×

அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

292. பவநாய நமஹ (Pavanaaya namaha)
(விடுபட்ட இந்த நாமத்தை இங்கு
தருகின்றோம்)

காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாளின் கருவறைக்குப் பின்புறம் உள்ள மண்டபத்தைக் கச்சிவாய்த்தான் மண்டபம் என்று சொல்வார்கள். உற்சவர் வரதராஜப் பெருமாள் அந்தக் கச்சிவாய்த்தான் மண்டபத்தில் இருந்தபடி தான் திருக்கச்சி நம்பிகளோடு பேசுவது வழக்கம். அது மட்டுமின்றி, காஞ்சிபுரத்தில் வாழ்ந்த நடாதூர் அம்மாள் என்ற மகான், தினந்தோறும் அந்தக் கச்சிவாய்த்தான் மண்டபத்தில் அமர்ந்து கொண்டுதான் தமது சீடர்களுக்கு ராமாநுஜருடைய ஸ்ரீபாஷ்யத்துக்கான விளக்கவுரையை உபதேசம் செய்தார்.

ஒருநாள் நடாதூர் அம்மாள் தமது சீடர்களுக்கு ஸ்ரீபாஷ்யத்தை விளக்கிக் கொண்டிருக்கையில், சுவேதச்வதர உபநிஷத்தில் இருந்து ஒரு மேற்கோள் காட்டினார். அந்த உபநிஷத் இறைவனைப் பற்றிக் குறிப்பிடும் போது, “ஜவனோ க்ருஹீதா” என்கிறது. “இத் தொடருக்கு உங்களில் யாரேனும் ஒருவர் பொருளுரைக்க முடியுமா?” என்று தமது சீடர்களிடம் கேட்டார் நடாதூர் அம்மாள். “க்ருஹீதா என்றால் ‘சென்றடைபவர்’ என்று பொருள். ஜவன: என்றால் ‘வேகமாக’. ‘ஜவனோ க்ருஹீதா’ என்றால் ‘இறைவன் வேகமாகப் பயணிக்கிறார்’ என்று பொருள் கொள்ளலாமா?” என்று பணிவுடன் ஒரு சீடர் கேட்டார்.

“உங்கள் பதிலில் தவறில்லை, ஆனால் அதைச் சற்றே ஆராய வேண்டியிருக்கிறது!” என்று சொன்ன நடாதூர் அம்மாள், “ஜவனோ க்ருஹீதா - இறைவன் வேகமாகப் பயணிக்கிறான் என்றால், எவ்வளவு வேகமாகப் பயணிப்பான்?” என்று சீடர்களிடம் கேட்டார். சீடர்கள், “மிகுந்த வேகத்துடன் இறைவன் பயணிப்பான்!”

என்றார்கள். “மிகுந்த வேகம் என்றால் எவ்வளவு? அளவு சொல்லுங்கள்!” என்று கேட்டார் நடாதூர் அம்மாள்.
“இறைவனின் வேகத்துக்கு அளவு ஏது? இறைவனின் வேகம் முடிவிலி (infinity) ஆயிற்றே!” என்றார்கள் சீடர்கள். “மணிக்கு நாற்பது மைல் வேகத்தில் (40 miles-hr) பயணிப்பவர், நானூறு மைல்களைக் கடக்க எவ்வளவு நேரமாகும்?” என்று கேட்டார் நடாதூர் அம்மாள்.
பயணிக்கும் நேரம் = பயணிக்கும் தூரம் - பயணிக்கும் வேகம்

time = distance - speed
அதாவது, பயணிக்கும் தூரத்தைப் பயணிக்கும் வேகத்தால் வகுத்தால், பயணிக்கும் நேரத்தைக் கணக்கிடலாம் என்கிற சூத்திரத்தை நாம் அனைவரும் அறிவோம் அல்லவா?

