சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி, கடந்த மாதம் 13ம் தேதி மரணமடைந்தார். மாணவியின் தாய் செல்வி அளித்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட 5 பேரும் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, இந்த வழக்கு சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் தற்கொலைக்கு தூண்டியதாக மாற்றி பதிவு செய்யப்பட்டது. தற்போது, சிபிசிஜடி போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது. போலீசார் விசாரணையின்போது, சாட்சிகள் கலைக்கப்படக்கூடாது என்பதற்காகவே பள்ளி தாளாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பள்ளி தாளாளர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு தொடரப்பட்டு, அதில் அவர் விடுதலையாகி உள்ளார். இதே பள்ளியில் ஏற்கனவே இரண்டு தற்கொலை சம்பவம் நடந்துள்ளன. இது பாலியல் வன்கொடுமையோ, கொலையோ இல்லை என்றாலும் அப்படி ஒரு நிகழ்வு நடந்திருந்தால் கொலை வழக்காக மாற்ற தயங்க மாட்டோம் என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர்கள் 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 5 பேரும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்….
The post பள்ளி மாணவி மரண வழக்கில் தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன் appeared first on Dinakaran.