×

பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணி மெதுவாக நடக்கிறதா? மாற்றுப்பாதையில் அறிவிப்பு பலகை இல்லை

கோவை:  கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் நடைபெறும் மேம்பால பணிகளுக்காக வாகனங்கள் மாற்று பாதையில் மாற்றிவிடப்பட்டுள்ளன. இந்த மாற்று பாதைகளில் வழித்தடம் குறித்த அறிவிப்பு பலகைகள் இல்லாத காரணத்தினால் வழிமாறி சென்று வாகன ஒட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு, சுமார் ரூ.115 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில், எல்எம்டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி, வேகமாக நடந்து தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே தூண்கள் அமைக்க தோண்டப்பட்ட சாலைகள் சில இடங்களில் போடப்பட்டுள்ளது. சில இடங்களில் போடப்படாமல் உள்ளது. அதேபோல் மேம்பால பணிகளும் அலட்சியமாக நடைபெற்று வருகிறது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மாற்றுவழிப்பாதையும் முன் ஏற்பாடுகள் செய்யப்படாமல் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. மாற்று பாதைகளில் குறுகிய சாலைகள் விரிவாக்கம் செய்யப்படவில்லை. சேதமான சாலைகளும் சீர்செய்யப்படவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.  இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகள் தொடர்ந்து மெதுவாக நடைபெற்று வருகிறது. மாற்றுப்பாதைகளில் பல இடங்களில் சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளன. அப்பகுதிகளில் சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் புழுதி காற்று பறக்கிறது. மழை நேரங்களில் குண்டும் குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் அதில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. அதேபோல் மாற்று பாதைகளில் வழித்தடம் தொடர்பான அறிவிப்பு பலகைகள் இல்லாததால் வாகன ஒட்டிகள் வழிமாறி செல்கின்றனர். அப்பகுதியில் உள்ள சிறிய தெருக்களுக்குள் வழிமாறி செல்லும் லாரிகள், பேருந்துகள் சிக்கி கொள்கின்றன” என்றனர். இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகள் பல்வேறு போக்குவரத்து இடையூறுக்கு மத்தியில் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. தூண்களின் மீது ரேம்ப் வைக்கும் பணிகளின்போது சாலைகள் அடைக்கப்படுகின்றன. சில மணி நேரங்களில் மீண்டும் திறந்து விடப்படுகின்றன. மக்களின் பாதுகாப்பிற்காகவே சாலைகள் அடைக்கப்படுகின்றன. காவல்துறையினரிடம் முன்கூட்டிய தகவலும் தெரிவிக்கப்படுகின்றன. சர்வீஸ் சாலைகள் உடனடியாக போடப்படும். இவ்வாறு அவர் கூறினார்….

The post பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணி மெதுவாக நடக்கிறதா? மாற்றுப்பாதையில் அறிவிப்பு பலகை இல்லை appeared first on Dinakaran.

Tags : Periyanayakanwalayam ,Govay ,Periyanayakanpalayam ,Gove ,
× RELATED பெரியநாயக்கன்பாளையம் அருகே...