×

புத்தாண்டன்று தரிசிக்க வேங்கடவனின் தலங்கள்

திருமலை வையாவூர்

அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வான்வழியே வந்தபோது இத்தலத்தினால் கவரப்பட்டார். சஞ்சீவி மலையை சற்றே கீழே வைத்துவிட்டு கண் மூடி தியானத்தில் ஆழ்ந்தார். பிறகு அங்கிருந்து புறப்பட முற்பட்டபோது அனுமனால் சஞ்சீவி மலையை தூக்க முடியவில்லை. ஏதோ ஒரு சக்தி அவரை நகரவிடாது தடுத்தது. ‘ஐயனே நான் என்ன செய்ய’ என்று நெஞ்சுருகி ராமனை பிரார்த்தித்தார். அங்கே புன்னகை வெங்கடேசப் பெருமாள் காட்சியளித்தார். இன்றும் நம் பொருட்டு அலர்மேல் மங்கையோடு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் எனும் திருநாமத்தோடு சேவை சாதிக்கிறார். இத்தலம் சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டு - மதுராந்தகம் இடையே ஜி.எஸ்.டி. சாலையின் உட்பகுதியில் படாளம் கூட்டு ரோடிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

கருங்குளம்

தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணிகரையோரமுள்ள தென் திருப்பதிகளுள் ஒன்றாக கருங்குளம் வெங்கடாஜலபதி கோயில் விளங்குகிறது. மூலவர் வெங்கடாஜலபதி தனித்தன்மை வாய்ந்தவர். அழகனான பெருமாள் இங்கு உருவமற்றவராக சந்தனக் கட்டையில் அருவமாக அமர்ந்து ஆட்சி செய்கிறார். இத்தலத்தினை பொறுத்தவரையில் மலையடிவாரத்திலுள்ள மார்த்தாண்டேஸ்வரரை வணங்கி விட்டுத்தான் வெங்கடாஜலபதியை வணங்குகின்றனர். திருநெல்வேலி - திருச்செந்தூர் பிரதான சாலையில் 15வது கிலோ மீட்டரில் கருங்குளம் அமைந்துள்ளது. நெல்லை டவுனிலிருந்து பஸ் வசதி உண்டு.

ஸ்ரீபிரசன்ன வெங்கடாசலபதி  நன்னகரம்

ஸ்ரீதேவி - பூதேவி ஸமேதராக ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதிப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திவ்ய ஸ்தலமாக நன்னகரம் விளங்குகிறது. குலசேகர பாண்டியன் எனும் பெயருடைய பாண்டியன் ஒருவன் அரசாண்ட காலத்தில் கர்க முனிவர் அவனுடைய அரசவைக்கு எழுந்தருளினார். அவன் மனம் குழப்பத்திலும் துயரத்திலும் சூழ்ந்திருந்த காலம் அது. அப்போது கர்க மஹரிஷி, ‘‘உன் மனத்திலிருக்கும் கவலைகளும் துயரங்களும் நீங்குவதற்கு, தென்வாரி வளநாடு சென்று அங்கே திருவேங்கடமுடையானுக்கு ஒரு கோயிலை நிர்மாணிப்பாயாக’’ என்று உத்தரவிட்டார். அவ்வண்ணமே, முனி
வரின் ஆணையைச் சிரத்தில் தரித்துக் குலசேகரன் இவ்வூரிலிருக்கும் திருக்கோயிலை எழுப்பினான். (கர்க்க மஹரிஷியின் கோத்திரத்தில் வந்த முனிவர் ஒருவரையே இங்கு கர்க முனிவர் என்று கூறுகிறார்கள் எனலாம். திருநெல்வேலி - தென்காசியிலிருந்து வழியாக நன்னகரம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாசலபதி கோயில் இருக்குமிடத்தை அடையலாம்.