அந்த ரீதியில் ஒரு சீடர், “மணிக்கு நாற்பது
மைல் வேகத்தில் பயணிப்பவர், நானூறு மைல்
களைப் பத்து மணிநேரத்தில் கடப்பார்!” என்றார். “அப்படியானால் அளவற்ற வேகத்தில் (infinite speed) பயணிக்கும் இறைவன் நானூறு மைல்
களைக் கடக்க எவ்வளவு காலமாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். இதே சூத்திரத்தில் இறை
வனின் வேகத்தைப் பொருத்திப் பார்த்தால்,
நேரம் = {தூரம் - இறைவனின் வேகம்,
முடிவிலி, infinity} = 0

எந்த எண்ணை முடிவிலியால் (infinity-ஆல்) வகுத்தாலும் பூஜ்ஜியம் தான் வரும். எனவே எத்தனை தூரம் இறைவன்
பயணித்தாலும் அதற்கு அவன் எடுத்துக் கொள்ளும் காலம் என்பது பூஜ்ஜியமே, அதாவது ஒருநொடி கூட அவன் எடுத்துக் கொள்வதில்லை!” என்றார் நடாதூர் அம்மாள்.

“மேலும், ‘அ’ என்ற புள்ளியில் இருந்து ‘ஆ’ என்ற புள்ளிக்குச் செல்ல ஒருவன் காலமே எடுத்துக் கொள்வதில்லை என்றால் என்ன பொருள்?” என்று கேட்டார் நடாதூர் அம்மாள். “அந்த இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் அவர் இருக்கிறார் என்றுதான் பொருள்!” என்றார்கள் சீடர்கள். “மிகச்சரியாகச் சொன்னீர்கள்!” என்று சொன்ன நடாதூர் அம்மாள், “இறைவன் ஒரே நேரத்தில் எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கிறார். அதனால்தான் எந்த இடத்தில் இருந்து வேறு எந்த இடத்துக்குச் செல்வதானாலும் அதற்கு அவர் ஒரு நொடிப் பொழுது கூட கால அவகாசம் எடுத்துக்கொள்வதில்லை. அதனால் தான் இறைவனின் வேகத்தை முடிவிலி (infinity) என்று வேதம் சொல்கிறது!” என்று விளக்கினார் நடாதூர் அம்மாள்.

எனவே ‘ஜவனோ க்ருஹீதா’ - ‘இறைவன் வேகமாகப் பயணிக்கிறான்’ என்ற வேத வாக்கியத்தை, இறைவன் எங்கும் நிறைந்தவன் என்ற ரீதியில் புரிந்துகொள்ள வேண்டும் என்பது பெரியோர்கள் காட்டிய வழி. எங்கும் நிறைந்திருப்பதால், நினைத்த இடத்துக்கு நினைத்த போது நினைத்த வழியில் பயணிக்க வல்லவன் இறைவன்.

‘பவி’ என்றால் பயணித்தல் என்று பொருள். நினைத்த இடங்களுக்கெல்லாம் நொடிப் பொழுது காலமும் எடுத்துக் கொள்ளாது பயணிக்க வல்லவராகத் திருமால் திகழ்வதால் ‘பவன:’ என்று அழைக்கப்படுகிறார். (காற்றும் எல்லா இடத்துக்கும் பயணிக்க வல்லதாக இருப்பதால் தான், காற்றுக்கும் ‘பவன:’ என்று வடமொழியில் பெயர்.) ‘பவன:’ என்றால் எங்கும் எப்போதும் பயணிப்பவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 292-வது திருநாமம்.
“பவனாய நமஹ” என்று தினமும் சொல்லி வருவோர் மேற்கொள்ளும் பயணங்கள் அனைத்தும் வெற்றி காணும்படித் திருமால் அருள்புரிவார்.

