திருத்தணி: இறப்பு சான்று வழங்க பணம் பெற்ற வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். திருத்தணி அடுத்த சீனிவாசபுரம் கிராமத்தில் வசிப்பவர் வினோத்குமார். இவர், தாத்தா கோவிந்த ரெட்டி மற்றும் மாமா கஜேந்திரன் ஆகியோருடைய இறப்புச் சான்று கேட்டு கடந்த பிப்ரவரி மாதம் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்துள்ளார். அப்போதைய வருவாய் ஆய்வாளர் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மீண்டும் மே மாதம் மனு செய்துள்ளார். அந்த மனுவும் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 10 தினங்களுக்கு முன்பு வினோத்குமார் இருவருக்கும் இறப்புச் சான்று கேட்டு மனு செய்துள்ளார். இதனை தொடர்ந்து திருத்தணி வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமியை அணுகி தாமத இறப்புச் சான்று பதிவை பரிந்துரை செய்ய கேட்டுள்ளார். அப்போது அவர் பரிந்துரை செய்வதற்கு ரூ.2500 கேட்டுள்ளார். இதை தர விரும்பாத வினோத்குமார் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வனிடம் இதுகுறித்து புகார் செய்துள்ளார். பின்னர் அவர் தலைமையில் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் நேற்று காலை 10.30 அளவில் திருத்தணி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாறுவேடத்தில் காத்து இருந்தனர். அப்போது அலுவலகத்திற்கு வந்த வருவாய் ஆய்வாளரிடம் தன்னிடம் ரூ.2000 மட்டுமே இருப்பதாக கூறி வினோத்குமார் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் உள்ளே புகுந்து வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமியை கைது செய்தனர். …
The post இறப்புச் சான்று வழங்க ரூ.2000 வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது; லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி appeared first on Dinakaran.