குணசீலம்

திருச்சிக்கு அருகே குணசீலம் எனும் தலத்தில் மூலவராகவே பிரசன்ன வெங்கடாஜலபதி அருள்கிறார். இங்கும் சுவாமியே பிரதானம் என்பதால் தாயார் சந்நதி இல்லை. ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கோயிலாகும். உற்சவரின் திருநாமம் ஸ்ரீநிவாசப் பெருமாள் ஆகும். ஒவ்வொரு கோயிலிலும் விழாவின்போதுமட்டுமே கருட சேவை சாதிப்பார்கள். ஆனால், இங்கு பிரதி திருவோண நட்சத்திரத்தன்று கருட சேவை சாதிக்கும் நிகழ்வு நடைபெறும். பக்தர்களின் மனக்குறை மட்டுமல்லது மன நோயாளிகள் பூரணமாக நிவர்த்தி பெறஇத்தலத்திற்கு வந்து வழிபடுகின்றனர். திருச்சி சேலம் பாதையில் 24 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது
.
இடர்தீர்த்த பெருமாள் :நாகர்கோவில்

நாகர்கோவில் நகரில் வடிவீஸ்வரம் பகுதியிலுள்ளது இடர்தீர்த்த பெருமாள் கோயில். இங்கு கருவறையில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் அருட்பாலிக்கிறார். முன்னொரு காலத்தில் தென்னகத்தை ஆண்டு வந்த குலோத்துங்க சோழ மன்னன் நாக தோஷத்தால் அவதிப்பட்டு வந்தான். பரிகாரங்கள் பல செய்தும் பலனளிக்கவில்லை. ஆஸ்தான ஜோதிடர் கூறியதற்காக காஞ்சிபுரம் சென்று பெருமாளை தரிசித்து வந்தான். அன்றிரவு அவனது கனவில் திருப்பதி தேவஸ்தானத்தில் நின்றருளும் வேங்கடவன் வந்தார். உனது இடர் தீர்ந்து போகும் இனி அச்சம் வேண்டாம் என்று கூறினார். அதன்படி அவனது இடர் தீர்ந்து போனது. தான் கனவில் கண்ட அதே ரூபத்தில் வேங்கடவனுக்கு சிலை வடிவம் கொடுத்து நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் கோயில் எழுப்பினான். இடரை தீர்த்தவர் என்பதாலே குலோத்துங்க சோழ மன்னன், இத்தல பெருமாளுக்கு இடர் தீர்த்த பெருமாள் என நாமம் இட்டு வணங்கினான்.

ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் :புன்னையடி

மூலவர்: ஸ்ரீனிவாசப்பெருமாள் முன்னொரு காலத்தில் புன்னை மரங்கள் சூழ்ந்த பகுதியில், பசுக்கள் மேய்ந்த தலமாக இருந்துள்ளது. இதனாலேயே இத்தலத்தின் புராணப்பெயர் ‘‘புன்னையடி’ என வழங்கப்பட்டது. பெருமாளுக்கும் புன்னை மரத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலின் தல விருட்சமே புன்னை மரம் தான். அனைத்து பெருமாள் கோயில்களிலும் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் 9ம் நாள் திருவிழாவில் பெருமாள் புன்னைமர வாகனத்தில் தான் தரிசனம் தருவார். எனவே தான் புன்னை வனமாகிய இத்தலத்தில் கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைப்பதாக பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள். இங்குள்ள ஆதிநாராயணர் கோயில் மிகவும் பழமையானது. அதையும் தற்போது புதுப்பித்து பெரிய கோயிலாக கட்டியுள்ளனர். கடலில் பாதி கடம்பா என்பார்கள். இத்தலம் தாமிரபரணி ஆற்றின் கடைசிப்பகுதியில் ஆற்றின் கரையில் முந்திரி சோலை நடுவே மிகவும் ரம்மியமாக அமைந்துள்ளது. திருச்செந்தூரிலிருந்து சாலை வழியாக வனதிருப்பதி என்றழைக்கப்படும் புன்னையடிக்குச் செல்லலாம்.

திருவேங்கடநாதப்பெருமாள் இடையக்கோட்டை

திருவேங்கடநாதப்பெருமாள் தானே வெளிப்பட்ட திருமேனியுடன் (ஸ்வயம்வ்யக்த விக்கிரகம்) வேடசந்தூருக்கு வடமேற்காக 23 கி.மீ. தொலைவிலிருக்கும் இடையக் கோட்டையில் அருள் புரிகிறார். இடையர் குலத்தில் கண்ணனாக அவதரித்த எம்பெருமான், மாடுகள் மேய்த்துக் கொண்டிருந்த இடையர் ஒருவருக்குத் தரிசனம் தந்து பூமியிலிருந்து வெளிப்பட்டார். ஸ்ரீதேவி-
பூதேவியுடன் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார்.வேடசந்தூரிலிருந்து வடமேற்காக 23 கி.மீ தொலைவில் உள்ளது இடையக்கோட்டை.