301. யுகாதிக்ருதே நமஹ (Yugaadhikruthe namaha)

(‘யுகாதிக்ருத்’ என்ற 301-வது திருநாமம் தொடங்கி, ‘வ்ருஷ:’ என்ற 314-வது திருநாமம் வரை உள்ள பதினான்கு திருநாமங்கள், ஊழிக் காலத்தில் ஆலிலைக் கண்ணனாகத் திருமால் அவதாரம் செய்த வரலாற்றைச் சொல்கின்றன)
கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் ஆகிய  நான்கு யுகங்கள் சேர்ந்தது தான் ஒரு சதுர்யுகம். நாம் இப்போது வாழும் காலத்துக்கு முந்தைய காலச் சுழற்சியில், ஆயிரம் சதுர்யுகங்களின் முடிவில் பிரளய காலம் எனப்படும் ஊழிக் காலம் வந்த போது, உலகங்கள் யாவும் ஊழிக் கடலாலே சூழப்பட்டு இருந்தன.

 அந்த ஊழிக் கடலின் வெள்ளத்தில் அனைத்து உயிர்களும் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அந்நிலையில் அனைத்து உயிர்களையும் ஊழி வெள்ளத்தில் இருந்து காக்க நினைத்தார் திருமால். அதற்காக ஓர் அவதாரமும் செய்தார்.

அந்த ஊழிக்கடலில் ஓர் ஆலமர இலை மிதந்து வந்தது. அந்த ஆலிலையில் குழந்தை கண்ணனாகத் தோன்றினார் திருமால். உயிர்களை ஊழிப் பேரலையில் இருந்து காப்பதற்காக,
“பார் எழு கடல் எழு மலை எழுமாய்
சீர்கெழும் இவ்வுலகு ஏழும் எல்லாம்
ஆர்கெழு வயிற்றினில் அடக்கி நின்று அங்கு
ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே!”

என்று திருமங்கை ஆழ்வார் பாடியதற்கேற்ப, அனைத்து உலகங்களையும் உயிர்களையும் விழுங்கினார் ஆலிலைக் கண்ணனாக வந்த திருமால். விழுங்கிய உலகங்களையும் உயிர்களையும் தனது வயிற்றில் வைத்துக் காப்பாற்றினார். அனைத்து உயிர்களும் ஊழிக்காலம் முழுவதும் ஜடப் பொருட்களைப் போலத் திருமாலது வயிற்றினுள்ளே இருந்தார்கள்.

இப்படி உலகங்களையும் உயிர்களையும் ஊழிக் காலத்தில் திருமால் தனது வயிற்றில் வைத்துக் காத்து வந்த நிலையில், மகாலட்சுமி திருமாலிடம், “சுவாமி! நம் குழந்தைகளான இந்த உயிர்களை எல்லாம் இப்படியே ஜட நிலையில் நீங்கள் வைத்திருக்கலாமா? ஜட நிலையில் அவர்கள் இருந்தால், அவர்களால் எப்படி முக்தி அடையமுடியும்? அவர்களால் எப்படி இறைவனான உங்களை உணர முடியும்?” என்று கேட்டாள்.

அதற்குத் திருமால், “ஊழி வெள்ளத்தில் இவர்கள் சிக்கித் தவிக்காமல் இருப்பதற்காகத் தான் என் வயிற்றில் வைத்து அனைவரையும் காத்து வருகிறேன்! நான் அவ்வாறு காக்காமல் இருந்திருந்தால், பிரளய வெள்ளத்தில் இவர்கள் சிக்கித் தவித்திருப்பார்களே!” என்றார்.

திருமகளோ, “அதெல்லாம் சரிதான் சுவாமி! இப்போது ஊழிக்காலம் முடிந்து விட்டதே! இனியும் ஏன் அவர்களை உங்கள் வயிற்றுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும்? நீங்கள் உண்ட உலகத்தை வெளியே விடுங்கள். ஜட நிலையில் இருக்கும் நம் குழந்தைகளுக்குக் கரண களேபரங்களைக் கொடுங்கள்! அவர்களுக்கு அறிவு விரிவடையும்படி அருள்புரியுங்கள்! அவர்களுக்கு நல்வழி காட்டுவதற்கு ஏதுவாக வேத சாஸ்திரங்களைக் கொடுங்கள்! அவர்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்து காட்டுவதற்கு முனிவர்கள், ஞானியர்கள், பக்தர்கள் போன்ற சான்றோர்களையும் பூமிக்கு அனுப்பி வையுங்கள்! இப்போது ஜடநிலையில் இருக்கும் நம் குழந்தைகளுக்கு அறிவு விரிவடைந்தால், அந்த அறிவைக் கொண்டு அவர்கள் வேத நூல்களின் தாத்பரியத்தை உணர்வார்கள். சான்றோர்கள் காட்டிய வழியைப் பின்பற்றி நடப்பார்கள்.

