×

சனி பகவான் பரிகார தலங்கள்

பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும் தலங்களை விடுத்து பரவலாக வேறு சில பரிகாரத் தலங்களை கொடுத்துள்ளோம். பக்தர்கள் இத்தலங்களுக்கும் சென்று தரிசித்து பயன் பெறலாம்.

* திருநெல்லிக்காவல்

திருத்துறைப்பூண்டியிலிருந்து திருவாரூர் செல்லும் பாதையில் நால்ரோடு எனும் சந்திப்பில் இறங்கி இத்தலத்தை அடையலாம். இங்கு அருளும் ஈசனை சனிபகவான் வழிபட்டு வரங்கள் பல பெற்றதாக வரலாறு. சனிபகவானால் ஏற்படும் தோஷங்கள் இத்தல ஈசனை வழிபட்டால் விலகும்.  

* இடும்பாவனம்

முத்துப்பேட்டையில் இருந்து வேதாரண்யம் செல்லும் பாதையில் உள்ளது இத்தலம். இங்கும் தாம் மக்களைத் துன்புறுத்தியதால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிக் கொள்ள இத்தலத்து ஈசனை சனி பகவான் வழிபட்டிருக்கிறார். ஆகவே இந்தத் தலமும் சனிதோஷ பரிகாரத் தலமாக வழங்கப்படுகிறது.   

* திருநறையூர்

தஞ்சை மாவட்டம் நாச்சியார் கோயிலில் உள்ள ராமநாதசுவாமி ஆலயத்தில் சனீஸ்வரபகவான் தன் இரு மனைவியரான மந்தா தேவி, ஜேஷ்டா தேவியுடனும், மாந்தன், குளிகன் எனும் இரண்டு மகன்களுடனும் குடும்ப சமேதராய்  மேற்கு திசை நோக்கி தரிசனமளிக்கிறார். மூலவருக்கு இல்லாத கொடிமரமும் பலிபீடமும் சனி பகவானுக்கு உண்டு. காக வாகனத்துடன் காட்சி தரும் இத்தலம் சிறந்த சனிபரிகாரத் தலமாக கூறப்படுகிறது. தசரதர் தனக்கு ஏற்பட்ட தோஷத்தை இத்தல சனி பகவானை வணங்கி போக்கிக் கொண்டதாக ஐதீகம். தந்தை வழிபட்டதால் ராமச்சந்திரமூர்த்தி யும் இத்தலம் வந்து சனி பகவானையும் ஈசனையும் வணங்கினார். அதனால் இத்தல ஈசன் ராமநாதசுவாமி ஆனார்.

* வழுவூர்

சோழ மன்னன் ஒருவர் இப்பகுதியை அரசாண்டபோது சனிபகவானின் சஞ்சாரம் காரணமாக நாட்டில் கடும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த மன்னன் சனிபகவானை நோக்கித் தவமிருந்து நாட்டில் பஞ்சம் வராத வரத்தைப் பெற்றார். அவர் வழிபட்ட சனிபகவான், மேகத்தைத் துளைத்து மழைபொழிய வைத்தாராம். அதை நிரூபிக்கும் வகையில் அவர் கையில் வில்லுடன் அற்புதமாக காட்சி தருகிறார்.

* எட்டியத்தளி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது எட்டியத்தளி. அகத்திய மாமுனிவர் காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு இத்தலம் வந்தார். அதே சமயம் அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் காளிங்கராயன் சனிதோஷம் நீங்க திருநள்ளாற்றுக்கு இந்த வழியே வந்தார். இருவரும் சந்தித்தனர். அஷ்டம சனிக்கு பரிகாரமாக அகஸ்தியர் தான் பூஜித்த அகத்தீஸ்வரருக்கும், அகிலாண்டேஸ்வரிக்கும் அந்த இடத்தில் ஓர் ஆலயம் எழுப்பி வழிபடச் சொன்னார். மேலும் நவகிரகங்களையும் பிரதிஷ்டை செய்யுமாறும் ஈசனின் ஈசான பார்வை சனி பகவான் மீது படும் வண்ணம் அமைக்குமாறும் கூறினார். இத்தலம் சனிதோஷ பரிகாரத் தலமாகத் திகழ்கிறது.
 
* அறையணி நல்லூர்

திருக்கோவிலூரில் பெண்ணையாற்றின் எதிர்க்கரையில் உள்ளது அறையணிநல்லூர். இங்குள்ள பாடல்பெற்ற தலமான அறையணி நாதர் கோயிலின் பிராகாரத்தில் சனிபகவான் காகத்தின் மீது ஒரு காலை வைத்து ஊன்றிய நிலையில் தரிசனமளிக்கிறார்.

* பவானி-கொடுமுடி

ஈரோட்டிலிருந்து 39 கி.மீ தூரத்தில் உள்ள கொடுமுடி மகுடேஸ்வரர் ஆலயத்திலும் சனிபகவான் தனி சந்நதி கொண்டு அருள்கிறார். இந்த இரண்டு தலங்களில் சனி பரிகாரம் செய்து கொள்ளலாம்; சனிபகவான் அருள் கிட்டும்.

