×

திருத்தங்கல் மண்டலத்தில் நோய் தாக்குதலை தடுக்க “அபேட்” மருந்து தெளிப்பு பணிகள் தீவிரம்-சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சிவகாசி : சிவகாசி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழைக்கால நோய் தாக்குதலை தடுக்கும் விதமாக திருத்தங்கல் மண்டலத்தில் அபேட்” மருந்து தெளிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.சிவகாசி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. மழை காரணமாக திருத்தங்க்ல் மணடலத்தில் உள்ள 24 வார்டுகளிலும் மழைக்கால நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி சுகாதாரதுறை துவக்கியுள்ளது. ஆண்டுதோறும் அக்., துவங்கி ஜன., இறுதி வரை வடகிழக்கு பருவமழை இருக்கும். இந்த ஆண்டு முன்னதாகவே மழை பெய்து வருகின்றது. விரைவில், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளது. இந்நிலையில், கடந்த சில வாரங்களாக சிவகாசி பகுதியில் காய்ச்சல் பாதிப்பு உயர்ந்து வருகிறது. சிவகாசி, திருத்தங்கல் அரசு மருத்துவமனையில் மட்டுமல்லாமல், தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு பலர் சிகிச்சை பெற்றுள்ளனர்.காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருக்க சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. திருத்தங்கல் மண்டல சுகாதாரதுறை அதிகாரி ஒருவர் கூறும்போது, திருத்தங்கல் மண்டலத்தில் சுமார் 70ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக 24 வார்டுகளிலும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை காலங்களில் டெங்கு, மலேரியா, டைபாய்டு, டயேரியா, ஹெப்படைட்டீஸ் உள்ளிட்ட நோய்கள் தாக்கும். இதை தடுக்க, குடிநீரை தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின்னர் பயன்படுத்த வேண்டும். குழாய்கள் உடைந்து நீர் வெளியேறும் இடங்களில், கழிவுநீர் கலப்பதால், குடிநீர் மூலம் நோய் தொற்று ஏற்படுகிறது. குடிநீரில் குளோரின் கலக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் கைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கிணறு, மேல்நிலைத் தொட்டி கீழ்நிலைத் தொட்டி தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள், கொசுப்புழு புகா வண்ணம் மூடி வைக்க வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மாநகராட்சி சுகாதார நிலையத்திற்குச் சென்று மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை பெற வேண்டும். டயர் பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் சிரட்டை போன்ற தேவையற்ற கொசு உற்பத்தியாகும் பொருட்களை அகற்றும் பணியினை சுகாதார பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். பொது கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள், உணவகங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், கல்வி நிலையங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அவற்றை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றது. வைரஸ் காய்ச்சல் பரவும் இடங்களை கண்டரிந்து மாநகராட்சி சார்பாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. தெருக்களில் தண்ணீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து அங்கு கொசு புழுக்கள் உருவாகாமல் இருக்க மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. அதே போல் வீடுகளுக்கு சென்று அங்கு டிரம், குடம், தண்ணீர் தொட்டிகள் போன்ற இடங்களில் டார்ச் அடித்து கொசு புழுக்கள் உள்ளதா? என தீவிர ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. பின்னர் அதில் அபேட் மருந்து தெளிக்கப்படுகிறது.சுகாதார பணியாளர்கள் கூறும்போது, திருத்தங்கல் மண்டலத்தில் வீடு வீடாக சென்று அபேட் மருந்து தெளிக்கும் போது பொதுமக்கள் சிலர் மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். டெங்கு தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி பணியாளர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். . வீடுகளில் அடியில் இருக்கும் தொட்டி மற்றும் மாடியில் இருக்கும் சின்டெக்ஸ் டேங்க் ஆகியவை மூடி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வீட்டில் இருக்கும் பிரிட்ஜ்களின் பின்புறம் இருக்கும் டிரேயில் தேங்கும் தண்ணீரை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு குறிப்பாக கைக்குழந்தைகளுக்கு முழு உடலையும் மறைக்கும் வகையில் ஆடை அணிவிக்க வேண்டும் என்று கூறினார்.ஐடி கார்டு அவசியம்சமூக ஆர்வலர் மைக்கேல் கூறும்போது, சுகாதார பணியாளர்கள் குடிநீ்ர் சோதனை என்று கூறிக்கொண்டு சிலர் திருட்டு, பெண்களிடம் சீண்டலில் ஈடுபடுவது ஆங்காங்கே நடைபெறுகின்றது. வீட்டிற்குள் வந்து குடிநீரை சோதனை செய்ய வரும் மாநகராட்சி பணியாளர்கள் அவசியம் ஐடி கார்டு அணிந்திருக்க வேண்டும். ஐடி கார்டு இன்றி எந்த வீடுகளுக்கும் பணியாளர்கள் செல்ல அனுமதிக்ககூடாது. ஐடி கார்டு அணிந்திருக்கும் பட்சத்தில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் குடிநீர் சோதனைக்கு எளிதாக அனுமதிப்பார்கள் என்று கூறினார்….

The post திருத்தங்கல் மண்டலத்தில் நோய் தாக்குதலை தடுக்க “அபேட்” மருந்து தெளிப்பு பணிகள் தீவிரம்-சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Shivakasi ,Dinakaran ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...