×

பெட்ரோல் பங்க்குகளில் ‘நோ ஸ்டாக் போர்டு’ சென்னையில் திடீர் டீசல் தட்டுப்பாடு: சாலையில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

சென்னை: சென்னையில் பெரும்பாலான பெட்ரோல் பங்க்குகளில் நேற்று திடீரென டீசல் விநியோகம் தடைபட்டது. சென்னையில் நேற்று மாலை முழுதும் டீசல் பற்றாக்குறை ஏற்பட்டது. எழும்பூர், புரசைவாக்கம், அடையாறு, மணலி உள்பட சென்னையில் பெரும்பாலான பங்க்குகளில் ‘டீசல் நோ ஸ்டாக்’ என்ற போர்டை வைத்துள்ளனர். இதன் காரணமாக வெளியூர் செல்லக்கூடிய பேருந்துகள், வாடகை டாக்ஸி ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள், வெளியூர்களில் இருந்து சென்னை வந்த சுற்றுலா வாகனங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. மேலும் வார விடுமுறையை அடுத்து திங்கட்கிழமையான நேற்று காலை பணிக்கு செல்ல திட்டமிட்டவர்கள் பெட்ரோல் நிலையங்களில் தங்கள் கார்களுக்கு டீசல் போட வந்த நிலையில், அங்கு டீசல் இல்லை என்ற அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தங்களது வாகனங்களை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு பேருந்து மற்றும் நண்பர்களின் பைக்குகளில் அலுவலகம் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதே போன்று ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் வெளியூர் செல்வதற்காக பயணிகளை ஏற்ற திட்டமிட்டிருந்த நிலையில் டீசல் இல்லாத காரணத்தால் வெளியூர் பயணம் தடைபட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.டீசல் தட்டுப்பாடு தொடர்பாக பெட்ரோல் விநியோகஸ்தர்கள் கூறியதாவது: பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களது உற்பத்தியை குறைத்ததன் காரணமாக சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் மணலியில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தில், சுத்திகரிப்பு பணியை 100 சதவீதத்தில் இருந்து 70 சதவீதமாக குறைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு வழங்கியதும் ஒரு காரணம். கச்சா எண்ணெயின் வரத்தும் திடீரென குறைந்துள்ளது. இதனால் தான் சென்னையில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு சிபிசிஎல் நிறுவனம் இந்தியன் ஆயில் மூலம் டீசல் வழங்குகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் டீசல் தட்டுப்பாடு நிலவுகிறது.* பல மணி நேரம் நிற்கும் வாகனங்கள்டீசல் போட வந்த வாகன ஓட்டிகள் கூறுகையில்,‘‘ டீசல் முடியும் தருவாயில் எனது வாகனத்தை ஓரங்கட்டி டீசல் போட வந்தேன். இப்போது டீசல் இல்லை என்கின்றனர். நான் மட்டுமல்ல சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த பஸ் ஒன்று காலை முதலே இந்த பங்க்கில் தான் நிற்கிறது. டீசல் வழங்கினால் தான் இங்கிருந்து எங்களது வாகனங்களை எடுக்க முடியும் என்ற சூழ்நிலையில் நின்று கொண்டிருக்கிறோம். இன்னும் எவ்வளவு நேரம் இங்கு நிற்கப் போகிறோமோ தெரியவில்லை. தொலைபேசி மூலம் விசாரித்து விட்டோம். இந்த பங்க்கில் மட்டுமல்ல அடுத்தடுத்த அனைத்து பங்க்குகளிலும் இதே நிலை தானாம்’’ என்றனர்….

The post பெட்ரோல் பங்க்குகளில் ‘நோ ஸ்டாக் போர்டு’ சென்னையில் திடீர் டீசல் தட்டுப்பாடு: சாலையில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…