×

தமிழக அரசின் ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் பாலாறு- தென்பெண்ணை இணைப்புக்கான திட்ட மதிப்பீட்டு ஆய்வுப்பணிகள் தீவிரம்: பெரும் எதிர்பார்ப்பில் 5 மாவட்ட மக்கள்

வேலூர்: கைவிடப்பட்ட நிலையில் இருந்த பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டத்தை நிறைவேற்றும் வகையில் ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான ஆய்வுப்பணிகளில் நீர்வள ஆதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. தேசிய நதிநீர் இணைப்புக்கு முன்பாக மாநில நதிகளை இணைப்பதில் அந்தந்த மாநிலங்கள் முனைப்பு காட்டின. அதன்படி, தமிழகத்தில் பாலாறு-தென்பெண்ணை உட்பட மாநில ஆறுகள் இணைப்புத்திட்டம் மாநில நிதி ஆதாரத்திலேயே நிறைவேற்றப்படும் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதற்கு முன்பாகவே ரூ.258 கோடியில் பாலாறு- தென்பெண்ணை- செய்யாறு இணைப்புத்திட்டம் 2008-09ம் ஆண்டு மத்திய நீர்வள ஆதார அமைப்பு அனுமதியுடன் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் 2010ம் ஆண்டு  தொடங்கின.இதற்காக 59.50 கி.மீ தூரத்துக்கு நீர்வழித்தடங்களை மத்திய நீர்வள ஆதார அமைப்பின் பொறியாளர் சித்திக் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். முதலில் மேற்கில் சந்தூர் என்ற கிராமம் வழியாக முதல் இணைப்புக்கான வழித்தடத்தில் கற்களை நட்டனர். பின்னர் கிழக்கில் 5 கி.மீ தூரம் குறைவு, நீர்வழித்தடம் சரிவு காரணங்களால் அத்திசையிலும் கற்களை நட்டனர். இதை எதிர்த்து ஒரு பிரிவு விவசாய சங்கம் ஐகோர்ட்டில் ரிட் மனுத்தாக்கல் செய்தது. இப்பிரச்னையால் பொறியாளர் சித்திக், பாலாறு-தென்பெண்ணை இணைப்புத்திட்ட பைலை கிடப்பில் போட்டார்.அதன்பிறகு, இத்திட்டம் தொடர்பாக அப்போதைய வேலூர் எம்பி அப்துல்ரகுமான் எழுதிய கடிதத்துக்கு, மத்திய நீர்வள ஆதார அமைப்பு, திட்ட அனுமதி கடிதத்தின் நகலை பதிலாக அனுப்பியது. அதில் பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டத்தை 2015ம் ஆண்டுக்குள் சொந்த நிதி ஆதாரத்தில் செய்துகொள்ளும்படி மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.அதன்படி, ஏற்கனவே திட்டஅனுமதி வழங்கப்பட்ட பாலாறு-தென்பெண்ணை திட்டத்துக்கு மீண்டும் திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்காக ரூ.70 லட்சத்தை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது  அன்றைய அதிமுக அரசு. இதற்கு விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், ஒன்றிய அரசு பாலாறு-தென்பெண்ணை இணைப்புக்காக ரூ.648 கோடியை ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டது.இந்நிதியில் மாநில அரசு மத்திய நீர்வள ஆதார அமைப்புடன் இணைந்து திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையிலும் இறங்கியது. இதற்காக வேலூர் அப்துல்லாபுரத்தில் தனி அலுவலகமும் ஏற்படுத்தப்பட்டு நிர்வாக பொறியாளர் ஒருவரும் நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த அலுவலகம் செயல்படவில்லை. அதற்கேற்ப அப்போதைய முதல்வர் பழனிசாமி, தனது கொங்கு மண்டலத்தின் நீண்டகால கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை கையில் எடுத்து முடுக்கிவிட்டார். அதோடு பாலாறு-தென்பெண்ணை இணைப்புத்திட்டம் மீண்டும் கேள்விக்குறியானது. அத்துடன் ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடும் கேள்விக்குறியானது. இந்த நிலையில்தான் பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று அறிவித்ததுடன், அதற்காக நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டார் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். அதன்படி, பாலாறு-தென்பெண்ணை இணைப்பு திட்டத்தை ஆய்வு செய்து திட்ட மதிப்பீட்டை தயாரிக்க ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடுக்கவிடப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இது வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உட்பட 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டம் நிறைவேறினால் பருவமழை சீசனில் தென்பெண்ணையில் வீணாகும் 3.5 டிஎம்சி தண்ணீர் 54 கி.