×

சித்ரா பௌர்ணமி அன்று, சித்ரகுப்தனை வீட்டிலேயே வழிபாடு செய்யும் முறை!!

வருடத்தின் முதல் மாதமான, சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி தினத்தையே சித்ரா பௌர்ணமி திருநாளாக எல்லோரும் கொண்டாடி வருகின்றனர். இந்த தினத்தில் குறிப்பாக, சித்திரகுப்தரை வழிபட வேண்டும் என்று நம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. இன்றைய தினம் தான் சித்திர குப்தனின் பிறந்தநாள் என்றும் சில சாஸ்திர குறிப்புகள் கூறுகிறது. எது எப்படியாக இருந்தாலும், நம்முடைய பாவ புண்ணிய கணக்குகளை ஒன்றுவிடாமல் எழுதிவைத்து, நம்முடைய உயிர் பிரிந்ததும், நம் நரகத்திற்கு செல்ல போகின்றோமா, சொர்க்கத்திற்கு செல்ல போகின்றோமா என்பதை நிர்ணயிப்பது இந்த சித்திர குப்தனின் கையில் இருக்கும் கணக்கு புத்தகத்தில் தான் உள்ளது.

இப்படியிருக்க, இவ்வளவு பெருமைகளைக் கொண்ட இந்த சித்திர குப்தனை வருடத்திற்கு ஒருமுறையாவது நாம் வணங்க வேண்டாமா? இதற்காகத்தான் நம் முன்னோர்கள் சித்திரகுப்தனை வணங்குவதற்காக சித்ரா பௌர்ணமி தினத்தை தேர்ந்தெடுத்து வைத்துள்ளார்கள். குறிப்பாக இந்த தினத்தில் சித்திரகுப்தனை வழிபாடு செய்தால், நம்முடைய மனது பாவச் செயலை செய்யாமல், புண்ணிய செயலில் ஈடுபடும் என்பதும் ஒரு நம்பிக்கை.இதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட இந்த தினத்தில் சிவபெருமானையும், அம்பாளையும் மனதார நினைத்து வழிபடலாம் என்று சொல்கிறது சில குறிப்புகள். பௌர்ணமி தினம் என்றாலே கிரிவலம் சிறப்பு அல்லவா! சரி. இந்த சித்ரா பௌர்ணமி தினத்தை வீட்டில் முறைப்படி எப்படி வழிபடலாம் என்பதைப் பற்றி இனி பார்க்கலாம்.

பண்டிகை தினத்துக்கு முந்தைய தினமே வீட்டை சுத்தம் செய்வதுதான் சிறப்பு. எப்பவும் போலவே பண்டிகை தினமாக இருந்தால் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே கண்விழித்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அதன்பின்பு அவரவர் உடல் நிலையை பொறுத்து, சித்ரா பௌர்ணமி விரதத்தைக் கடைபிடித்து கொள்ளலாம். சித்திரகுப்தனுக்கு நெய்வேதிமாக சர்க்கரைப் பொங்கல், மோர், பானகம், சித்ரா அண்ணம் என்று சொல்லப்படும் கலவை சாதத்தை தயார் செய்து கொள்ளலாம்.

சித்ரா பௌர்ணமி என்றாலே, தேங்காய் சாதம், புளிசாதம், எலுமிச்சைசாதம், தயிர்சாதம் போன்ற கலவை சாதங்கள் செய்வதை தான், நம் முன்னோர்கள் வழக்கமாக வைத்திருப்பார்கள். சித்ரா பௌர்ணமி தினமான அன்று மாலை 6 மணிக்கு, முழுநிலா உதயமாகும் சமயத்தில், நம் வீட்டு பூஜை அறையில் இந்த நைவேத்தியங்களை எல்லாம் இறைவனுக்குப் படைத்து, முழுமனதோடு சித்திர குப்தனை நினைத்து வேண்டிக்கொள்ள வேண்டும். உங்களால் முடிந்தால் இந்த நெய்வேத்தியத்துடன் ஒரு நோட்டுப் புத்தகத்தையும், ஒரு பேனாவையும் கூட நம் வீட்டு பூஜை அறையில் வைக்கலாம். ‘நான் செய்த, தெரியாத பாபங்களை கூட, நான் செய்த புண்ணிய கணக்கோடு சேர்த்துவிட வேண்டும்’ என்ற படி சித்திர குப்தனை பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயம் நம்முடைய பாவ கணக்குகள் கழிக்கப்படும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நாம் செய்த பாவ கணக்கை எல்லாம் அழித்துவிட்டு, புண்ணிய கணக்கை எழுதுவதற்காகத்தான் அந்த நோட்டுப் புத்தகமும் பேனாவும்.

இறைவனுக்காக படைக்கப்பட்ட நெய்வேதியமான, கலவை சாதங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு எல்லோரும் ஆற்றங்கரையில் ஒன்றாக கூடுவார்கள். உற்றார், உறவினர், நண்பர்கள் எல்லோரும் தாங்கள் கொண்டு வந்த கலவை சாதத்தை, பரிமாற்றம் செய்து கொண்டு, சந்தோஷமாக அந்த மாலைப் பொழுதை நிலா வெளிச்சத்தோடு கொண்டாடி மகிழ்ச்சி அடைவார்கள். இப்போது ஆற்றங்கரைக்குப் போகும் சூழ்நிலையும் இல்லை. ஆற்றங்கரையில் தண்ணீரும் இல்லை. அந்த பழக்கம் எல்லாம் மாறிவிட்டது. முடிந்தவரை உங்கள் வீட்டு உறவினர்களுடன், உங்கள் குடும்ப உறுப்பினர்களோடு மட்டுமாவது, உங்கள் வீட்டில் நிலா வெளிச்சம் எங்கு படுகிறதோ, முடிந்தால் மொட்டை மாடிக்கு செல்லுங்கள். இல்லை என்றால் உங்கள் வீட்டுப் பால்கனியில், உங்கள் குடும்பத்தோடு இறைவனுக்கு படைத்த அந்த பிரசாதத்தை, நிலா வெளிச்சத்தில் உண்டு மகிழ்ந்து, இந்த சித்ரா பௌர்ணமி தினத்தை மகிழ்ச்சியோடும் நிறைவு செய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.


Tags : Chitragupta ,home ,
× RELATED சித்ரா பெளர்ணமி சிறப்புகள்!