×

வாழ்வினில் ஒளி வீசும்!.. ஷீர்டி சாயிபாபாவை குருவாக ஏற்றுக்கொண்டு வழிபட்டுவருவது நல்லது

?என் மகனுக்கு திருமணத்தடை ஏற்பட்டுள்ளது. கல்யாண பத்திரிகை அடித்த நிலையில் பெண் வீட்டார் மறுத்து விட்டனர். தற்போது அந்த பெண்ணுக்குத் திருமணம் ஆகிவிட்டது. என் மகன் மிகவும் மன உளைச்சலில் உள்ளார். திருமணம் எப்போது கைகூடும்? தக்க பரிகாரம் கூறுங்கள்.
 - செல்வி, செம்பனார்கோயில்.

பரணி நட்சத்திரம், மேஷ ராசி, மகரலக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது ராகுதசையில் குருபுக்தி நடந்து வருகிறது. உங்கள் மகனின் ஜாதகத்தில் திருமண வாழ்வைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டில் கேதுவின் அமர்வும் லக்னாதிபதி சனியின் 12ம் இடத்து அமர்வும் திருமணத் தடையினை உண்டாக்கியுள்ளது. அவரது ஜாதக பலத்தின்படி உறவுமுறையில் இருந்தே மணமகள் அமைவார். உங்கள் மகன் பிறந்த திசையில் இருந்து மேற்கு திசையைச் சேர்ந்தவராக இருப்பார். திங்கட்கிழமை தோறும் காலையில் ராகு கால வேளையில் உங்கள் ஊரில் உள்ள செங்கழுநீர் விநாயகர் கோவிலுக்குச் சென்று நான்கு நெய்விளக்குகள் ஏற்றி கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஏழுமுறை சொல்லி வழிபட்டு வாருங்கள். தொடர்ந்து ஏழு வாரங்கள் விடாமல் செய்து வாருங்கள். ஏழாவது வாரம் முடிவடைவதற்குள் மணமகளின் இருப்பிடம் தெரிந்துவிடும். உங்கள் மகனின் ஜாதகத்தின்படி வருகின்ற 17.06.2021க்குள் திருமணம் நிச்சய
மாகிவிடும். கவலை வேண்டாம்
.
“வக்ரதுண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப அவிக்னம் குருமே தேவ ஸர்வ கார்யேஷூ ஸர்வதா”

?எனது மகன் கடன்தொல்லையால் படும் கஷ்டம் சொல்லி மாளாது. எப்போது இந்தத் துன்பம் தீரும்? தந்தையை இழந்த அவனுக்கு வாரிசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்? எல்லாம் நல்லபடியாக நடக்க உரிய பரிகாரம் கூறுங்கள்.
- சேலம் வாசகி.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, கும்ப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி  தற்போது ராகு தசையில் புதன்புக்தி நடந்துவருகிறது. தற்போது ஏழரைச் சனியின் காலம் நடந்துவருவதால் சிறுசிறு சிரமங்கள் இருந்து வருகிறது. அவ்வளவுதான். நீங்கள் பெரிதாக எண்ணி கவலைப்படும் அளவிற்கு அவரது ஜாதகத்தில் தோஷங்கள் ஏதும் பெரிதாக இல்லை. அவருடைய ஜாதகத்தில் உத்யோகத்தைப் பற்றிச் சொல்லும் பத்தாம் வீட்டில் ராகு உச்ச பலம் பெற்றுள்ளதாலும் தற்போது ராகுதசையே நடந்துவருவதாலும் நிச்சயமாக நிரந்தர உத்யோகம் என்பது கிடைத்துவிடும். நீங்கள் எதிர்பார்ப்பது போல வாரிசு அடிப்படையில் அரசு உத்யோகம் கிடைப்பதற்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. 30வது வயதில் திருமணம் நடந்தேறும். சதா கவலைப்பட்டுக் கொண்டிருப்பதை விடுத்து எல்லாம் நல்லபடியாக நடந்து கொண்டிருக்கிறது என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கடன் பிரச்னையில் இருந்து வரும் பிள்ளையை உற்சாகப்படுத்தும் விதமாக ஆறுதலாகப் பேசி வாருங்கள். செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் உள்ள சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று நெய்விளக்கு ஏற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தை ஆறுமுறை சொல்லி வணங்கி வாருங்கள்.
மகனின் வாழ்வில் ஒளிவீசக் காண்பீர்கள்.

“மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம் மனோஹரி தேஹம் மஹச்சித்த கேஹம்
 மஹீதேவ தேவம் மஹாவேதபாவம் மஹாதேவபாலம் பஜே லோகபாலம்”

?எனது குடும்பத்தில் ஒருவரும் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம். வருமானத்திற்கு மேல் செலவு ஆகிறது. குலதெய்வம் எது என்று தெரியவில்லை. முன்னோர் வழிபாடும் செய்ததில்லை. எனது மாமனார் காணாமல்போய் 47 வருடமாகிறது. பிள்ளைகளின் வாழ்விலும் நிம்மதி இல்லை. உரிய பரிகாரம் கூறுங்கள்.
- தங்கம், பாளையங்கோட்டை.

குலதெய்வ வழிபாடும் இல்லை, முன்னோர் வழிபாடும் செய்தது இல்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இந்து மத நம்பிக்கையின்படி இவை இரண்டும் மிகமிக முக்கியமானவை. உங்கள் மாமனார் காணாமல் போய் 47 வருடங்கள் ஆகிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் அனுப்பியிருக்கும் விவரத்தின்படி உங்கள் கணவருக்கே தற்போது 78 வயது முடிந்து 79வது வயது நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நிச்சயமாக உங்கள் மாமனார் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. முதலில் குடும்ப புரோஹிதரின் துணைகொண்டு உங்கள் மாமனாருக்குச் செய்ய வேண்டிய அந்திம கிரியைகளை செய்து முடியுங்கள். ராமேஸ்வரம் போன்ற தீர்த்தக்கரைக்குச் சென்று நாராயணபலி முதலான கர்மாக்களைச் செய்ய வேண்டியது அவசியம். பூராடம் நட்சத்திரம், தனுசுராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகத்தை ஆராயும்போது பகவதி முதலான பெண் தெய்வமே உங்கள் குலதெய்வமாக அமைந்துள்ளது என்பதை அறிய முடிகிறது. கணவரின் குடும்பத்தினருக்கு பூர்வீகம் எது என்பதை அறிந்து அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் பகவதி அம்மனின் ஆலயம் அமைந்திருக்கிறதா என்பதைக் கண்டறிந்து அங்கே சென்று வழிபடுவதற்கு முயற்சியுங்கள். முதலில் முன்னோர் கடனை செய்து முடித்து தொடர்ந்து குலதெய்வ வழிபாட்டிற்கு முயற்சியுங்கள். இவை இரண்டையும் நல்லபடியாக செய்து வந்தாலே குடும்பத்தில் மன நிம்மதியைக் காண இயலும்.

?29 வயதாகும் என் மகளுக்கு இது வரை ஐந்து, ஆறு வரன் வந்து பார்த்து விட்டு போனார்கள். யாரும் எதுவும் பதில் சொல்வது இல்லை. என் மகளுக்கு என்ன காரணத்தால் திருமணத்தடை உண்டாகிறது என்பது தெரியவில்லை. எந்தத் திசையில் இருந்து மாப்பிள்ளை அமையும் என்பதையும் என்ன பரிகாரம் செய்ய
வேண்டும் என்பதையும் சொல்லுங்கள்.
- ராஜேந்திரன், சித்தூர்.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது சனிதசையில் புதன்புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் திருமண வாழ்வினைப்பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி ஆகிய குரு 12ல் அமர்ந்திருப்பதோடு வக்ரகதியினைப் பெற்றிருப்பதால் திருமணம் என்பது தாமதமாகிவருகிறது. உத்யோகம் என்பது அவருக்கு நல்லபடியாக அமைந்துள்ளது. அவர் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு வருங்காலத்தில் அந்நிய தேசம் செல்வதற்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. ஜாதகத்தில் குருவின் பலம் குறைந்திருப்பதால் திருமணத்தில் தடை உண்டாகிறது என்பதைப் புரிந்துகொண்டு குருவருளைப் பெற முயற்சியுங்கள். குடும்பத்திற்கு குலகுருவாக யாரை வைத்திருக்கிறீர்களோ அவரை வழிபட்டு வருவது நல்லது. அப்படி குலகுருவாக யாரையும் வைத்திருப்பதாக தெரியவில்லை என்றால் ஷீர்டி சாயிபாபாவை குருவாக ஏற்றுக்கொண்டு வழிபட்டுவருவது நல்லது. வியாழன்தோறும் அருகிலுள்ள சாயிபாபா கோவிலுக்குச் சென்று மகளை வழிபட்டு வரச் சொல்லுங்கள். ஏதேனும் ஒரு வியாழக்கிழமை நாளில் உங்கள் குடும்ப புரோஹிதரை வீட்டிற்கு வரவழைத்து அவருக்கு வஸ்திரத்துடன் கூடிய தாம்பூலம்
அளித்து நமஸ்கரிக்கச் சொல்லுங்கள். 01.03.2022ற்குள் மகளின் திருமணம் முடிவாகிவிடும்.

?எனது மகனுக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கிறது. எம்.காம். படித்துள்ளான். பயந்த சுபாவம் உள்ளவனாக இருக்கிறான். படிப்பிற்கேற்ற வேலை கிடைக்குமா? தொழில் விஷயமாக தைரியமாக எந்த முடிவும் எடுக்கத் தெரியவில்லை. ஏதேனும் பரிகாரம் இருந்தால் கூறுங்கள்.
- பிச்சைபிள்ளை, சேலம்.

பூராடம் நட்சத்திரம், தனுசுராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது சந்திரதசையில் சுக்கிரபுக்தி நடந்து வருகிறது. ஜென்ம லக்னாதிபதி சுக்கிரன் எட்டில் அமர்ந்திருப்பதும், தைரியத்தைத் தரும் செவ்வாய் தைரிய ஸ்தானம் ஆகிய மூன்றிலேயே நீசம் பெறுவதும் மனோபலம் குறைந்தவராக அவரை மாற்றியுள்ளது. என்றாலும் அவரது ஜாதகத்தில் ஜீவன ஸ்தானம் ஆகிய பத்தாம் வீட்டில் சூரியனும் சனியும் இணைந்திருப்பதால் நிரந்தர உத்யோகம் என்பது கிடைத்துவிடும். சுயதொழில் செய்வதற்கான அம்சம் இவரது ஜாதகத்தில் இல்லாததால் சொந்தமாக தொழில் தொடங்க அவரை வற்புறுத்த வேண்டாம்.

கூட்டுறவுத்துறை, ரேஷன் கடைகள் முதலான பணிகளுக்கு அவர் முயற்சிக்கலாம். ஜீவன ஸ்தானத்திற்கு அதிபதியே சனி என்பதால் தற்காலம் நடந்துவரும் ஏழரைச் சனியின் காலம் முடிவடைவதற்குள் அதாவது 2023ம் ஆண்டின் இறுதிக்குள் அவருக்கு நிரந்தர உத்யோகம் என்பது கிடைத்துவிடும். பிரதி சனிக்கிழமைதோறும் உங்கள் மகனை அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று நந்தியம்பெருமானுக்கு முன்னால் விளக்கேற்றி வைத்து கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 11 முறை சொல்லி வழிபட்டு வரச் சொல்லுங்கள். நந்திகேஸ்வரனின் அருளால் தடை விலகி வாழ்வில் முன்னேற்றம் காண்பார்.
“தத்புருஷாய வித்மஹே சக்ரதுண்டாய தீமஹி
 தந்நோ நந்தி ப்ரசோதயாத்”

Tags : Guru ,Shirdi Sai Baba ,
× RELATED பசுபதீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை