவதற்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் உற்பத்தியாளர்களும், தொழிலாளர்களும் இந்த ஆண்டுக்கான உப்பு உற்பத்தி இலக்கை எட்டுவதற்கு இரவு பகல் பாராமல் உப்பை உற்பத்தி செய்து வருகின்றனர். மேலும், மழை காலத்திற்கு உப்பை விற்பனை செய்ய ஏதுவாக, உற்பத்தி செய்த உப்பை அம்பரம் அமைத்து சேமிக்கும் பணியிலும் தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்….
The post வேதாரண்யத்தில் மழைக்கு பின் முழுவீச்சில் உப்பு உற்பத்தி appeared first on Dinakaran.