ஸ்ரீவெங்கடேசப் பெருமாள்  

சிந்துப்பட்டி

விஜயநகர மன்னர்களின் காலத்தில்  கட்டப்பட்ட சிந்துப்பட்டியின் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயில் ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். புளிய மரங்கள் அடர்ந்திருந்த இப்பகுதியில்,
சந்திரகிரி பகுதியிலிருந்து வந்த நாயக்கர்கள் தங்கள் திருவாராதன மூர்த்திகளை (பூஜை செய்து வந்த மூர்த்திகளை) பெருமாள் உத்தரவின்படி பிரதிஷ்டை செய்தார்கள். பெருமாளின் திருநாமம் ஸ்ரீவெங்கடேசன், தாயாரின் திருநாமம் ஸ்ரீஅலர்மேல் மங்கை என்பதாம்.கோயிலின் த்வஜஸ்தம்பத்தில்(கொடி மரத்தில்) அழகர் மலையைப் போல் கருப்பண்ண சுவாமி எனும் காவல் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார். பெருமாள் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கியபடி அருள் புரிகிறார்.வழி: மதுரை - திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி செல்லும் பாதையில் 18 கி.மீ. தொலைவில் சிந்துப்பட்டி அமைந்திருக்கிறது.

ஸ்ரீநிவாசப் பெருமாள் -
திண்டுக்கல் (மலையடிவாரம்)

மூலவர்: ஸ்ரீநிவாசப் பெருமாள் திண்டுக்கல் மலையடிவாரத்தில் அழகிய கோயிலில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார்.அலர்மேல் மங்கைத் தாயார் என ஸ்ரீமகா லட்சுமி தாயார் சந்நதிகள் இருக்கின்றன. திண்டுக்கல் மலையடிவாரத்தில் இருக்கிறது இந்தக்கோயில். திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி மலையடிவாரத்திற்கு உள்ளது.
ஸ்ரீவெங்கடாசலபதி-தலைமலைஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீவெங்கடாசலபதி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இங்கு அருள் புரிகிறார். 850 அடி உயரமுள்ள இந்த, ‘தலைமலை’ எனும் திருமலை சிரகிரி என்று கூறப்படுகிறது. இம்மலையில் பல தெய்வீக மூலிகைகள் மலிந்திருப்பதால் இம்மலையின் முதன்மை கருதியே ‘தலைமலை’ என்று பெயரிட்டனர் போலும். நாமக்கல் மாவட்டத்தில் (செவிந்தப்பட்டி அஞ்சல், தொட்டியம் வழி) முசிறி-நாமக்கல் பாதையில் மணமேடு என்ற கிராமத்தில் வடக்குப் பக்கம் வந்தால், நீலயாம்பட்டி என்னும் ஊர் வருகிறது. நீலயாம்பட்டியிலிருந்து ஒரு மணி நேரம் நடந்து சென்றால் மலையடிவாரத்தை அடையலாம்.

திருவாழ்மார்பன்: திருப்பதிசாரம்

சப்த ரிஷிகள் கூடி யாகம் செய்தனர். அவர்கள் மகா லட்சுமியுடன் மகாவிஷ்ணு காட்சி தரவேண்டினர். அதன் பேரில் மகாலட்சுமியை மார்பில் ஏந்தியபடி மகாவிஷ்ணு காட்சியளித்தார். திருமகளை மார்பில் வாழ வைத்ததாலே இத்தல பெருமாளுக்கு திருவாழ்மார்பன் என்ற நாமம் உண்டாயிற்று. குறுநாட்டுக்காரிமாறன் என்ற சிற்றரசனுக்கும், நாஞ்சில் நாட்டுத் திருவெண்பரிசாரத்திலிருந்த (திருப்பதிசாரம்) திருவாழிமார்ப பிள்ளை மகளான உதயநங்கைக்கும் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது. பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. குழந்தை வரம் வேண்டி கணவன், மனைவி இருவரும் திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு சென்றனர். அங்கே அவர்களுக்கு காட்சியளித்த நம்பியம் பெருமாள்‘‘ கலங்காதே, யாமே உமக்கு மகனாக பிறப்பேன். பருவம் பதினாறு ஆகும் போது நீ உன் மகனை அழைத்துக்கொண்டு ஆழ்வார் திருநகரிக்கு செல்ல வேண்டும் என்றார்.