* சென்னை பூந்தமல்லி


சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் ஆலயத்தில் சனி பகவான் விசேஷமாக அருள்கிறார். இவரை வழிபட்டால் சனிபாதிப்புகளிலிருந்து, குறிப்பாக நோய் உபாதைகளிலிருந்து தப்பலாம் என்பார்கள்.

* குருமந்தூர்

ஈரோடு மாவட்டம் கோபி வட்டம், குருமந்தூரில் உள்ளது திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம். நாகை மாவட்டம் காரைக்காலில் உள்ள திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனி பகவானுக்குச் செய்வது போலவே எல்லா வழிபாடுகளும் இங்கும் செய்யப்படுகின்றன. இவரும் அனைத்து சனி தோஷங்களையும் தணித்து நல்வாழ்வு மலர அருள்கிறார்.

* கோவியலூர்

விழுப்புரம் அருகே உள்ள கோவியலூர் வாலீஸ்வரர் ஆலயத்தில் சனிபகவான் தனி சந்நதி கொண்டு அருள்கிறார். இவரை வணங்க சனி பாதிப்புகளிலிருந்து நிவாரணம் பெறலாம்.

* சோழவந்தான்

மதுரையிலிருந்து 27 கி.மீ தொலைவிலுள்ள சோழவந்தானிலிருந்து குருவித்துறைக்கு போகும் பாதையில் சுமார் முக்கால் கி.மீ. தொலைவில் சனிபகவான் ஆலயம் உள்ளது. சுமார் 50 வருடங்களுக்கு முன் ஊர்மக்கள் முருகனுக்கு ஆலயம் அமைத்து வழிபட எண்ணினர். அப்போது அவ்வூரில் ஆற்றில் கிடைத்த சுயம்பு சிலையை காஞ்சி மகாமுனி அது சனிபகவான் சிலை என்று அடையாளம் அறிந்து சொல்லி, அந்த ஊரில் நிறுவி வழிபடுமாறு ஆசியளித்தார்.  தனது மேல் வலது, இடது கரங்களில் ஆயுதங்கள் தரித்து கீழ் வலது கரம் அபய ஹஸ்தமாகவும், கீழ் இடது கரத்தில் கதாயுதம் ஏந்தியும், காக வாகனத்துடன் நின்ற நிலையில் தரிசனமளிக்கிறார். இத்தலம் விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பரிகாரத் தலமாக போற்றப்படுகிறது.  

* மொரட்டாண்டி

விழுப்புரம் மாவட்டம் வானூரை அடுத்த மொரட்டாண்டி கிராமத்தில்  27அடி உயர பஞ்சலோக விக்ரகமாய் ஒரு கரத்தில் வில், மறுகரத்தில் அம்பு, மற்ற இரு கரங்கள் அபய, வரத முத்திரையோடு சனிபகவான் அருள்கிறார். சனிபகவானுக்கு எதிரே 54 அடி உயர விநாயகர், 12 ராசிகளையும் தன்னுடலில் கொண்டு நிறுவப்பட்டுள்ளார். இந்த அமைப்பு சனிபகவானின் உக்ரத்தைத் தணிக்கும் வகையில் உள்ளது.

* அருங்குளம்

திருவள்ளூர் - திருத்தணி வழித்தடத்தில் திருவள்ளூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது அருங்குளம். இங்கு அருளும் அகத்தீசர், சனிபகவானால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வணங்கப்பட்டவர். இவரை தரிசித்தால் சனிபாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என சனிபகவானே ஈசனிடம் வரம் பெற்றதாக ஐதீகம்.

* ஸ்ரீவைகுண்டம்

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஸ்ரீவைகுண்டம் உள்ளது. இதில் நவகைலாயங்களில் ஒன்றான கைலாசநாதர் ஆலயம் உள்ளது. சனிபகவானின் அம்சமாக ஈசன் அருளும் இத்தலத்திற்கு வந்து ஈசனை வழிபட, சனிபகவானால் ஏற்படும் திருமண தடைகள் விலக, மனம்போல மாங்கல்யம் கிடைக்கிறது.  இழந்த சொத்துகளும் இந்த இறைவன் அருளால் திரும்பக் கிடைப்பதாகச் சொல்கிறார்கள்.

* ஸ்ரீவாஞ்சியம்

கும்பகோணம் - நன்னிலம் - திருவாரூர் வழியில் இத்தலம் உள்ளது. காசிக்கு நிகரான இத்தலத்தில் குப்த கங்கையில் நீராடி, எம தீர்த்தத்திலும் நீராடி, இங்கு அருளும் ஈசனையும் அம்பிகையையும் வழிபட்டார் சனிபகவான். மூல இறைவர்களைத் தவிர, இங்கு அருளும் யமதர்ம ராஜனையும் வணங்கினால், சனிபகவானின் அருள் நமக்குக் கிட்டும்.

Tags : Saturn ,
× RELATED சனி பிரதோஷ வழிபாடு