×

பங்குச் சந்தையில் கிரகங்களின் விளையாட்டு

ஒருவனுடைய ஜாதகத்தில் சென்ற மாத இதழில் வெளியிடப்பட்ட பொருட்களும் அதைச் சார்ந்த கிரகங்களும் என்கிற பட்டியலில் காட்டியவாறு கிரகங்களின் சேர்க்கையோடு ஜாதகம் அமைந்திருந்தால் அந்தந்த கிரக சேர்க்கைக்கு ஏற்றவாறு அந்தந்த பொருட்கள் மீது முதலீடு செய்யலாம். உதாரணமாக கேந்திரங்கள் என்று சொல்லக் கூடிய லக்கினத்திலிருந்து 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் ‘சனி, செவ்வாய், சுக்கிரன்’ சேர்க்கை அமர்ந்திருந்தாலும் 2, 11 என்று தன லாப ஸ்தானத்தில் இருந்தாலும் (இயந்திர) தளவாட சம்பந்தமுள்ள துறைகளில் முதலீடு செய்யலாம். முதலீடு செய்யும் முன் தற்போதைய சந்தை நிலவரத்தை வைத்து முதலீடு செய்ய வேண்டும்.

மேலும் பங்குச் சந்தையை நிர்ணயிக்கும் கிரகம் புதனாவார். புதன் பனிரெண்டு ராசிகளில் சுற்றி வரும் தகுதிக்கேற்பதான் பங்குச் சந்தை இயங்குகிறது. புதன் பகவான் வலுவோடு அமைந்த ஜாதகர்கள் தன ஸ்தானம், லாப ஸ்தானம் வலுத்தவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். எனது ஆராய்ச்சியில், புதன் வக்ரம் பெறும் பொழுதெல்லாம் பங்குச் சந்தையில் மந்த நிலை வருகின்றதென்று அறிகிறேன். அதேபோன்று கிரகணங்கள் எந்தெந்த நட்சத்திரங்களில் ஏற்படுகிறதோ அந்தந்த இடத்திற்கேற்றவாறு சில துறைகளில் மார்க்கெட் நிலவரம் சரிகிறது. இதையும் கருத்தில் கொண்டுதான் பலவழிகளாலும் இந்த நூலில், பங்கு மார்க்கெட்டில், என் எழுத்து பயணத்தை தொடர்ந்துள்ளேன்.

ஒரு சிலர் பங்கு மார்க்கெட்டில் ஓஹோ... என்று வந்ததும் உண்டு. தசாபுக்தி காரணமாக தலை குனிந்ததும் உண்டு. யாரை சொல்லியிருக்கின்றேன் என்பதும் உங்களுக்கு புரிந்திருக்கும். உங்களது தசாபுக்திக்கேற்ப முதலீடு செய்து கொள்வது உசிதமாகும். இவ்வாறு புதன் வலு பெற்றவர்கள். பங்கு மார்க்கெட்டில் பங்கு கொள்ளலாம். புதன் கேந்திராதிபத்திய தோஷம் இல்லாதவாறு திரிகோணங்களாகிய ஐந்து ஒன்பதிலமர்ந்தாலும் பங்குச் சந்தையில் பங்கு பெறலாம். உங்கள் ஜாதகத்தில் லக்னம் என்பது ஒன்றாமிடமாகும். அதிலிருந்து நாலாமிடம், ஏழாமிடம், பத்தாமிடம் என்பது கேந்திரங்கள் என்றும் ஜோதிடம் சொல்கிறது. லக்னத்திலிருந்து ஐந்தாமிடமும் ஒன்பதாமிடமும், திரிகோணங்கள் என்று அழைக்கப்படுகிறது. இரண்டாமிடமும் பதினோராமிடமும் தன லாப ஸ்தானங்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

இவைகளை மையமாக வைத்தே பங்குச் சந்தையில் உங்களது வெற்றி வாய்ப்பு நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு தசாபுக்தி நடைபெறும் பொழுது முதலீடு செய்ததை
புத்தியின் முடிவில் விற்பனை செய்யலாம். பெரும்பாலான ஜாதகங்கள் நான் ஆராய்ச்சி செய்திருக்கிறேன். புதன் வலுத்தவர்கள் பங்குச் சந்தையில் பங்கு கொள்கிறார்கள். புதன் தசை நடப்பிலுள்ளவர்களும் பங்கு கொள்கிறார்கள்.

திசா புக்திகள்

எந்ததெந்த திசா புக்திகளில் எந்தெந்த பொருட்கள்மீது முதலீடு செய்யலாம் என்பது பற்றி சற்று விளக்கமாக காண்போம்.

சூரிய திசை

சூரிய மஹாதசை 6 வருடம் திசாநாதனாகிய சூரிய பகவான் ஆட்சி, உச்சம் பெற்றோ அவர் பார்வை பெற்றோ அல்லது தன்னுடைய நட்சத்திரக் காலில் அமர்ந்தாலும் காட்டன் மில், மெடிசினல் ஹெர்ப்ஸ், தொழிற்சாலை போன்றவற்றிற்கு முதலீடு செய்து லாபம் அடையலாம். திசாநாதனாகிய சூரியன் செவ்வாய்,  கேது போன்ற கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் அல்லது சூரியன் செவ்வாய் அல்லது கேதுவின் நட்சத்திரக் காலில்  அமர்ந்தாலும் மருந்து, டானிக், பொருட்களின் மீது முதலீடு செய்யலாம்.

சூரியன் சனியின் பார்வை பெற்றாலோ அல்லது சூரியன் சனியின் நட்சத்திரக் காலில் அமர்ந்தாலும் கண்ணாடி, பீங்கான், பொருட்களின் மீது முதலீடு செய்யலாம். திசாநாதனாகிய சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன் இவர்களுடன் சேர்ந்தோ அல்லது அவற்றின் பார்வையினை பெற்றோ அல்லது சூரியன், சந்திரன், சுக்கிரன், புதனின் நட்சத்திரக் காலில் அமர்ந்தாலும் பெயின்ட், சிவப்பு நிற துணிகள், பால் பவுடர், காபி, டீ, சுகர் போன்ற பொருட்களின் மீது முதலீடு செய்து லாபம் அடையலாம்.

குறிப்பு: சூரிய தசையில் ராகு புக்தி நடைபெறும்போது கிரகண தோஷம் என்ற அமைப்பு ஏற்படுவதால் அந்தக் காலங்களில் புதிய ஷேர்களை வாங்கவோ பழைய ஷேர்கள் அதாவது கையிருப்பில் உள்ள ஷேர்களை விற்கவும் நேரிடும். இக்காலங்களில் கவனமுடன் செயல்படவும்.

சந்திர திசை

சந்திர மஹா தசை 10 வருடம் சந்திரன், லக்னம், திரிகோணம், கேந்திரம், தன, லாப ஸ்தானங்களில் இருந்தாலும், ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும், திசாநாதன் சனியின் நட்சத்திரத்திலோ அல்லது சனியுடன் சம்பந்தம் பெற்றிருந்தாலும் பெட்ரோலியம் புராடக்ட்ஸ், குழாய்கள், போன்றவற்றில் முதலீடு செய்து லாபம் அடையலாம். பம்ப், போட்டோகிராபி, விவசாயம் தொடர்புடைய பொருட்கள், ஆயில் வகைகளும் லாபத்தை அளிக்கும். சந்திரன், சுக்கிரன், சனி சேர்க்கையோ அல்லது அதனோடு தொடர்பு கொண்டிருப்பின் காட்டன் கார்மென்ட்ஸ், டெக்ஸ்டைல், மிஷினரி பொருடகள், இவற்றில் முதலீடு செய்வது நல்லது. சந்திரன், குரு நட்சத்திரத்திலோ அல்லது சுக்கிரனின் நட்சத்திரத்திலோ அல்லது சந்திரன் குரு, சுக்கிரனின் சேர்க்கையோ அல்லது தொடர்பு ஏற்படினும், தேயிலை, காபி இவைகளில் முதலீடு செய்யலாம்.

குறிப்பு:  சந்திர திசையில் ராகு புத்தி வரும் காலம் மட்டும் எச்சரிக்கையுடன் முதலீடு செய்வது நல்லது.

(விளையாட்டு தொடரும்)

Tags : planets ,
× RELATED மாசி மகத்தையொட்டி பூம்புகார் கடற்கரையில் தீர்த்தவாரி