நம்பி அருளால் உதயநங்கை கருவுற்றாள். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பௌர்ணமி தினத்தில் ஆண் குழந்தை பெற்றெடுத்தாள். அந்தக்குழந்தை தான் நம்மாழ்வார். பெருமாளின் அறிவுறுத்தலின்படி அந்த குழந்தையை ஆழ்வார் திருநகரி அழைத்துச் சென்று புளியமரத்தடியில் நிற்க. நம்மாழ்வார் திடீரென ஞானமுத்திரையுடன் பத்மாசனத்தில் எழுந்தருளினார். நாகர்கோவிலிருந்து 4 கி.மீ தொலைவில் நெல்லை செல்லும் சாலையில் வடக்குப்புறமாக உள்ளடங்கிய ஊர் திருப்பதிசாரம்.

சென்னை - சைதாப்பேட்டை

மேற்கு சைதாப்பேட்டையில் மிகப் பழமையான பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. தாயார் மற்றும் பெருமாளின் திருமேனி பூமியிலிருந்து கிடைத்ததாக கூறுகிறார்கள். மேலும், விஜய நகர மன்னர்களிடம் பணியாற்றிய தேசாய் எனும் பிரிவைச் சேர்ந்தவர்களால் கட்டப்பட்ட ஆலயம் இது. வருடந்தோறும் தமிழ் வருடப் பிறப்பு அன்று பிரம்மோத்சவ விழா தொடங்கி பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. பிரார்த்தனைகள் நிறைவேற பெருமாளுக்கும் தாயாருக்கும் திருமஞ்சனம் செய்து புது வஸ்திரம் சாற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். தாயார் அலர்மேல்மங்கை எனும் திருப்பெயரிலேயே அருள்கிறார். செண்பக மரம் தலவிருட்சமாக விளங்குகிறது.

சின்ன திருப்பதி

தலத்தின் பெயரே சின்ன திருப்பதிதான். தர்மபுரி மாவட்டம் ஓசூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பாகலூர் செல்லும் வழியில் இத்தலம் அமைந்துள்ளது. திருமலை திருப்பதியில் பெருமாள் மலை மீதும் தாயார் திருச்சானூர் தலத்திலும் அருள்பாலிக்கிறார்கள். ஆனால், இத்தலத்தில் மகாலட்சுமி, பத்மாவதி தாயார்களோடு சேர்ந்து சேவை சாதிக்கிறார். இங்கு பெருமாளின் கரம் உயர்த்தி அருள்பாலிக்கும் நிலையில் காட்சி தருகிறார். வைகுண்ட ஏகாதசியை ஒட்டி பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

அப்பன் திருப்பதி

மதுரை அப்பன் திருப்பதி கோவில் என்றே இக்கோயிலை அழைப்பர். மூலவராக ஸ்ரீநிவாசப் பெருமாள் அருள்பாலிக்கிறார். அலர்மேல் மங்கை எனும் திருப்பெயரில் தாயார் அருள்கிறார். சித்திரை திருவிழாவின்போது அழகர்கோவிலிலிருந்து புறப்படும் கள்ளழகர் இத்தல மண்டபத்தில் ஓர் இரவு முழுவதும் தங்கிச் செல்லுவார். கருவறையில் ஸ்ரீநிவாசப் பெருமாள் தன் தேவியருடன் அருள்பாலிக்கிறார். மதுரையிலிருந்து அழகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் அப்பன் திருப்பதி தலம் அமைந்துள்ளது.

ஸ்ரீவெங்கடாசலபதி - வாசுதேவ நல்லூர்

பெருமாள் பெயரிலேயே அமைந்திருக்கும் திருத்தலமாக வாசுதேவநல்லூர் உள்ளது. ஸ்ரீதேவி - பூதேவி ஸமேத ஸ்ரீவெங்கடாசலபதி இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறார்.அலர்மேல்மங்கைத் தாயார் தனிச்சந்நதியில் அருள் புரிகிறார். மதுரை - தென்காசி சாலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் அமைந்திருக்கிறது.

