×

திருமணத்தடை நீக்கும் திருப்பாசூர் வாசீஸ்வரர்

முன்பொரு காலத்தில் இத்தலம் மூங்கில் காடாக இருந்தது. பசுக்கூட்டத்தில் ஒரு பசு மட்டும் குறிப்பிட்ட இடத்தில் நாள் தோறும் பால் சொரிந்தது. இதனைக் கண்ட இடையன் மன்னனிடம் கூற, மன்னன் அவ்விடத்தை தோண்டிப்பார்க்க ஆணையிட்டான். உடனே வேடுவர்களும் வாசி என்னும் கருவியால் அவ்விடத்தை தோண்டிப் பார்க்கையில் அங்கு லிங்கம் இருப்பதைக் கண்டனர்.

மறுநாள் மன்னனின் எதிரிகள் அவனை பழி தீர்ப்பதற்காக கொடிய விஷம் கொண்ட பாம்பு ஒன்றை குடத்தில் இட்டு அவனிடம் கொடுத்து விட்டனர். மன்னன் குடத்தை திறந்து பார்ப்பதற்கு முன்பு அங்கு வந்த ஒரு பாம்பாட்டி குடத்தில் இருந்த பாம்பை பிடித்துவிட்டு ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டார். அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய ஈசன், தானே பாம்பாட்டியாக வந்ததாகவும், மூங்கில் காட்டிற்குள் சுயம்புவாக எழுந்தருளியுள்ளதையும் தனக்கு ஆலயம் ஒன்றை எழுப்ப வேண்டும் என்று கூறினார். அதன் படி மன்னனும் சிவபெருமானுக்கு அங்கு கோயில் கட்டி எழுப்பினார்.

வாசி என்னும் கருவியால் வெட்டுப்பட்டதால் இறைவன் வாசீஸ்வரர் எனப்படுகிறார். பாசு என்பது மூங்கிலைக் குறிக்கும். முன்பு மூங்கில் காடாக இருந்ததால் இத்தலம் திருப்பாசூர் என அழைக்கப்படுகிறது.தங்காதளி அம்பாள்: தட்சனின் யாகத்திற்கு தன்னை மதியாது சென்ற பார்வதி தேவியை பெண்ணாக பூமியில் பிறக்குமாறு சபித்த சிவபெருமான் திருப்பாசூர் தலத்தில் தங்காதளியே என அன்போடு அழைத்ததால், இறைவி இங்கு தங்காதளி என பெயர் பெற்றாள். இவ்வூரும் தங்காதளிபுரம் என அழைக்கப்படுகிறது.

மது, கைடபர் எனும் இரு அசுரர்கள் பிரம்மாவின் வேதத்தை கடலுக்கு அடியில் மறைத்து வைத்து விட்டனர். பிரம்மாவால் படைப்புத் தொழிலை செய்ய முடியவில்லை. எனவே, மகாவிஷ்ணு மீன் அவதாரம் எடுத்துச் சென்று அவர்களை அழித்து வேதத்தை மீட்டு வந்தார். அவரை தோஷம் பிடித்தது. இத்தோஷம் விலக சிவனிடம் வேண்டினார். அவர் பூலோகத்தில் இத்தலத்தை சுட்டிக்காட்டி தன்னை வழிபட்டுவர தோஷம் நீங்கும் என்றார். அதன்படி மகாவிஷ்ணு இத்தலத்தின் தீர்த்தத்தில் நீராடி சிவனை வழிபட்டு தோஷம் நீங்கப்பெற்றார்.

தாழம்பூ பூஜை: தனது தலை முடியைக் கண்டதாக பொய் சொன்ன தாழம்பூவை பூஜைகளில் இருந்து ஒதுக்கி வைத்தார் சிவன். தாழம்பூ சிவனிடம் தன்னை மன்னித்து பரிகாரம் வேண்டவே சிவராத்திரி நாளில் மட்டும் தனது பூஜைக்கு பயன்படும்படி சிவன் வரம் கொடுத்தாராம். இதன் அடிப் படையில் இக்கோயிலில் சிவராத்திரி தினத்தன்று இரவு ஒரு கால பூஜையில் மட்டும் தாழம்பூவை சிவனின் உச்சியில் வைத்து பூஜை செய்கின்றனர். விநாயகர் சபை: விஷ்ணு அசுரர்களை அழித்த தோஷத்தால் தன்னிடமிருந்த 16 செல்வங்களில் 11 செல்வங்களை இழந்தாராம். அந்த செல்வங்களை பெறுவதற்காக சிவனை வேண்டினார். அவரது ஆலோசனையின்படி இத்தலத்தில் 11 விநாயகர்களை பிரதிஷ்டை செய்து வணங்கி இழந்த செல்வங்களை பெற்றார் என்றொரு வரலாறு உண்டு. இதனை உணர்த்தும் விதமாக இக்கோயிலில் 11 விநாயகர்கள் ஒரே இடத்தில் சிறு மண்டபத்தின் கீழ் காட்சி தருகின்றனர். இதனை, “விநாயகர் சபை’ என்கின்றனர். அருகிலேயே கேது பகவான் தனியே இருக்கிறார்.