இறுதியில் உங்களது திருவடிகளைச் சரணடைந்து முக்தி அடைவார்கள்! ஆகையால் இப்போது நீங்கள் உலகை மீண்டும் படைக்க வேண்டும்! நம் குழந்தைகளுக்கு அறிவைத் தர வேண்டும்!” என்று கூறினாள்.மிகப்பெரும் பேறான முக்தியை ஒவ்வொரு உயிரும் பெற வேண்டும் என்று கருதிய திருமால், திருமகளின் கூற்றை அப்படியே ஏற்றார். தன் வயிற்றினுள் வைத்துக் காத்து வந்த உலகை வெளிக்கொணர்ந்தார். தனது உந்தித் தாமரையில் பிரம்மாவைப் படைத்தார். பிரம்மாவின் மூலம் மற்ற உயிர்களை எல்லாம் படைத்தார். நான்கு யுகங்களுள் முதல் யுகமான கிருத யுகத்தைப் பூமியில் தொடங்கிவைத்தார் திருமால்.

[புதிதாக உயிர்களைத் (ஜீவாத்மாக்களை) திருமால் உருவாக்கவில்லை. ஏற்கனவே ஊழிக் காலத்தில் ஜடப்பொருட்களைப் போலத் திருமாலிடம் ஒன்றியிருந்த அந்த உயிர்களுக்கு ஜீவாத்மாக்களுக்கு, அவர்களது முன்வினைகளுக்கு ஏற்ப உடல்களையும் அறிவையும் தந்தார் திருமால். அதன் விளைவாகவே, மீண்டும் உலகில் இத்தனை உயிர்கள் உருவானார்கள்.]

‘யுகாதி’ என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். ‘க்ருத்’ என்றால் உருவாக்குபவர் என்று பொருள். ஆயிரம் சதுர்யுகங்களின் முடிவில், ஊழிக்காலத்தில், ஆலிலைக் கண்ணனாக அனைத்துலகங்களையும் உண்ட திருமால், உலகைப் படைக்கும் காலம் வரும்போது, தான் உண்ட உலகங்களை வெளிப்படுத்தி மீண்டும் யுகங்களின் சுழற்சியைத் தொடங்கி வைக்கிறார். எனவே தான் திருமால் ‘யுகாதிக்ருத்’ என்றழைக்கப்படுகிறார். ‘யுகாதிக்ருத்’ என்றால் யுகங்களை உலகில் மீண்டும் தொடங்கி வைப்பவர் என்று பொருள். அதுவே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் 301-வது திருநாமம்.
நல்லதொரு தொடக்கம் பாதி வெற்றிக்குச் சமம். “யுகாதிக்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் செய்யும் அனைத்துச் செயல்களுக்கும் நல்ல தொடக்கம் ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.

302. யுகாவர்த்தாய நமஹ (Yugaavarthaaya namaha)

(திருநாமங்கள் 301 முதல் 314 வரை - ஆலிலைக் கண்ணன் பெருமைகள்)

கலியுகம் தொடங்குவதற்கு முன், சில முனிவர்கள் ஒன்று கூடி வேத வியாசரின் ஆசிரமத்துக்குச் சென்றார்கள். வியாசரை அடிபணிந்த அம்முனிவர்கள், “சற்று முன் தேவ லோகத்தில் மிகச்சிறப்பான ஒரு யாகம் நடப்பதைக் கண்டோம். ஆனால் இப்போது பூலோகத்தில் துவாபர யுகம் முடிந்து கலியுகம் வரப்போகிறது! கலியுகத்தில் பூமியில் வேள்விகள் நடக்க வாய்ப்பு இருப்பது போல் தோன்றவில்லையே! அதனால் தான் மனம் வருந்தி, இதற்கான தீர்வு காண உங்களைத் தேடி வந்தோம்!” என்று சொன்னார்கள்.

வேத வியாசர், “முதலில் வேள்விகளை எதற்குச் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்!” என்றார். “வேதங்களில் சொல்லப்பட்ட விதிகளின்படி வேள்விகளைச் செய்தால், அதனால் இறைவனுக்கு மனமகிழ்ச்சி ஏற்படும். இறைவனின் அருளைப் பெறலாம். ஆனால் வரப்போகும் கலியுகத்தில் இத்தகைய வேள்விகளைச் செய்யக்கூடிய ஞானமோ, சக்தியோ, திறமையோ மக்களுக்கு இருக்காது என்றே நாங்கள் கருதுகிறோம்! எனவே அவர்களால் இறை அருளைப் பெற முடியாமல் போய் விடுமோ என்ற ஏக்கம் எங்கள் மனதில் எழுகிறது. அதனால் தான் இந்தச் சிக்கலுக்கான தீர்வைத் தேடி உங்களிடம் வந்துள்ளோம்!” என்றார்கள் முனிவர்கள்.

வியாசரோ, “நீங்கள் சொன்னது சரி. இறைவனை மகிழ்விக்கத் தான் வேள்விகள் செய்யப்படுகின்றன. கலியுகத்தில் வரப்போகும் மக்களில் வேள்வி செய்யும் ஞானமும் திறமையும் பெற்றவர்கள் சிலர் இருந்தாலும், பெரும்பாலான மக்களால் இவ்வேள்விகளைச் செய்ய இயலாது. அப்படியானால் அவர்கள் இறையருளைப் பெற என்ன வழி? ஓர் எளிமையான வழியை எனது தந்தையான பராசர முனிவர் கூறியுள்ளார்:

“த்யாயன் க்ருதே யஜன் யஞ்ஜை: த்ரேதாயாம் த்வாபரே அர்ச்சயன்யத் ஆப்னோதி தத் ஆப்னோதி கலௌ ஸங்கீர்த்ய கேசவம்”
கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களுக்கும் வெவ்வேறு தருமங்கள் உள்ளன. முதல் யுகமான கிருத யுகத்தில் தவம் புரிந்தால் இறைவனை மகிழ்வித்து அவன் அருளைப் பெறலாம். இரண்டாம் யுகமான திரேதா யுகத்தில் யாகங்கள் செய்து இறைவனை மகிழ்வித்து அவனருளைப் பெறலாம்.

மூன்றாம் யுகமான துவாபர யுகத்தில் அர்ச்சனை, பூஜைகள் செய்து இறையருளைப் பெறலாம். ஆனால், கிருத யுகத்தில் தவம் புரிந்தவனும், திரேதா யுகத்தில் யாகம் செய்தவனும், துவாபர யுகத்தில் பூஜைகள் செய்தவனும் பெறும் அதே பலனைக் கலியுகத்தில் இறைவனின் திருநாமங்களைப் பாடுவதால் மிக எளிமையாகப் பெற்று விடலாம்! எனவே கலியுகத்தில் நாம சங்கீர்த்தனமே இறைவனை எளிதில் மகிழ்விக்கும்
சாதனமாகும். அதுவே இறையருளைப் பெறுவதற்கான வழியுமாகும்!” என்றார்.