மோகனூர்

காவிரிக் கரையில் அமைந்துள்ள அழகிய தலம் இது. கருவறையில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். நவராத்திரியின்போது திருப்பதியில் ஒருநாள் எனும் உற்சவம் நடைபெறுகிறது. அன்று ஒருநாள்மட்டும் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு நடக்கும் முறையிலேயே அனைத்து பூஜைகளும் நடக்கும். அர்த்தநாரீஸ்வரர் போல கிருஷ்ணனும் ருக்மிணியும் இணைந்த அபூர்வ திருக்கோலத்தை இத்தலத்தில் தரிசிக்கலாம். இந்த அமைப்பை சம்மோஹன கிருஷ்ணன் என்பார்கள். மோகனூர் எனும் தலப்பெயரோடு இதை ஒப்பிட்டுக் கொண்டால் தலத்தின் காரணப் பெயர் எப்படி வந்தது என்று புரியும். புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருள்கிறார். நாமக்கல்லில் இருந்து 18 கி.மீ. தொலைவில் மோகனூர் அமைந்துள்ளது.

சென்னை  -  தரமணி

ஏழுமலயான் கோயில் கொண்ட பல்வேறு தலங்களுள் ஒன்று சென்னை தரமணியில் உள்ளது. சென்னை  - வேளச்சேரியிலிருந்து திருவான்மியூர் செல்லும் பாதையில் பாரதி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்தும், தரமணி பேருந்து நிலையத்திலிருந்தும் 2 கி.மீ தொலைவில், ராஜாஜி தெருவில் அமைந்துள்ளது இத்தலம். ராகவபட்டாச்சாரியார் எனும் வைணவ பெரியவர் திருப்பதி திருமலையிலும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்திலும் பல வருடங்களாக கைங்கரியம் புரிந்து வந்தார். வயதான காலத்தில் அவரால் திருப்பதிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட, ஏழுமலையானைத் தனது இருப்பிடத்திற்கே அழைத்துவர தீர்மானித்தார். உண்மையான பக்தனின் அழைப்பை வேங்கடவன் மறுப்பானா? பெரியவரின் விருப்பப்படியே தரமணியில் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம், 1976ம் ஆண்டு உருவாகியது.

ஆப்பூர்

சிங்கப்பெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஆப்பூர் அமைந்துள்ளது. இங்கு மலைமீது வெங்கடேசப் பெருமாளின் கோயில் அமைந்துள்ளது. ஆச்சரியமாக இத்தல பெருமாளுக்கு பிரார்த்தனையாக புடவை செலுத்தப்படுகிறது. திருமணமாகாதவர்கள் பிரார்த்தனை செய்து கொண்டால் உடனே திருமணம் நடந்து விடுகிறது. பௌர்ணமியன்று பல சித்தர்கள் சூட்சுமமாக இந்தப் பெருமாளை வழிபடுவதாக கூறுகின்றனர்.

கிருஷ்ணாபுரம்

திருநெல்வேலிக்கு அருகேயுள்ள இத்தலம் உலகப் புகழ்பெற்ற சிற்பக் கலைக்கு பிரசித்தி பெற்றதாகும். கலை நுணுக்கங்கள் வாய்ந்த உயிரோவியங்கள் நிறைந்த தலம். 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஆலயமாகும். திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இக்கோயிலிலேயே நேர்த்திக் கடன் செலுத்தலாம். இங்குள்ள சில கற்சிலைகளை தட்டினால் வெண்கல ஓசை ஒலிக்கும். பெருமாள் நின்ற கோலத்தில் வெங்கடாஜலபதியாகக் காட்சியளிக்கிறார். பத்மாவதித் தாயாரும் அருட்காட்சி யளிக்கிறார்கள். நெல்லையிலிருந்து 11 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.  

பாதூர்

ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் விழுப்புரம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் வடபுறமாக பாதூர் கிராமத்தில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வைணவ பஞ்ச (ஐந்து) கிருஷ்ணாரண்ய புண்ணிய பூமியில், புனிதம் நிறைந்த, மகோன்னதமான கருட நதி, சேஷ நதிகளின் தென்புறத்தில் அமைந்துள்ளது பாதூர் திருத்தலம். இந்த ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலையும், பாதூர் கிராமத்தையும் ராஷ்டிரகூட மாமன்னன், மூன்றாவது கிருஷ்ணன் அவர்களால் கி.பி. 964ம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த, சரபோஜிராவிற்கு தரிசனம் தந்த, தன்னை நாடி வந்தவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கிழக்கு பார்த்த வண்ணம் அழகாய் காட்சி தருகிறார்.

தொகுப்பு: கிருஷ்ணா,
இளம்கலைமாறன்.

Tags : Venkatavan ,
× RELATED வேங்கடவனின் வெள்ளக்குளம் அண்ணன்!