மீ தூரம் அமைக்கப்படும் கால்வாய் மூலம் திருப்பிவிடப்படும். இந்த தண்ணீர் கிருஷ்ணகிரி அணையில் இருந்து நெடுங்கல் அணைக்கும், அங்கிருந்து நாட்றம்பள்ளி கொட்டாறு வழியாக பாலாற்றில் விடப்படும். இதன் மூலம் 9 ஆயிரத்து 850 ஹெக்டர் நிலங்களுக்கு பாசன வசதியும் 1.5 லட்சம் மக்களுக்கு குடிநீரும் சப்ளை செய்யப்படும். அதோடு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம் நகராட்சிகளும் பலனடையும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.மார்கண்டேய நதி பிரச்னை2009ம் ஆண்டுக்கு முன்பே கர்நாடக அரசு தென்பெண்ணையின் நீராதாரமான மார்கண்டேய நதியின் குறுக்கே தடுப்பணை கட்ட முயற்சி மேற்கொண்டது. இதற்கான பேச்சுவார்த்தையும் கர்நாடகத்தில் இருமாநிலங்கள் இடையே நடந்தது. ஆனாலும் கர்நாடகத்தின் பிடிவாதம் காரணமாக அன்றைய திமுக அரசின் முதல்வர் கருணாநிதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் அப்பணியை கர்நாடக அரசு நிறுத்தி வைத்தது.இதைதொடர்ந்து 2013ல் கர்நாடக அரசு மார்கண்டேய நதியின் குறுக்கே தடுப்பணையை கட்ட தொடங்கியது. இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இதுதொடர்பாக கர்நாடகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், திமுக தலைவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசையும் இணைத்துக் கொண்டார். ஆனால் முறையாக இந்த வழக்கில் தனது வாதத்தை தமிழக அரசு எடுத்து வைப்பதில் அக்கறை காட்டவில்லை. இதனால் 2019ம் ஆண்டு கர்நாடகத்துக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டது.அப்போது உச்சநீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் இந்த பிரச்னையில் தமிழகத்தின் பக்கம் நியாயம் இருந்தாலும், அவர்கள் முறையாக தங்கள் வாதத்தை எடுத்து வைக்க தவறியுள்ளனர். ஆனாலும் நடுவர் மன்றத்தை நாடலாம் என்று அறிவுறுத்தினார். இந்த தீர்ப்பின் அடிப்படையில், ஏற்கனவே  பாலாறு-தென்பெண்ணை தொடர்பாக மாநில, ஒன்றிய அரசுகள் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டத்தின் இடைவெளியில் மார்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடகம் அணையை கட்டியும் முடித்துவிட்டது.இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த அணை கட்டுவதற்கான மணலும், ஜல்லியும் என மூலப்பொருட்கள் இங்கிருந்தே சப்ளை செய்யப்பட்டதுதான் வேடிக்கை. அதோடு இந்த  தடுப்பணைக்கான எந்தவித சுற்றுச்சூழல், வனத்துறை என எந்த அனுமதியையும் கர்நாடக அரசு பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தப்பள்ளி அருகே மார்கண்டேய நதியின் குறுக்கே தமிழக அரசு கிடைக்கும் மழைநீரை சேமிக்கும் வகையில் ரூ.3.33 கோடியில் சிறிய தடுப்பணை கட்டுவதற்கான பணியை தொடங்கியுள்ளது….

The post தமிழக அரசின் ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் பாலாறு- தென்பெண்ணை இணைப்புக்கான திட்ட மதிப்பீட்டு ஆய்வுப்பணிகள் தீவிரம்: பெரும் எதிர்பார்ப்பில் 5 மாவட்ட மக்கள் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Balaru- ,Tenpenna ,Palaru- ,Thenpenna ,
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...