×

மதுரகவி சுவாமிகள்

குருபூஜை 9-11-2020

1846-ம்  ஆண்டு தை பூரத்தன்று திருவரங்கம் வீரேஸ்வரத்தில் வைணவத்தில் மிகுந்த  ஈடுபாடு கொண்ட குடும்பமான அரங்கப்பிள்ளை- ரங்கநாயகி தம்பதிக்குப் புதல்வனாக  பிறந்தார் மதுரகவி சுவாமிகள்.  திருவரங்கத்தில் உறையும் அரங்கர் மீது  அளவில்லா பிரியம் கொண்டிருந்தார். கிபி 1855ம் ஆண்டு வைகுண்ட ஏகாதசி  காலத்தில், திருவரங்கத்தின் மன்னரான நம்பெருமாள் (உற்சவர்) உலா வரும்போது,  மலரால் அலங்கரிக்கப்பட்ட இறைவனின் அழகில் மனதை பறிகொடுத்த நிலையில்  திருமாலுக்கு திருமாலை (இறைவனுக்காக மலர் மாலை தொடுத்தல்) கைங்கர்யம்  செய்யவேண்டும் என உறுதிபூண்டார்.

அதற்காக காவிரி கரையை ஒட்டி, வேங்கடாசல  ராமானுசதாசர் என்பவரின் நந்த வனத்தில் வசித்து வரும் திருநந்தவனக் குடிகள்  என்று அழைக்கப்படுகிற
ஏகாங்கிகளிடம் (ஏகாங்கி அதாவது, கட்டை  பிரம்மச்சாரியாக, திருமண வாழ்வில் ஈடுபடாமல், சிந்தையை அரங்கத்தானிடம்  மட்டுமே வைத்து, தினமும் நந்தவனத்தில் பூப்பறிப்பது, பின் அதை மாலையாகத்  தொடுப்பது. அவற்றைச் சேகரித்துக் கொண்டு கோயிலில் சேர்ப்பது என வாழ்க்கை  முறை கொண்ட இறைவனின் அடியவர்கள்) மாலைகளை தொடுக்கும் கலையைக்  கற்றுக்கொண்டார். மதுரகவி சுவாமிகளுக்குப் பதினேழு வயதில் அவரது  பெற்றோர், பெண் பார்க்கத் தொடங்கியபோது தனக்குத் திருமணம் வேண்டாம்  என்றும், ஒர் ஏகாங்கியாக அரங்கன் சேவையில் என்றென்றும் தான்  திளைத்திருக்கப் போவதாகவும் கூறி தன் திருமணத்திற்கு என்று பெற்றோர் சேர்த்து வைத்திருந்த தொகையான இருநூறு ரூபாயைப் பெற்றுக்கொண்டார்.

இந்தத்  தொகைக்கு பத்து பவுனில் கடலைக்காய் மணி வாங்கி ரெங்கநாயகி தாயாருக்கு  சார்த்தி அழகுப் பார்த்தார் மதுரகவி. மீண்டும் பெற்றோரிடம் இருந்து தனக்கு  வரவேண்டிய சொத்தினை பெற்றுக்கொண்டு. இந்த நந்தவனத்தில் விதம் விதமான  பூச்செடிகளை வளர்த்தார். வைணவத்தில் பந்தம் பிடிப்போர், கட்டியம் கூறுவோர் போன்றோரை சாத்தாத வைணவர்கள் என்று அழைப்பர். அதாவது, உடலில்  பூணூல் சாற்றாதவர்கள். இவர்கள் வசித்து வந்த திருவரங்க வீதி சாத்தாத (சாத்தார) வீதி என்றே அழைக்கப்பட்டு வந்தது. பெருமாளுக்குப் பூமாலைகள்  அனுப்பும் உரிமம் துவக்கத்தில் இவர்களிடம்தான் இருந்து வந்தது. பூச்சந்தை  வைத்து இந்தத் தர்மப் பணிகளைச் செய்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் இவர்கள்  நொடித்துப் போக…. இந்தக் கைங்கர்யம் நின்று போய்விடுவதாக இருந்த வேளையில்,  மதுரகவி சுவாமிகள் ஐயாயிரம் ரூபாயைக் கொடுத்து, அவர்களிடம் இருந்து இந்த  உரிமையை எழுதி வாங்கிக் கொண்டார்.

