×

ஒடுகத்தூர் அருகே பரபரப்பு இரவில் நடக்கும் அமானுஷ்ய பூஜை-பொதுமக்கள் பீதி

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அருகே ஆற்றங்கரையில் இரவில் நடக்கும் அமானுஷ்ய பூஜையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். பள்ளிகொண்டா அடுத்த கீழ்கிருஷ்ணாபுரம் கிராமம் மற்றும் கொல்லமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு இடையே உத்திர காவேரி ஆறு செல்கிறது. இந்த ஆறு மேலரசம்பட்டு பகுதியில் தொடங்கி ஒடுகத்தூர் வழியாக அகரம், குருவராஜபாளையம், கீழ்கிருஷ்ணாபுரம், வெட்டுவானம் வழியாக பள்ளிகொண்டா பாலாற்றில் கலக்கிறது.தொடர் மழையால் இந்தாண்டு முழுவதும் தற்போது ஆற்றில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், கீழ்கிருஷ்ணாபுரம் மற்றும் கொல்லமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு இடையே உள்ள வன்னான் பாறை என்ற இடத்தில் இரவு நேரங்களில் அமானுஷ்ய பூஜை நடைபெறுகிறது.இரண்டு கிராமங்களுக்கு சொந்தமாக அருகருகே இங்கு சுடுகாடு உள்ளது. இதனால், நடு இரவில் ஆற்றில் இருந்து வித்தியாசமான சத்தத்துடன் மந்திரங்கள் ஓதப்படுகிறதாம். அந்த இடத்திற்கு சென்று பார்த்தால் மணல்கள் சேர்த்து எலுமிச்சை, மஞ்சள், குங்குமம், பொம்மை வைத்து பூஜை நடத்திய தடங்கள் உள்ளதாம். ஆனால், காலையில் சென்று பார்த்தால் அதற்கான தடமே அங்கு இல்லாமல் போய்விடுகிறதாம். அதேபோல், அங்கு ரத்த கரைகளும் இருப்பதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் பீதியுடனே சென்று வருகின்றனர். இரண்டு கிராமங்களுக்கு முக்கிய வழி தடமாக இந்த ஆற்று பாதை உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.இதுபற்றி அங்குள்ள மக்கள் கூறுகையில், ‘கீழ்கிருஷ்ணாபுரம் மற்றும் கொல்லமங்கலம் ஆகிய இரண்டு கிராமங்களுக்கு முக்கிய போக்குவரத்து பாதையாக இந்த ஆறு உள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வெட்டுவானம் வழியாக சுற்றி ஆம்பூர், மாதனூர் போன்ற பகுதிகளுக்கு மக்கள் சென்று வருவார்கள். குறைந்த அளவு தண்ணீர் சென்றால் இரண்டு கிராம மக்கள் இந்த ஆற்று வழியை தான் பயன்படுத்துகின்றனர். எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் நடு இரவில் நடக்கும் இந்த அமானுஷ்ய பூஜை விஷயம் காட்டு தீ போல் பரவியதில் இருந்து பகல் நேரத்திலேயே மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ளது. ஆற்றில் இரவு நேரத்தில் வித்யாசமான சப்தங்கள் எழுப்பி பூஜை செய்கின்றனர். இதனால் ஆற்றோரம் உள்ள நாங்களே வெளியில் வருவதற்கு பயமாக உள்ளது. இந்த அமானுஷ்ய பூஜை யார் செய்கிறார்கள், எதற்கு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் அவர்களை கையும் களவுமாக பிடித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும்’ என்றனர்….

The post ஒடுகத்தூர் அருகே பரபரப்பு இரவில் நடக்கும் அமானுஷ்ய பூஜை-பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.

Tags : Puja-Public Panic ,Odugattur ,Odugatore ,Pallykonda ,Village ,
× RELATED ஒடுகத்தூர் அருகே பரபரப்பு; பஸ்...