×

பெருமாள் கணக்கு

மலைக்கோயிலாக பிரசித்து பெற்று விளங்கும் ஒரு பெருமாள் கோயிலில், மூலவர் பெருமாள் நின்ற கோலத்தில் அருட்புரிகிறார். இக்கோயிலில் கோவிந்தன் என்கிற பணியாள் ஒருவர் இருந்தார். கோயிலைப் பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதைக் குறைவின்றி சிறப்பாக செய்து வந்தார். இப்பணியைத் தவிர அவருக்கு வேறொன்றும் தெரியாது. தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து பெருமாளை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர்.

‘பெருமாள் இப்படி சதா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறாரே! அவருக்கு சோர்வாக இருக்காதா? கால்கள் வலிக்காதா’ என்று எண்ணியகோவிந்தன் ஒரு நாள், பெருமாளிடம். “எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டேயிருக்கிறாயே… உனக்குப் பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கட்டுமா? நீ அன்றைய தினம் மட்டும் ஓய்வெடுத்துக் கொள்ளலாமே சாமி?” என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்டான். அவன் எதிர்பார்க்காத வகையில் பெருமாள் பேசினார் அவனிடத்தில், “எனக்கு நிற்பதில் ஒன்றும் பிரச்னையில்லை. எனக்குப் பதிலாக நாளை ஒரு நாள் நீ நில். ஆனால், ஒரு முக்கிய நிபந்தனை, நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும். வருபவர்களைப் பார்த்துப் புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதுமானது.

யார் என்ன சொன்னாலும் கேட்டாலும் நீ பதில் சொல்லக்கூடாது. நீ என் சொரூபம் கொண்ட கற்சிலை என்பதை மறந்து விடக்கூடாது. என்மீது நம்பிக்கை வைத்து அசையாது நின்றாலே போதுமானது” என்று கூறினார். அதற்கு கோவிந்தனும் சம்மதித்தான். அடுத்த நாள், பெருமாளைப் போலவே அலங்காரம் செய்து கொண்டு, கோயில் கருவறையில் நின்றான் கோவிந்தன். பெருமாளோ கோவிந்தனைப் போல தோற்றத்தை ஏற்றுக்கொண்டு கோயிலைக் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்யத் தொடங்கினார். அன்றைய தினம் காலை, ஒரு மிகப் பெரிய செல்வந்தர் வந்தார். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று பெருமாளிடத்தில் வேண்டி, ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தினார்.

அவர் திரும்பிச்செல்லும் போது, தவறுதலாகத் தனது பணப்பையைத் தவற விட்டுச் சென்றார். இதைக் கருவறையில் கடவுள் வேடத்தில் நின்று கொண்டிருக்கும் பணியாளர் கோவிந்தன் பார்த்தார். பெருமாள் விதித்த நிபந்தனை ஞாபகத்துக்கு வர பேசாமலிருந்தார். அப்படியே அசையாது நின்றார். சிறிது நேரம் கழித்து பரம ஏழை ஒருவர் அங்கு வந்தார். அவரிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. அவர், “என்னால் இது மட்டும் தான் உனக்கு தரமுடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா. என்றும் போல, என்னை ஆசிர்வதிக்க வேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட மிகக் கஷ்டமாக இருக்கிறது. என்னுடைய பிரச்னைகளை எல்லாம் உன்னிடமே விட்டுவிடுகிறேன். நீயே, எனக்கு ஒரு நல்ல வழியைச் செய்” என்று மனமுருகக் கண்களை மூடி நம்பிக்கையுடன் வேண்டினார்.

சில வினாடிகள் கழித்துக் கண்களைத் திறந்தவருக்கு எதிரே, அந்த செல்வந்தர் தவற விட்ட பணப்பை கண்ணில் பட்டது. அதனுள்ளே பணம் மட்டுமில்லை, தங்கக் காசுகளும் வைரங்களும் கூட இருந்தன. பெருமாள், தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து பணப்பையை அருளியிருக்கிறான் என்றெண்ணி, அதை எடுத்துக் கொள்கிறார். பெருமாளே என்று கூறி அந்த பணப்பையை எடுத்துச் சென்று விடுகிறார். பெருமாள் வேடத்தில் நின்று கொண்டிருந்த, கோவிந்தனால் எதுவும் சொல்ல முடியவில்லை. அதே புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, ஒரு கப்பல் வியாபாரி வந்தார். ஒரு நீண்ட தூரப் பயணமாக கப்பலில் அன்று அவன் செல்லவிருப்பதால், இறைவனைத் தரிசித்து ஆசி பெற வேண்டி வந்தார். இறைவனிடம் பிரார்த்தனை செய்தார்.

அந்த நேரம் பார்த்து, பணப்பையைத் தொலைத்த செல்வந்தர், காவலர்களுடன் திரும்பக் கோயிலுக்கு வந்தார். அங்கு, கப்பல் வியாபாரி பிரார்த்தனை செய்வதை பார்த்து, “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரைப் பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற, காவலர்களும் அந்தக் கப்பல் வியாபாரியைப் பிடித்துச்செல்கிறார்கள். “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி!” என்று அந்த செல்வந்தர் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு சென்றார். சிலையாக நின்ற பணியாளர் இறைவனை நினைத்தபடி, “கடவுளே இது நியாயமா? அப்பாவி ஒருவர் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்கமுடியாது…” என்று கூறி,“கப்பல் வியாபாரி திருடவில்லை.

தவறு அவர் மீது இல்லை!” என்றபடி நடந்த உண்மைகளை அவ்விடத்தில் சொல்கிறார். உடனே, செல்வந்தரும், கப்பல் வியாபாரி இருவரும் நெகிழ்ந்து போய், உண்மையைக் கூறியமைக்கு இறைவனிடம் நன்றி சொல்லிவிட்டு செல்கின்றனர். இரவு பொழுது வந்தது. கோயில் வாசல் மூடப்படுகிறது. இறைவன் வருகிறார்.
மூலஸ்தானத்தில் நின்று கொண்டிருந்த கோவிந்தனிடம், இன்றைய பொழுது எப்படியிருந்தது? என்று கேட்டார். “மிகவும் கடினமாக இருந்தது. உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல செயல் செய்தேன்….” என்று காலையில் கோயிலில் நடந்ததைக் கூறினார். பெருமாளோ இதைக் கேட்டவுடன் அதிருப்தியடைந்தார். பெருமாள் அதிருப்தியைப் பார்த்த கோவிந்தன் பதற்றமானான்.

பெருமாள் பேசினார், “நாம் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்து கொள்ளவில்லை…? என்ன நடந்தாலும் பேசக்கூடாது, அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை நீ ஏன் மீறினாய்.? உனக்கு என்மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது மனநிலையை அறியாதவனா நான்? செல்வந்தன் அளித்த காணிக்கை, தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனிடத்தில் மொத்தமாக உள்ள செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு, நான் பதிலுக்கு அவனுக்கு எண்ணற்றவைகளைத்தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால் அந்த ஏழை கொடுத்ததோ அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான்.

இருப்பினும் என்மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். அன்போடு அதைக் கொடுத்தான். இந்தச்சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும், இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால், விபத்தைச்சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனைக் காக்கவே அவனைத் தற்காலிகமாகத் திருட்டுப்பட்டம் சுமக்கச் செய்து சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணிப் போற்றுவான். இதன் மூலம் அந்த
செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும்.

அவன் பாவப்பலன்கள் துளியாவது குறையும். இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ஆசிர்வாதம் செய்ய நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து, உன் எண்ணங்களை செயல்படுத்தி அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய்” என்றான். கோவிந்தன், பெருமாளின் கால்களில் விழுந்து தன்தவறுக்கு மன்னிக்கும்படி வேண்டினான். “இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்கும் ஒரு காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது” என்றார் பெருமாள்.

தொகுப்பு: சு.இளம் கலைமாறன்

Tags : Perumal ,
× RELATED குன்றத்தூர் திருஊரக பெருமாள்...