ஸ்ரீவானமாமலை ஜீயரிடம் பஞ்ச  சம்ஸ்காரம் செய்து கொண்டு ஸ்ரீபிள்ளை லோகாச்சார்யா சந்நதி சாமி ஐயங்காரிடம்  நாலாயிர திவ்யப் பிரபந்தம் போன்ற வைணவ நூல்களைக் கற்றறிந்தார். நந்தவனத்தை  மேலும் விஸ்தரிக்கும்பொருட்டு வைணவ அன்பர்களின் உதவியோடு சோழமாதேவி  கிராமத்தில் சில நிலங்களை வாங்கினார். நந்தவனத்தை அடுத்து சில  தோட்டங்களையும் வாங்கி, பூ கைங்கர்யத்தை விரிவுபடுத்தினார். பின்னப்பட்டு  போயிருந்த திருவரங்க திருக்கோயிலின் பொன் கூரையையும் புதுப்பிக்க, கிபி  1891-ல் திருவரங்கம் கோயிலில் இருந்த அர்ச்சகர்கள், சுவாமியை அணுக, முதலில்  தனக்கு மாலை கைங்கர்யம் அன்றி வேறெதுவும் வேண்டாம். தெரியாது என்று  மறுத்துவிட்டார் மதுரகவி. அன்றிரவே மதுரகவியின் கனவில் அரங்கன் தோன்றி  ஆணையிட, அரங்கன் திருவுளப்படியே திருப்பணியைத் துவக்கி, ஐந்தே ஆண்டுகளில்  தேசம் முழுக்க அலைந்து எண்பதாயிரம் ரூபாய் திரட்டினார். விமானத்  திருப்பணிகள் நடந்து. கிபி 1903-ல் மிகப் பெரிய குடமுழுக்கும் நடந்தேறியது.  

(கிபி 1904)குரோதி ஆண்டு ஐப்பசி மாதம் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவத்தின்  ஏழாம் நாளன்று, நந்தவன குழாத்திற்கு வழங்கப்பட்ட பிரசாதத்தை பெற்றுக்கொண்ட மதுரகவி சுவாமிகள் அன்றைய தினம் இரவு சுமார் பதினொரு மணிக்கு இறைவனின்  திருவடியை அடைந்தார். திருச்சி மாம்பழச் சாலையில் இருந்து அம்மா மண்டபம்  செல்லும் சாலையில் அம்மா மண்டபத்துக்கு அருகில் சுவாமிகளின் சமாதி உள்ளது.  திருநந்தவனக்குடி ஒருவருக்காக அவர் அமைத்த நந்தவன வளாகத்திலேயே  எழுப்பப்பட்டுள்ள ஒரே சமாதித் திருக்கோயிலாக திகழ்கிறது. இது திருச்சி  மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலும்,  சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

ஆண்டு  முழுவதும் திருவரங்கப் பெருமானுக்கும், தாயாருக்கும் சக்கரத்து  ஆழ்வாருக்கும் தேவைப்படும் மாலைகள் மதுரகவி சுவாமியின் நந்தவனத்திலிருந்தே  வருகின்றன. மதுரகவி சுவாமிகளால் மேற்கொள்ளப்பட்ட ஊறுகாய் சேவையும்  திருவரங்கம் கோயிலில் நடந்து வருகிறது. பெருமாளுக்கு மதிய பிரசாதமாக (பெரிய  அவசரம் என்பர்) வெள்ளைச் சாதம், ரசம், கீரை, ஊறுகாய் போன்றவை நிவேதனம்  செய்யப்படும். இதில் ஊறுகாய்க்காக பெருமாளுக்குத் தினமும் பத்து  எலுமிச்சம்பழங்களும் தாயாருக்கு ஐந்து எலுமிச்சம் பழங்களும் நந்தவனத்தில்  இருந்து கொடுக்கப்பட்டு வருகின்றன. திருவரங்கம் கோயில் வெளியாண்டாள் சந்நதிக்கு அருகில் மதுரகவி சுவாமிகளைப் பற்றிய வரலாறு. கல்வெட்டாக  வைக்கப்பட்டிருக்கிறது.

தொகுப்பு: ஆர்.அபிநயா

Tags : Madurakavi Swamis ,
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்