“வேத வியாசரே! மக்கள் இறையருளைப் பெற நல்ல வழி காட்டியமைக்கு மிக்க நன்றி! ஆனால் இனியும் உலகில் தவமோ, யாகமோ செய்ய இயலாதா?” என்று முனிவர்கள் கேட்க, “கலியுகத்தில் ஞானமும் திறமையும் கொண்ட சிலரால் மட்டுமே யாகம் செய்ய முடியும். அனைவராலும் அதை செய்ய முடியாது தான். எனினும், கலியுகம் நிறைவடைந்தவுடன் மீண்டும் கிருத யுகம் வரும். அந்தக் கிருதயுகத்தில் வாழும் மக்களுக்குத் தவம், யாகம் போன்றவற்றைச் செய்யும் ஞானமும் திறமையும் இருக்கும்!” என்றார் வியாசர்.

“ஒவ்வொரு யுகத்துக்கும் ஒவ்வொரு தருமம் இருப்பதாகச் சொல்கிறீர்களே! இந்தத் தருமங்கள் அந்தந்த யுகத்துக்கு ஏற்றபடிச் சரியாக நிலைத்து நிற்குமா? கிருதயுகத்தில் மீண்டும் தவமும் வேள்வியும் செய்யும் ஆற்றல் மக்களுக்குக் கிட்டுமா?” என்று கேட்டார்கள் முனிவர்கள்.

“ஊழிக்காலத்தில் ஆலிலைக் கண்ணனாக வந்து உலகங்களையும் உயிர்களையும் எல்லாம் உண்டு தன் வயிற்றில் வைத்துக் காக்கிறார் திருமால். அந்நேரத்தில் அந்த உலகங்களோடும் உயிர்களோடும் சேர்த்து அவர்களுக்குரிய தருமங்களையும் திருமால் காக்கிறார். மீண்டும் உலகத்தைப் படைக்கும் போது முன்பிருந்த அதே தருமங்கள் மீண்டும் உலகில் தொடரும்படிச் செய்கிறார். கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களின் சுழற்சியையும் திருமாலே உண்டாக்குகிறார்.

அவ்வாறு அந்த யுகங்கள் சுழற்சி முறையில் வரும் போது, அந்தந்த யுகங்களுக்குரிய தருமங்களும் அந்த யுகங்களோடு சேர்ந்து சுழல்வதை உறுதி செய்கிறார் திருமால். எனவே அவரது கட்டுப்பாட்டின்கீழ் யுகங்களும் அவற்றுக்குரிய தருமங்களும் சரியான முறையில் நிலையாகச் சுழன்றுகொண்டே இருக்கும்! எனவே அடுத்து வரும் கலியுகத்தில் அதற்குரிய தருமமான நாம சங்கீர்த்தனத்தால் இறையருளைப் பெறலாம். மீண்டும் கிருதயுகம் வரும்போது நீங்கள் விரும்பிய படி உலகெங்கும் வேள்விகள் நடைபெறும்! நிம்மதியாகச் சென்று வாருங்கள்!” என்று முனிவர்களை அனுப்பிவைத்தார் வியாசர்.

‘ஆவர்த்த’ என்றால் சுழற்சி என்று பொருள். ‘யுக’ என்பது நான்கு யுகங்களைக் குறிக்கிறது. ‘யுகாவர்த்த:’ என்றால் யுகங்களைச் சுழற்றுபவர் என்று பொருள். யுகங்களோடு சேர்த்து, அவற்றுக்குரிய தருமங்களையும் சுழலச் செய்வதால், ‘யுகாவர்த்த:’ என்று திருமால் அழைக்கப்படு
கிறார். அதுவே விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் 302-வது திருநாமம்.

“யுகாவர்த்தாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு வாழ்க்கையில் பல புதிய, நல்ல திருப்பங்கள் ஏற்படும்படித் திருமால் அருள்புரிவார்.

