×

திருவாரூர் கமலாம்பிகை

தமிழக சக்தி பீடங்கள்

திருவாரூர் தியாகராஜர் கோயில் மிகப் பழமையானது, பிரமாண்டமானது. நாயன்மார்களால் பாடல் பெற்றது.  திருப்பாற்கடலில் திருமால் இத்தல இறைவர் தியாகராஜரைத் தமது மார்பில் வைத்துப் பூஜித்தார்.  திருமாலின் மூச்சினால் அவர் மார்பின் ஏற்ற இறக்கங்களில் ஈசன் நடமாடினார்.

பின் இம்மூர்த்தத்தை இந்திரன் வரமாகப் பெற்று பூஜித்தார்; அதன்பின் முசுகுந்தச் சக்கரவர்த்தியிடம் வழங்கினார். இத்துடன் மேலும் ஆறு தியாகராஜ மூர்த்தங்கள் நிறுவப்பட்ட தலங்களுடன் சேர்த்து இவை சப்த(ஏழு) விடங்கத் தலங்கள் எனப்படும். இத்தலத்தில் சாயரட்சை வழிபாட்டின்போது தேவேந்திரனே வந்து பெருமானைப் பூஜிப்பதாக ஐதீகம். எல்லாச் சிவாலயங்களின் சாந்நித்யமும் சாயரக்ஷை எனப்படும் திருவந்திக்காப்பு நேரத்தில்
இத்தலத்தில் பொலிவதாக ஐதீகம்.

திருவாரூரில் தியாகராஜரின் முக தரிசனம் காண்பவர்கள், 3 கி.மீ. தொலைவிலுள்ள விளமல் சிவாலயத்தில் பாத தரிசனம் காண்பது சிறப்பு. சிதம்பர ரகசியம் போல, தியாகராஜ ரகசியம் இந்த கோயிலின் சிறப்பு. தியாகராஜருக்கு பின்னுள்ள மூலஸ்தானத்தில் அந்த ரகசியம் உள்ளதாக கூறப்படுகிறது. இங்குள்ள உற்சவ அம்மன் “மனோன்மணி“க்கு ஆடிப்பூரத்தில் விழா நடக்கிறது. கமலாம்பிகை கோபுரத்தின் உச்சியில் “ஆகாச பைரவர்” காவல் காத்து வருகிறார். இங்குள்ள பைரவர் “சித்தி பைரவர்” எனப்படுகிறார்.

அம்மன் மூலஸ்தானம் அருகே வலதுபுறம் கமலமுனி சித்தர் பீடம் உள்ளது. சிவன் சந்நதியின் பிராகாரத்தில் மிகப்பெரிய “சிவசூரியன்” அருட்பாலிக்கிறார். வெளிப்பிரகாரத்தில் அமைந்துள்ள ராஜநாராயண மண்டபத்தில்தான், தியாகராஜர் திருவாதிரை தினத்தில் பக்தர்களுக்கு அருட்பாலிப்பார். இங்கு அஷ்ட துர்க்கை சந்நதிகள் உள்ளன. இந்த துர்க்கைகளையும், மகாலட்சுமியையும் முத்துசுவாமி தீட்சிதர் பாடியுள்ளார். அட்சய திரிதியை, தீபாவளி நாட்களில் இங்குள்ள மகாலட்சுமிக்கு நாணயங்களால் சொர்ண அபிஷேகம் செய்வது சிறப்பு. அம்மன் சந்நதி வெளிப்பிட்கார சுவரில் 6 சீடர்களுடன் தெட்சிணாமூர்த்தி அருட்பாலிக்கிறார்.

லலிதா சகஸ்ரநாமத்தின் மொத்த வடிவமாக, இத்தலத்து நாயகி கமலாம்பிகை விளங்குகிறாள். எனவே இங்குள்ள தீர்த்தம் “கமலாலயம்‘ எனப்படுகிறது. பங்குனி உத்திரத்தில் இங்கு நீராடினால், கும்பகோணத்தில் 12 மகாமகம் நீராடிய பலன் உண்டு என்பது ஐதீகம். குளத்தின் நடுவே நாகநாதர் சந்நதி உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபடுகின்றனர்.

பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தான் சிவாலயங்களில் பிரதோஷ பூஜை நடத்தப்படும். ஆனால், திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரை பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது. இதை “நித்திய பிரதோஷம்” என்பார்கள். இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர்களும் தரிசிப்பதாக ஐதீகம். எனவே, இந்தக் கோயிலுக்கு மாலை வேளையில் சென்றால், எல்லா தேவர்களின் அருளையும் பெற்ற புண்ணியம் கிடைக்கும். கமலாம்பாளை வணங்கினால் ஞானம் கிட்டும். ஊமைகள் கூட வியாழனுக்கு குருவாவார்கள். புரட்டாசி மகர நவமியில் பால் அன்னம் நிவேதிப்பவர்கள் முக்தியடைவர்.

அன்னை கமலாம்பாள் சந்நதி மிகவும் பிரசித்தி பெற்றது. சக்தி பீடங்களுள் இது கமலை பீடமாகும். சந்நதியில் இரண்டு கால்களையும் மடக்கி யோகினியாய் தவக்கோலத்தில் அன்னை அமர்ந்திருக்கிறாள். ஆத்மதத்துவம், வித்யா தத்துவம், சிவதத்துவம் என்ற மூன்றடுக்கு பீடத்தின் மேல் இடக்கால் மீது வலக்காலை அமர்த்தி, இடக்கரம் ஊரு ஹஸ்தமாய் விளங்க, நீலோத்பலமலரை வலக்கரத்தில் பற்றி வளர்பிறையும், கங்கையும் பிறைகளாய் சிரசில் கரண்ட மகுடத்தில் தரித்து மையெழுதிய விழிகளை இமைகளால் மூடி சிவானந்தத் தென்றலை சுவாசித்து மோனம் ததும்பும் ஞானத்தின் உச்சியில் சிவராஜயோகத்தில் சாக்தர்கள் போற்றிப் புகழ்பாடும் வடிவில் அருட்காட்சி நல்குகிறாள். தியாகராஜ வைபோகத்திற்கு சற்றும் சளைக்காத காமகலா எழிற்கோலம்.

தபஸ் என்பது வடமொழிச் சொல். தப: என்பது வேர்ச்சொல். இதன் பொருள் உருகு அல்லது உருக்கு. விரதம் எனில் புறக்கணித்தல் என்று பொருள். நடைமுறையில் உள்ள சுகங்களைப் புறக்கணித்து உள்ளமும் உடலும் நன்னெறியில் நிற்றல் என்பதாம். உலோகங்களை உருக்குவதால் அவை தூய்மை அடைகின்றன. மேலும் பொலிவும் புத்துருவும் பெறுகின்றன. தவத்தால் ஆன்மா தூயதாய் பொலிவும் வலிவும் பெறுகின்றது. தாம் விரும்பியதைப் பெறச் செய்கின்ற தவம் காம்யதவம். வேடன் ஒருவன் வால்மீகி மகரிஷியாக மாறியது கடுந்தவத்தால்தான். பராசக்தி மகாத்மியம் எனும் நூல் கமலாம்பிகையின் தவத்திற்கான காரணங்களை விரிவாக எடுத்துரைக்கிறது.

தர்மம் தழைத்தோங்கவும், சரஸ்வதி, சசிதேவி எனும் இந்திராணி, மகாலக்ஷ்மி, பூதேவி இவர்கள் சர்வ மங்கல செளபாக்கியங்களுடன் வாழவும், சகல உயிர்கள் அனைத்தும் இன்புறவும் பீடும் பெருமையும் நிறைந்த கமலாலய திருத்தல நாயகி கமலாம்பிகை தவம் இயற்றுகிறாள். முத்துசுவாமி தீட்சிதர் அன்னை கமலாம்பாளை துதித்து நவாவரணக் கீர்த்தனைகளைப் பாடியிருக்கிறார். இத்திருத்தலத்தில் அக்ஷ்ர சக்தி பீடம் மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்பீடத்தின் பிரபையில் முன்னும் பின்னும் 51 அக்ஷரங்களும், பீடத்தின் மத்தியில் ஹ்ரீம் எனும் புவனேஸ்வரி பீஜமும் பொறிக்கப்பட்டுள்ளன. திருவாரூர் தலைமை பூஜகர்களாகிய நயனார்களிடம் இப்பீடத்தை வழிபடும் வழக்கம் உள்ளது.

திருவாரூரில் தியாகேசர் ஆடும் அஜபா நடன வித்தைக்கு அரணாக அமைந்தவள் இந்த கமலாம்பிகை. சுயம்பான தேவி. சிற்பி செதுக்காத சிலை. காமகலா தோற்றமானவள். இவளின் உற்சவமூர்த்தி மனோன்மணி என போற்றப்படுகிறாள். வாக்கும் மனமும் கடந்த மனோன்மணி என்பார் திருமூலர். யோகம் ஆகாயத்தோடு தொடர்புடையது. இந்த மனோன்மணியாகிய கமலாம்பிகையே சிற்பரவெளியின் தற்பர தேவதை. இவளுக்கு பைந்தவ வாசினி என்கிற திருப்பெயரும் உண்டு. பைந்தவம் என்பது புருவமத்தி. குண்டலினியாகிய அம்பிகை இங்கு ஒளிர்கின்ற போதுதான் உயிர் அஞ்ஞானமகன்று மெய்ஞானத் தலைவனை உணர்கிறது. அந்த அருட்சக்தியான காமகலையே கமலாம்பிகை எனும் தேவி.

