×

அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: நெடுஞ்சாலைத் துறை டெண்டர் முறைகேடு புகார் தெரிவித்த அறப்போர் இயக்கத்துக்கு எதிராக ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மானநஷ்ட ஈடு கோரி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது. கடந்த 2016-21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, தலைமை செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறை ஆகியோரிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22ம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது.இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருந்தது. இது தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி, மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கும்படி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேஷ், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அறப்போர் இயக்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகசீலா, ஆதாரங்களின் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறையில் அளித்த புகார்தான் சமூக வலைதளத்தில் பதிவிடப்பட்டது. 2018-19ம் ஆண்டில் போடப்பட்ட  சாலையை மீண்டும் போடுவதற்காக ரூ.276 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. டெண்டர் குறித்த முக்கிய கொள்கை முடிவுகளை எடுத்ததால் எடப்பாடி பழனிசாமி இதற்கு பொறுப்பு ஏற்கவேண்டும் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, திங்கட்கிழமைக்குள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்….

The post அறப்போர் இயக்கத்திற்கு எதிராக எடப்பாடி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு appeared first on Dinakaran.

Tags : Edappadi ,Arapor Movement ,Chennai ,
× RELATED மேற்கு மண்டல அதிமுகவில் உள்கட்சி...