303. நைகமாயாய நமஹ (Naikamaayaaya namaha)

(திருநாமங்கள் 301 முதல் 314 வரை - ஆலிலைக் கண்ணன் பெருமைகள்)
“மணந்தால் கண்ணனைத் தான் மணந்து கொள்வேன்!” என்று தீர்மானமாக இருந்த ஆண்டாளிடம், அவளது தோழிகள், “கோதையே! திருமாலை மணப்பது எப்படி சாத்தியமாகும்?” என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டாள், “திருமால் ராமனாக அவதரித்தபோது, சீதை அவரை மணக்கவில்லையா? கண்ணனாக அவதரித்த போது, ருக்மிணியும் நப்பின்னையும் அவரை மணக்கவில்லையா? அதுபோல் நானும் திருமாலை மணந்துகொள்வேன்!” என்றாள்.

தோழிகள், “அப்போது ராமன், கண்ணன் போன்ற வடிவங்களோடு திருமால் பூமியில் அவதரித்திருந்தார். ஆனால் இப்போது அப்படிப்பட்ட அவதாரங்கள் எதையும் திருமால் எடுக்கவில்லையே!” என்று ஆண்டாளிடம் கூறினார்கள். ஆனால் ஆண்டாளோ, “ராமன், கண்ணன் போன்ற அவதாரக் காலங்களிலாவது ஒரு வடிவத்தோடுதான் திருமால் பூமியில் காட்சி தந்தார். இப்போது எத்தனையோ திருக்கோவில்களில் விக்கிரக வடிவில் பற்பல வடிவங்களோடு காட்சி தருகிறாரே!

அவ்வாறு திருக்கோவில்களில் எழுந்தருளி இருக்கும் எம்பெருமான்களுள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து நான் மணப்பேன்!” என்றாள் ஆண்டாள்.
ஆனால் தோழிகளோ, “ராமன், கண்ணன் போன்ற அவதாரங்களுக்கு விபவ அவதாரங்கள் என்று பெயர். அந்நிலையில் இறைவன் நம்மைப் போல் ஒருவராக நம்முடன் கலந்து பேசி உறவாடுவார். ஆனால் கோவில்களில் உள்ள இறைவனின் நிலைக்கு அர்ச்சாவதாரம் என்று பெயர். அவர் பேச மாட்டார், அசைய மாட்டார். அவர் எப்படி உன்னை மணப்பார்?” என்று ஆண்டாளிடம் கேட்டார்கள்.

அதற்கு ஆண்டாள், “கோவிலில் உள்ள இறைவன் அசைய மாட்டார் என்றும் பேச மாட்டார் என்றும் யார் சொன்னது? நம் பக்திக்கு அசைவார் பக்தர்களுடன் பேசுவார்!” என்றாள். “இது சாத்தியமா?” என்று கேட்டார்கள் தோழிகள்.ஆண்டாள், “எண்ணிலடங்காத மாயங்கள் செய்யும் மாயனான திருமாலுக்கு எதுவும் சாத்தியமே! நம் ஊரில் உள்ள பெருமாளுக்கு வடபத்ரசாயீ என்று பெயர். வடபத்ரசாயீ என்பதற்கு ஆலிலைக் கண்ணன் என்று பொருள். அவரது வரலாறு உங்களுக்குத் தெரியுமா? ஊழிக் காலத்தில் அனைத்து உலகும் பிரளயக் கடல் வெள்ளத்தில் மிதந்த வேளையிலே, சிறிய ஆலமர இலையில் சிறு குழந்தையாக இந்த ஆலிலைக் கண்ணன் தோன்றினார்.

உலகையே அடித்துச் சென்ற பிரளய வெள்ளம், தனியாக மிதந்து வந்த அந்த ஆலிலையை ஒன்றுமே செய்யவில்லையே! இது எப்படி சாத்தியமானது? சிறு குழந்தை வடிவில் இருந்த அந்த கண்ணன் எண்ணற்ற உலகங்களை விழுங்கித் தன் வயிற்றில் அடக்கிக் கொண்டாரே!  இது எப்படி சாத்தியமானது? பிரளயக் காலத்தில் உலகில் உள்ள அனைத்தும் பெயர், உருவங்களை இழந்து சூட்சும நிலைக்குப் போயிருக்க, அவர் மட்டும் மாறாமல் இருந்தாரே! இது எப்படி சாத்தியமானது? அந்த மாயனுக்கு அனைத்துமே சாத்தியம் தான்! அன்று நம் ஊர்ப் பெருமாள் ஆலிலையில் சயனித்துக் கொண்டு செய்த மாயங்களை எண்ணிப் பார்க்கையில், அவர் எழுந்து வந்து என்னை மணந்து கொள்ளப் போவதில் எந்த வியப்புமில்லை!” என்று விடையளித்தாள் ஆண்டாள்.