காமம் அனைத்தும் முடிகின்ற கோடி (கடைசி) நிலமாக, அதாவது, எல்லா விருப்பங்களும் இறந்துபட்ட அத்வைதமாக கமலாம்பிகை தோற்றமளிக்கிறாள். இவள் எழுந்தருளியுள்ள பீடமே 51 சக்தி பீடங்களுக்கும் ஆதார நிலையாகும். லலிதா ஸஹஸ்ரநாமம் பல இடங்களில் இத்தேவியை துதித்துப் போற்றுகிறது. வித்யா எனும் உபாசனையின் யந்திர நாயகி இவளே. தியாகராஜர் சந்நதி வல்லபகணபதியில் தொடங்கும். கமலாம்பிகா சந்நதி உச்சிஷ்ட கணபதியில் தொடங்குகிறது. வித்யா உபாசனையும் வல்லபகணபதியில் தொடங்கி உச்சிஷ்ட கணபதியிலேயே அடங்கும். அதை இது உள்மறையாக உணர்த்துகிறது.

காமகலையாகும் கமலாம்பிகையே மஹாக்ஷோடஸி, வித்யை, பஞ்சதசாக்ஷரி, பாலை, பகளா, மாதங்கி, ஸ்வயம்வர கல்யாணி, புவனேஸ்வரி, சண்டிகை, மகாவாராஹி, ராஜமாதங்கி, திரஸ்கரணி, சுகஸ்யாமளை, லகுச்யாமளை, அஸ்வாரூடா, பிரத்யங்கிரா, தூமாவதி, சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி, பிரம்மானந்த சித்கலை போன்ற சக்திபேதங்கள் என்கின்றன உபநிஷத்துகள். காமா என்ற பெயருடனும், கலா வடிவமாகவும் இருப்பதால் பராசக்தி கமலா என்கிற பெயரைப் பெற்றாள். இத்தேவி காமரூபிணி என்றும் வணங்கப்படுகிறாள். கருவறை, அர்த்தமண்டபம், முன்மண்டபம், பிராகாரம், நந்தி, பலிபீடம், துவஜஸ்தம்பம், அனுக்கிரக மண்டபம் எனும் வாது மண்டபம் என அமைந்து பூலோக மணித்வீபமாய் விளங்கும் தனிக்கோயிலே கமலாம்பிகையின் திருக்கோயில்.

ஸ்ரீ புரம், கமலாபுரி, கமலா நகரம், கமலாலயம், பராசக்திபுரம், பரையூர் என்றெல்லாம் திருவாரூர் பேசப்படக் காரணமாய் விளங்கும் இக்கோயிலே சக்தி பீடங்களுக்கு தாய் வீடாகும். அர்த்த மண்டபத்தில் வாம பாகத்தில் நின்ற கோலத்தில் மந்த்ரிணியாகிய ராஜமாதங்கியும், நிலைவாசல் வெளிப்புறம் சாமரம் வீசும் கலை மகள், அலைமகள் சிற்பங்களும் உள்ளன. ‘ஸ சாமர ரமா வாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதா’ எனும் லலிதா ஸஹஸ்ர நாமாவளியை இங்கு நினைவு கூறலாம். அவர்களின் கீழ் குபேர சக்திகளான சங்கநிதி, பத்மநிதி கல் திருமேனிகள். அளப்பரிய செல்வம் நல்கும் இவர்கள்தான் இங்கே துவார சக்திகளான வாயிற்காவலர்கள்! இவர்கள் ஏன் இங்கே? அம்பிகையின் திருவருள் பிரவாகத்தின் முன் இவர்களின் செல்வச் செழிப்பு சாதாரணம் என்பதை உணர்த்தவோ?

கமலாம்பிகையின் கோபுரவாயிலைக் கடக்கும் போது மேலே பத்து துவாரங்கள். லலிதா ஸஹஸ்ர நாமத்தில் வரும் தசமுத்ரா ஸமாராத்யா எனும் நாமங்கள் நினைவிற்கு வருகின்றன. கமலாம்பிகை திருக்கோயிலின் உட்பொருள் உணர்ந்து தரிசனம் செய்பவர்களுக்கு பாரெங்கும் விளங்கும் 51 சக்தி பீடங்களை தரிசித்த நிறைவு கிடைக்கும் என்பது உண்மையே. எனவேதான் பாரெங்கும் உள்ள தேவி உபாசகர்கள் குருவின் வழிகாட்டுதலின் பேரில் திருவாரூரை தரிசிக்க வருகின்றனர். கமலாம்பிகையே ஏனைய தலங்களிலும் உள்ளீடாய் விளங்குகிறாள் என்பதை கமலாம்பிகை பிள்ளைத்தமிழில் வரும் கைலை நாகேஸ்வரம் எனும் பாடல் உறுதி செய்கிறது.

Tags : Thiruvarur Kamalambika ,
× RELATED காமதகனமூர்த்தி