×

பாவங்களில் இருந்து விடுவட நரசிம்மர் விரத வழிபாடு முறை

நரசிம்மர் என்பதற்கு ‘ஒளிப்பிழம்பு’ என்று பொருள். திருமால் எடுத்த அவதாரங்களில் உக்கிரமான அவதாரமாக இருப்பினும், பக்தர்கள் அனைவருக்கும் விருப்பமான அவதாரம் இது. நரசிம்ம பெருமாளிடம், பிரகலாதனைப் போல பக்தி கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு பக்தி செலுத்துபவர்களுக்கு வேண்டியதை நிறைவேற்றிக்கொடுப்பார் நரசிம்ம மூர்த்தி. இவரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை விலகும்.

வைகாசி மாதம் வளர்பிறை சதுர்த்தியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி) மாலை அந்திப்பொழுதில் நரசிம்மர் அவதரித்தார். இதுவே நரசிம்ம ஜெயந்தியாகும். நரசிம்மர் அவதரித்த நட்சத்திரமான சுவாதி நட்சத்திரத்தன்று அவரை வழிபடுவது நல்ல பலனை தரும்.

நரசிம்ம ஜெயந்தியன்று பக்தர்கள் அதிகாலை குளித்து வீட்டை சுத்தம் செய்து பூஜையறையில் சுவாமி படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபட வேண்டும். அன்று பகல் முழுவதும் உணவின்றி நீராகாரமாக பருகி, நரசிம்மர் ஸ்தோத்திரம் கூறி வழிபடலாம். அன்று மாலை 4.30 மணி முதல் 7.30 மணிக்குள் வழிபட வேண்டும். விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும் மலர்கள், வஸ்திரம், நைவேத்தியம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டும். செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளை படைக்கலாம்.

அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களால் கிடைத்து வரும் தண்டனையில் இருந்து விடுபட லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும். நரசிம்மரை முழுமையாக சரணடைந்து ‘ஓம் நமோ நாராயணாய’ எனகூறி வழிபட்டால் தாயுள்ளம் படைத்த அவர் தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்க செய்வார். அவரது படத்தை பூஜை அறையில் கிழக்குநோக்கி வைக்க வேண்டும். தினமும் குளித்துவிட்டு நரசிம்மபிரபத்தி ஸ்லோகத்தை 3, 12, 28 என பாராயணம் செய்ய வேண்டும்.

‘நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே, அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’. நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்.

இந்த சுலோகத்தை சொல்லி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்ற வேண்டும். காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த சுலோகம் இது. இதை முறையாக கடைப்பிடித்தால் 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடும். பின்னர் நரசிம்மர் கோவிலுக்கு சென்று, சுவாமிக்கு நெய் தீபம் ஏற்றி துளசி மாலை சாத்தி வழிபட வேண்டும்.

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?