“அவர் வந்து மணக்கும்வரை என்ன செய்வாய்?” என்று தோழிகள் கேட்க,
“பால் ஆலிலையில் துயில்கொண்ட பரமன் வலைப்பட்டு இருந்தேனை
வேலால் துன்னம்பு எய்தாற்போல் வேண்டிற்று எல்லாம் பேசாதே
கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க் குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணந் துழாய்கொண்டு என் நெறிமென்
குழல்மேல் சூட்டீரே”
என்று விடையளித்தாள்.

“தோழிகளே! ஆலிலையில் துயின்ற பெருமான் மேல் காதல் கொண்ட என்னிடம் மேலும் மேலும் வாக்கு வாதம் செய்து என்னைக் காயப்படுத்தாதீர்கள்!  ஆலிலையில் அன்று சயனித்த திருமால், இன்று குடந்தையில் ஆராவமுதமாகப் பள்ளிகொண்டிருக்கிறார். அந்தப் பெருமாளின் துளசி மாலையை வாங்கி வந்து எனக்கு அணிவித்தால், எனது வாட்டம் இப்போது தீரும்! விரைவில் மாயங்கள் பல செய்யும் அந்த மாயனே வந்து என்னை மணப்பான்!” என்பது ஆண்டாளின் பதில்.

அவள் ஆசைப்பட்டபடியே, திருவரங்கத்தில் பள்ளிகொண்ட அரங்கன், தன் படுக்கையிலிருந்து எழுந்து, கருட வாகனத்திலே ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து ஆண்டாளை மணந்து இன்றளவும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளோடு இணைந்து ரங்கமன்னாராக நமக்குத் தரிசனம் தருகிறார்.

இதிலிருந்து திருமாலுக்குச் சாத்தியமாகாத விஷயம் என்பது எதுவும் இல்லை என்பது புரிகிறதல்லவா? இப்படி எதையும் சாதிக்கவல்ல மாய சக்தி தன்னிடம் இருப்பதை ஆலிலைக் கண்ணனாக அவதரித்த போது திருமால் நன்கு வெளிப்படுத்திக் காட்டினார். பெருவெள்ளத்தில் ஓர் ஆலிலை மட்டும் மிதந்து வருவதோ, சிறு குழந்தை அனைத்து உலகையும் உண்பதோ பொதுவாக உலகில் சாத்தியமில்லாத செயல்கள். ஆனால் மாயங்கள் பல செய்து நம்மை மயக்கிடும் அந்த மாயனுக்கு இவை அனைத்தும் சாத்தியமே. இத்தகைய பல மாயங்களைச் செய்தபடியால் தான் ஆலிலைக் கண்ணனுக்கு
‘நைகமாய:’ என்று திருநாமம்.

‘மாய’ என்றால் வியப்பான செயல் என்று பொருள். ‘ஏக’ என்றால் ஒன்று. ‘நைக’ (ந+ஏக=நைக) என்றால் பல. ‘நைகமாய:’ என்றால் பலப்பல வியப்பான செயல்களைச் செய்பவர் என்று பொருள். அதுவே சஹஸ்ரநாமத்தின் 303-வது திருநாமம்.“நைகமாயாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் வாழ்வில் தீராத துன்பங்களும் தீரும்படித் திருமால் அருள்புரிவார்.

(தொடர்ந்து நாமம் சொல்வோம்)

திருக்குடந்தை

டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Tags : Ananthan ,
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!