×

திருவிளக்கை எவ்வாறு வணங்க வேண்டும்!

திருவிளக்கை பெண்களின் உருவாகக் கருதி திருவிளக்கு நாச்சியார் என்று போற்றுவர். திருவிளக்கின் ஐந்து சுடர்களும் பெண்களிடம் நிலை பெற்றிருக்க வேண்டிய அன்பு, நிதானம், மன உறுதி, சமயோஜித அறிவு, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் குறிக்கின்றன. இதன் பாதம் பிரம்மனையும், தண்டு விஷ்ணுவையும், தீபச்சுடர்  சிவனையும், தீபத்தின் வெப்பம் பராசக்தியையும் குறிக்கின்றது. இவ்வளவு மகத்துவம் கொண்ட திருவிளக்கினை எவ்வாறு ஏற்றலாம் என்று பார்க்கலாம்...

*எவர்சில்வர் விளக்குகளை பயன்படுத்தக்கூடாது. தங்கம், வெள்ளி, பித்தளை, வெண்கலம், மண் (அகல்) விளக்குகளையே பயன்படுத்த வேண்டும். உடைந்த, கீறல் விழுந்த விளக்குகளைப் பயன்படுத்தக் கூடாது.

*திருவிளக்குகளை நன்றாக சுத்தம் செய்த தாம்பாளம் அல்லது மனையின் மீது மட்டுமே வைக்க வேண்டும். தாம்பாளத்தில் அரிசியைப் பரப்பி சிறிது மஞ்சள் கலந்து வைக்க வேண்டும்.

*ஒருமுக தீபம் ஏற்றினால் - நினைத்தது நடக்கும்.
இருமுக தீபம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும், செழிக்கும்.மூன்று முகம் ஏற்றினால் - புத்திர தோஷம் நீங்கும்.நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்.
ஐந்து முகம் ஏற்றினால் - நல்ல நற்பலன்கள் உண்டாகும்.

*திருவிளக்கில் பொட்டு வைக்கும்போது எட்டு இடங்களில் வைக்க வேண்டும் என்பது மரபு. உச்சியில் ஒரு பொட்டு, அதனையடுத்து கீழே மூன்று பொட்டுகள், அவை சூரியன், சந்திரன், அக்னியைக் குறிக்கும். அதனையடுத்து தேவியின் கைகளாகக் கருதி இரண்டு பொட்டுகள், திருவடியில் ஒன்று என எட்டு பொட்டுகள்.

*திருவிளக்கினை கிழக்கு நோக்கி ஏற்றினால் துன்பங்கள் நீங்கும். மேற்கு, கடன் மற்றும் தோஷங்கள் நீக்கும். வடக்கு, திருமணத்தடை அகலும், எக்காரணம் கொண்டும் தெற்கு நோக்கி ஏற்றக்கூடாது. அத எம திசையாக கருதப்படுகிறது.

*திருவிளக்கிற்கு மலர், மாலைகள், பூக்கள் சூட்டலாம். விளக்குச்சுடரில் இருந்து ஊதுபத்தி மற்றும் கற்பூரம் ஏற்றுவது கூடாது.
*திருவிளக்கினை பசு நெய்யால் ஏற்றினால் செல்வம் பெருகும், நல்லெண்ணெய், பீடை விலகும்.

*கணபதிக்கு தேங்காய் எண்ணெயில் ஏற்றலாம். நாராயணன், சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் உகந்தது. மகாலட்சுமிக்கு பசு நெய்யால் ஏற்றினால் செல்வம் செழிக்கும். குலதெய்வத்திற்கு வேம்பு, இலுப்பை, பசு நெய் கலந்த எண்ணையால் ஏற்றலாம். பராசக்திக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை மற்றும் பசு நெய் சேர்த்த எண்ணெயில் ஏற்றலாம்.

*விளக்கு ஏற்றும் போது, புதிய திரியில் தான் ஏற்ற வேண்டும். பருத்திப் பஞ்சினால் ஏற்றினால் குடும்பம் சிறக்கும்.     வாழைத்தண்டின் நார், சாபங்களை போக்கும், தாமரைத் தண்டின் நூல் திரி செல்வம் நிலைக்கும். புதிய மஞ்சள் துணி திரியில் ஏற்றினால், நோய்கள் குணமாகும். புதிய வெள்ளைத்துணி திரி என்றால் அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.

*திருவிளக்கை கிழக்கு முகமாக வைக்கவும். வழிபாடு செய்பவர் திருவிளக்கிற்கு வலப்புறமாக அல்லது வடக்குப்புறம் நோக்கி அமரலாம். தெற்கு நோக்கி அமர்ந்து வழிபாடு செய்யவோ, வணங்கவோ கூடாது.

*வழிபாட்டின்போது விளக்கு ஏற்றிய பின்பு விளக்கு அணையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். விளக்கு ஏற்றிய பின்பு கைகால் வீசியோ, வாயால் ஊதியோ அணைக்கக் கூடாது. பூ அல்லது பால் கொண்டு குளிர்விக்கலாம்.

*திருவிளக்கு ஏற்றும்போது ‘ஓம் ஒளிர் விளக்கே போற்றி’ என்று சொல்லிக்கொண்டே ஏற்ற வேண்டும்.

- தி.ஜெயலட்சுமி, சென்னை.

Tags :
× RELATED சுந்தர வேடம்