போபால்: மத்தியப் பிரதேச குனோ உயிரியல் பூங்காவில் 25 சிவிங்கி புலிகள் வாழ்வதற்கு போதுமான இட வசதியும், இரை வசதியும் இருப்பதாக தலைமை வனப் பாதுகாவலர் கூறி உள்ளார். இந்தியாவில் 70 ஆண்டுக்கு முன் அழிந்து போன இனமான சிவிங்கி புலிகளை மீண்டும் கொண்டு வர கடந்த 2009ம் ஆண்டு நமீபியாவுடன் ‘சீட்டா ஒப்பந்தம்’ கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, முதற்கட்டமாக 3 ஆண், 5 பெண் சிவிங்கி புலிகள் விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசத்தின் சியோப்பூர் மாவட்டத்தில் உள்ள குனோ உயிரியல் பூங்காவில், 3 சிவிங்கி புலிகளை பிரதமர் மோடி நேற்று முன்தினம் விடுவித்தார். இது பற்றி மபி.யின் தலைமை வனப் பாதுகாவலர் சவுகான் அளித்த பேட்டி: குனோ பூங்காவில் ஒரு மாதத்திற்கு தனிமைப்படுத்தப்பட்ட அடைப்புகளில் சிவிங்கி புலிகள் தனித்தனியாக பராமரிக்கப்படும். அவை சகஜநிலைக்கு திரும்பிய பின், உயிரியல் பூங்கா வனப்பகுதியில் சுதந்திரமாக விடப்படும். இப்பூங்கா 750 சதுர கிமீ தூரத்திற்கு பரந்து விரிந்தது. இங்கு 20 முதல் 25 சிவிங்கி புலிகள் வாழ்வதற்கு போதுமான இடமும், இரைகளும் உள்ளன. எனவே, இரைக்காக கிராமத்திற்குள் சிவிங்கி புலிகள் நுழையும் அபாயம் இல்லை. எனவே, இந்த பூங்காவுக்கு மேலும் சில சிவிங்கிப் புலிகளை வாங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். *கிராம மக்கள் அச்சம்குனோ உயிரியல் பூங்காவிற்கு சிவிங்கி புலிகள் வருகையால் அது புகழ்பெற்ற சுற்றுலா தலமாக மாறும் என கருதப்பட்டாலும், அப்பகுதியை சுற்றி வசிக்கும் கிராம மக்கள் அச்சமடைந்து உள்ளனர். சிவிங்கி புலி வருகைக்குப் பின் பூங்கா விரிவாக்கத்திற்காக தங்கள் நிலம் கையகப்படுத்தப்படுமோ அல்லது சிவிங்கி புலிகளால் மனித-விலங்கு மோதல் ஏற்படுமோ என அவர்கள் கவலை கொண்டுள்ளனர். சுற்றுலா தலமாக வளர்ச்சி அடைந்தாலும், அதனால் பிற பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்களே பலன் அடைவார்கள் என்றும், கிராம மக்களுக்கு அதனால் எந்த பலனும் கிடைக்காது என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.*மோடி பொய்யர்சிவிங்கி புலிகளை இந்தியாவுக்கு கொண்டு வர முந்தைய அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரதமர் மோடி நேற்று முன்தினம் குற்றம்சாட்டினார். இதற்கு டிவிட்டரில் பதிலடித்த தந்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், 2009ம் ஆண்டில் தான் ஒன்றிய வனத்துறை அமைச்சராக இருந்த போது, சிவிங்கி புலிகள் திட்டத்தை தயாரிப்பதற்கான அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் தனது பதிவில், ‘2009ல் சீட்டா திட்டம் அறிமுகப்படுத்தியதற்கான கடிதம் இது. நமது பிரதமர் சரியான பொய்யர்’ என குற்றம்சாட்டி உள்ளார்….
The post குனோ உயிரியல் பூங்காவில் 25 சிவிங்கி புலிகள் வாழ வசதி: இரைக்கும் பஞ்சம் இல்லை, மேலும் சில வாங்க முடிவு appeared first on Dinakaran.