×

இன்று வைகாசி 1 : குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு கும்பத்தை வீட்டில் வைத்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்

வளம் தரும் மாதமாக வைகாசி மாதம் உள்ளது. சித்திரை முடிந்து வைகாசி மாதம் ஆரம்பிக்கும் பொழுது வணங்க வேண்டிய தெய்வமாக உங்கள் குலதெய்வம் உள்ளது. இந்த வைகாசி பிறப்பில் உங்கள் குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு இந்த கும்பத்தை வீட்டில் வைத்தால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். அது மட்டுமல்லாமல் நாளைய தினம் உங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது, அவர்களின் ஆசீர்வாதத்தை பெற்று தரும். வைகாசி கலசத்தை எப்படி வைப்பது என்று இப்பதிவில் காணலாம்.

காலை எழுந்ததும் வீடு முழுவதும் துடைத்து விட்டு, பூஜை அறையில் அலங்காரம் செய்து, தெய்வத்தின் திருஉருவ படங்களுக்கு மலர்கள் சாற்றி, மஞ்சள், குங்குமம் இட்டு தயார் செய்து கொள்ளவும். பின்னர் உங்கள் குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ளுங்கள். கலச சொம்பு ஒன்றை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். குல தெய்வம் தெரியாதவர்கள் திருசெந்தூர் முருகனை மனதார குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு இந்த பரிகாரத்தை செய்யலாம். வைகாசி மாதம் முருகனுக்கு உகந்த மாதமாக இருப்பதால் முருகனை வேண்டுவது சகல ஐஷ்வர்யங்களையும் அள்ளித் தரும்.

கலசத்தில் சுத்தமான தண்ணீர் முக்கால் பகுதியாக நிரப்பிக் கொள்ளுங்கள். அதில் உங்கள் குல தெய்வத்தை ஆவாஹணம் செய்து எழுந்தருளச் செய்யுங்கள். கலசத்தில் சிறிது கல்லுப்பு, பன்னீர், மஞ்சள் தூள் இவற்றை கலந்து கொள்ளுங்கள். அதனுடன் ஒரு வெற்றிலை, 2 கொட்டை பாக்கு, ஏலக்காய் ஒன்று இவைகளை சேர்த்து கொண்டப்பின் கலசத்தின் வாய் பகுதியில் மாவிலையை வைக்கவும். அதன் மீது கலச தேங்காயை மஞ்சள் தடவி வைக்கவும். தேங்காய்க்கு சந்தனம், குங்குமம் பெரியதாக வைக்கவும்.

இந்த தெய்வீக கலசத்திற்கு உங்களிடம் இருக்கும் தங்க நகை ஒன்றையும், வாசனை மலரையும் சூட்டவும். தெய்வ படங்களுக்கு நேராக வாழை இலையை விரித்து அதில் பச்சரிசியை பரப்பிக் கொள்ளுங்கள். பச்சரிசியின் மீது இக்கலசத்தை வைக்கவும். தியானத்தில் அமர்வது போல அமர்ந்து கொண்டு குலதெய்வம் பெயரை 108 முறை உச்சரிக்க வேண்டும். குல தெய்வம் பெயர் தெரியாதவர்கள் திருசெந்தூர் முருகன் நாமத்தை உச்சரிக்கலாம்.

மந்திரம்:

ஓம் திருசெந்தூர் முருகனே நம!!

இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். இதில் ‘திருசெந்தூர் முருகனே’ பதிலாக உங்கள் குல தெய்வம் பெயரை இணைத்துக் கொள்ளுங்கள். இரு கைகளை கூப்பி இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்தால் குடும்பத்தில் அமைதி பிறக்கும். குல தெய்வத்தின் அருள் நிச்சயமாக கிடைக்கப்பெறும். வைகாசியில் வைகுந்தனை நினைத்தாலும் சுகபோக வாழ்க்கை கிட்டும். நைவேத்யமாக உங்கள் இஷ்ட தெய்வதிற்கு பிடித்தவற்றை வைக்கலாம்.

இந்த நாளில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்த பரிகாரமாக இருக்கும். தர்ப்பணம் கொடுக்க முடியாதவர்கள் தங்களது இல்லத்திலேயே எள்ளும், தண்ணீரும் இறைத்து முன்னோர்களை வழிபாடு செய்யலாம். அவர்களுக்கு பிடித்த உணவுகளை சமைத்து படைத்து வழிபடலாம். இதன் மூலம் குடும்பத்தில் அமைதியும், செல்வமும் செழிக்கும். வைகாசியை இந்த முறையில் வரவேற்று பாருங்கள் நல்ல மாற்றங்கள் உண்டாகும்.


Tags : family deity ,
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்