×

ராகு, கேது தோஷம் வராமல் தடுக்க முடியுமா?

ஓ... தாராளமாக முடியும். எங்கேனும் குருவிக் கூடு, பாம்புப் புற்றிருந்தால் அதனால் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லையெனில் இடிக்காதீர்கள். அடர்ந்த வனங்களையும், காடுகளையும் அழிக்கக் கூடாது. அறுபது எழுபது வருட பச்சை மரங்களை வெட்டுவதற்கு முன்பு யோசியுங்கள். அரசு இடத்தை தந்திரமாக வளைக்கும்போது ராகு உங்களை வளைப்பார். ராகுவும், கேதுவும் பாட்டன் பாட்டிக்கு உரித்தான கிரகங்களாதலால் முன்னோர்களின் சொத்துக்களையோ, அவர்கள் வாழ்ந்த வீடுகளையோ நியாயமில்லாமல் விற்க வேண்டுமா என்று பலமுறை சிந்தித்து முடிவெடுங்கள். முக்கியமாக கேதுவின் அருளைப்பெற வேண்டுமெனில் கோயில் சொத்துக்களை எப்படியேனும் குறைந்த விலையில் வாங்கிப் போடலாமா என்று நினைப்பது கூடாது. கற்றுக் கொடுத்த குருவையே நிந்திப்பதை செய்யவே கூடாது. மிக முக்கியமாக புண்ணிய தீர்த்தங்களை மாசுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.

தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொள்ளாவிட்டாலும் அதில் காலை கழுவாதீர்கள். சாமியார் வேஷம் போட்டுக் கொண்டு ஊரை ஏமாற்றும்போது ஞானகாரகனான கேது கடும் கோபம் கொள்கிறார். பரம்பரை பரம்பரையாக வணங்கி வந்த குல தெய்வம் மற்றும் கிராம தேவதைகளின் வழிபாடுகளை நிறுத்தாமல் தொடருங்கள். உங்கள் மூல ஊற்றின் ஒரு கண் அங்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். ஏராளமான பணத்தை வைத்துக் கொண்டு லோபித்தனமாக இருக்கக் கூடாது. ஏனெனில் யோகக்காரகனான ராகுவை ஓரிடத்தில் முடக்காதீர்கள். பிறன்மனை நோக்குவதும், களவாட நினைப்பதும் கடுமையான களத்திர தோஷமாக மாறும். கன்றுக்கு பால் விடாமல் ஒட்ட ஒட்ட பால் கறப்பது கூட தோஷத்தை அதிகரிக்கும். பொய் சாட்சி கூறும்போது உங்களின் வாக்கு ஸ்தானத்தில் தானாக ராகுவோ, கேதுவோ அமர்வது நிச்சயம்.  

- கிருஷ்ணா

Tags : Rahu ,Ketu Tosham ,
× RELATED ராகு-கேது தோஷ நிவர்த்திக்கு என்ன பரிகாரம்?