சொர்ண காளி : இப்பகுதியை ஆட்சி செய்து வந்த குறும்பன் எனும் சிற்றரசன் ஒருவன் மன்னனுக்கு சரியாக வரி கட்டாமல் இருந்தான். எனவே அவனுடன் போரிட்டு வரியை வாங்க சோழ மன்னன் குறும்பன் மீது படையெடுத்தான். காளி பக்தனான குறும்பன் அவளை ஏவி விட்டு சோழ படைகளை விரட்டியடித்தான். சோழ மன்னன் சிவனிடம் தனக்கு உதவும்படி வேண்டினான். அவனுக்காக சிவன் காளியை அடக்க நந்தியை அனுப்பி வைத்தார். பூலோகம் வந்த நந்தி, காளியுடன் போரிட்டு வெற்றி பெற்றது. மேலும் காளியின் இரண்டு கால்களிலும் பொன் விலங்கை பூட்டியும் அதனைக் கட்டுப்படுத்தினார். நந்தியால் அடக்கப்பட்ட சொர்ணகாளி இக்கோயில் பிரகாரத்தில் நான்கு கைகளுடன் தனியே நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது கால்களில் விலங்கு போடப்பட்டிருக்கிறது. பவுர்ணமி தோறும் மாலை வேளைகளில் இவளுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

கோவில் அமைப்பு: தெற்கு திசையில் 3 நிலை ராஜகோபுரமும், கிழக்கு திசையில் ஒரு முகப்பு வாயிலும் கொண்டு இவ்வாலயம் விளங்குகிறது. இவ்வாலயத்தில் 2 பிரகாரங்கள் உள்ளன. வெளிப் பிரகாரம் சுற்றி வரும்போது கிழக்குச் சுற்றில் பலிபீடம், கொடிமரம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. சொர்ணகாளிக்கு தனி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலத்தின் தலவிருட்சமான மூங்கில் மரமும் இங்குள்ளது. 2வது பிரகாரத்தில் சுவாமி, அம்பாள் மற்றும் சுப்பிரமணியர் சந்நிதிகள் இருக்கின்றன. மூலவர் வாசீஸ்வரர் சந்நிதியும், இறைவி தங்காதளி அம்மன் சந்நிதியும் தனித்தனி விமானங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

இறைவன் கருவறை விமானம் கஜப்பிருஷ்ட அமைப்பைக் கொண்டது. அம்மன் சந்நிதி சிவபெருமான் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. சுவாமி சந்நிதியின் வலதுபுறம் அம்மன் சந்நிதி உள்ள சிவஸ்தலங்களுக்கு ஆக்க சக்தி அதிகம் உண்டு என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. கருவறையில் சிவன் சுயம்பு லிங்கமாக சதுர வடிவ பீடத்தில் காட்சி தருகிறார். இவர், தலையில் வெட்டுப்பட்ட தடத்துடன் தன் உடலில் மேல் பகுதி மட்டும் இடப்புறத்தில் சற்று நகர்ந்தபடியான கோலத்தில் இருப்பது சிறப்பு. காயம்பட்ட லிங்கம் என்பதால் இவரை கையால் தொட்டு பூஜைகள் செய்யப்படுவதில்லை. அலங்காரங்கள் கூட பாவனையாகத்தான் நடைபெறுகிறது. சுவாமி தீண்டாத் திருமேனி என்று அழைக்கப்படுகிறார். மூங்கில் வனத்தின் அடியில் தோன்றிய சிவன் என்பதால் இவருக்கு பாசுரநாதர் என்றொரு பெயரும் உண்டு.

மூலவர் கருவறையில் நுழைவாயில் இடதுபுறம் ஏகாதச விநாயகர் சபையில் 11 விநாயக திரு உருவச்சிலைகள் காண்போர் கவரும் வகையில் வைக்கப்பட்டுள்ளன. அருகில் கேதுவும் இருக்கிறார். கருவறை சுற்றுச் சுவர்களில் கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், துர்க்கை, பிரம்மா ஆகியோர் உள்ளனர். உட்பிரகாரத்தில் தேவார மூவரின் உருவச்சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. சிறப்புக்கள்: தடைபட்ட திருமணங்கள் நடக்கவும், தோஷங்கள் நீங்கவும் பிரார்த்திக்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறியவுடன் விநாயகர் சபையில் 11, சக்கரத்தில் 5 நெய் தீபங்கள் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவிலும், திருவள்ளூர் நகர பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும் இந்த சிவஸ்தலம் உள்ளது. சென்னையில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது.

Tags :
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்