×

தாவர எண்ணெய் தரும் குசும்பா

குசும்பாவின் பூர்வீகம் நைல் நதி கரைதான். பண்டைய எகிப்தில் பிரமிடுகளைக் கட்டிய பாரவோ மன்னர்களின் ஆவணங்களில் குசும்பாவின் பெயர் அடிக்கடி புழங்கப்படுகிறது. ஆடைகளில் வண்ணங்கள் சேர்க்கவும். எண்ணெயாக எடுத்துப் பயன்படுத்தவும் பண்டை காலம் முதலே குசும்பா பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மெக்சிகோவின் காலனி கால நாட்களில் ஸ்பானியர்கள் இதனை உணவுப் பொருளாகவும் பயன்படுத்தியிருக்கின்றனர். குசும்பாவின் தாவரவியல் பெயர் கார்தமஸ் டிங்டோரியஸ். இன்று உலகம் முழுதும் ஆண்டுதோறும் பத்து லட்சம் டன் குசும்பா உற்பத்தியாகிறது. இதில் முப்பது சதவீதம் ரஷ்யாவில்தான் விளைகிறது. இதற்கு அடுத்த நிலையில் கசகஸ்தான், மெக்சிகோவில் அதிகம் சாகுபடியாகிறது. இந்தியாவில் தமிழகம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இது சாகுபடி செய்யப்படுகிறது.உலகின் முக்கியமான எண்ணெய் வித்துக்களில் ஒன்றாக குசும்பா கருதப்படுகிறது. பல்வேறு வகையான தொழிற்சாலை நடவடிக்கைகளுக்காக குசும்பாவின் தேவை அதிகரித்து வருகிறது. இனி, குசும்பா சாகுபடி பற்றி விரிவாகப் பார்ப்போம். குசும்பா பயிரிட தமிழகம் ஏற்ற நிலமாக உள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் வரையான கார்த்திகைப் பட்டத்தில் மானாவாரியாக கே 1, கோ 1 ரகங்களைச் சேர்ந்த குசும்பாவை தமிழகம் முழுதுமே பயிரிடலாம் என்று வேளாண் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.குசும்பா சாகுபடிக்கு முன்பு நிலத்தை தயார்படுத்த வேண்டும். நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை டிராக்டர் கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழவேண்டும். பின்பு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும். நிலம் தயாரித்த பிறகு 12.5 டன் தொழுஉரம் (அ) மக்கிய தென்னை கழிவு இடவேண்டும். தொழு உரமானது உழுவதற்கு முன்னால் இடப்படவில்லையெனில், கடைசி உழவுக்கு முன்பு தொழு உரத்தை இட்டு மூடவேண்டும். ஹெக்டேருக்கு 10 கிலோ என விதையளவு இருக்க வேண்டும். விதைகளை விதை நேர்த்தி செய்த பிறகு விதைக்க வேண்டும். ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் மருந்தைக் கலந்து 24 மணிநேரம் கழித்து விதைக்க வேண்டும். இவ்வாறு விதைநேர்த்தி செய்வது வேர்அழுகல் நோயிலிருந்து பயிரினைப் பாதுகாக்கும்.விதைகளை 2 முதல் 3 செ.மீ. ஆழத்தில் வரிசையாக நடவு செய்ய வேண்டும். விதைகளை கொரு அல்லது நாட்டுக் கலப்பை மூலமாக வரிசையில் நடவு செய்யலாம்.நடவு செய்யும் போது வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியானது 45 செ.மீ. ஆகவும், வரிசையில் உள்ள செடிகளுக்கு இடையே இடைவெளியானது 15 செ.மீ. இருக்குமாறும் விதைக்க வேண்டும். விதைத்த 15-ம் நாள், செடிக்குச் செடி 15 செ.மீ. இடைவெளிவிட்டு செடிகளை கலைத்து விட வேண்டும்.பயிருக்குத் தேவையான தழைச்சத்தான 20 கி / ஹெ அடியுரமாக இட வேண்டும். விதைத்த 25 நாள் மற்றும் 40 நாள் ஆகிய இருமுறை களைளை, களைக்கொத்தி மூலமாகவோ அல்லது கைக்களையாகவோ எடுக்க வேண்டும்.முதிர்ந்த இலைகள் மற்றும் முழுச் செடியும், பழுப்பு நிறமாக மாறுவது முதிர்ச்சியைக் குறிக்கும். அறுவடை செய்யப்பட்ட பயிரினை  களத்தில் வைத்து, கொண்டைகளைப் பறித்து உலர்த்திய பின்பு விதைகளைத் தனியே பிரித்தெடுத்து வெயிலில் உலர்த்தி சுத்தம் செய்ய வேண்டும். அறுவடைக்குப்பின் விதைகளை நன்கு உலர்த்திய பின்பே கோணிகளில் சேமிக்க வேண்டும்….

The post தாவர எண்ணெய் தரும் குசும்பா appeared first on Dinakaran.

Tags : Kusumba ,Nile ,Egypt ,Dinakaran ,
× RELATED இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு...