×

யோகங்களும்- தோஷங்களும் தரும் கிரகங்கள்

ஜாதக யோக, அவயோகங்கள் பற்றியும் கிரக அமைப்புக்கள் பற்றியும் பல ஜோதிட பரி பாடல்கள், ஜீவ நாடி ஜோதிட வசனங்கள், சப்தரிஷி நாடி வாக்கியங்கள் உள்ளன. அதில் மகிப் பிரசித்தி பெற்றது புலிப்பாணி பாடல்கள். அந்த பாடல்களில் மறைந்து உள்ள ரகசியங்களை தெரிந்து கொள்ளலாம்.

செவ்வாய்க்கு 4, 7ல் சுக்கிரன்

பாரப்பா பவுமனுக்கு நாலேழ் வெள்ளி.
பகருகின்ற வெள்ளிக்கு ஐந்து, ஏழு, லாபம்.
சீரப்பா சேய் நிற்க சென்மன் தானும்.
சிறப்பாக மேதினியில் நலமாய் வாழ்வான்.
கூறப்பா குடிநாதன் கேந்திர கோணம்.
கொற்றவனே வாகனமும் தொழிலும் உள்ளோன்.
பாரப்பா பாக்கியமும் நிலமும் கிட்டும்.
பகருவாய் திசை புக்தியில் பலிக்குந்தானே !

விளக்கம்: செவ்வாய்க்கு 4 அல்லது 7ல் சுக்கிரன் இருக்க வேண்டும் அல்லது சுக்கிரனுக்கு 5,7,11ல் செவ்வாய் இருக்க வேண்டும். இப்படி இந்த இரண்டு அமைப்புக்களில் ஏதாவது ஒரு அமைப்பு ஜாதக கட்டத்தில் இருந்தால் அது யோக ஜாதகமாகும். இது தவிர லக்னாதிபதியும் கேந்திரம் அல்லது திரிகோணத்தில் அமர்ந்து விட்டால் அந்த ஜாதகருக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். மண், பெண், பொருள், நிதியம், ஆயுள், ஆரோக்கியம், வாகன , பூமிபாக்கியம், தொழில் விருத்தி ஆகியன உண்டாகும். இந்த பாக்கியங்கள் மேல் சொன்ன கிரக, தசாபுக்திகளில் நடைமுறைக்கு வரும் என்பது புலிப்பாணி முனிவரின் வாக்கும்.

பெண்கள் வகையில் யோகம்

கூடினேன் கரும்பாம்பு, செவ்வாய், நீலன்.
கொற்றவனே ஓரிடத்தில் கூடி நிற்க.
தேடினேன் தையவிட பொருளுஞ்சேரும்.
திடமாமன மனையுமது கட்டுவானாம்.
 சூடினேன் சுகமுண்டு சென்மனுக்கு
சுருதி மொழி பிசகாது சிலகாலத்தில்
ஆடினேன் அழுதாலும் வினையும் போமோ.
அப்பனே அமடுகளும் திடமாய்ச் சொல்லே !

விளக்கம்: ராகு, செவ்வாய், சனி இந்த மூன்று கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில் சேர்ந்து அமர்ந்து இருந்தால் சொத்து, சுகம், செல்வாக்கு ஒரு ஜமீன் போன்ற வாழ்க்கை அமையும். பெண்கள் அதாவது தாய்வழியில் உயில் சொத்து கிடைக்கும். சகோதரி, மனைவி, மாமியார் மூலம் சொத்து வருவாய் யோகம் உண்டு. மாளிகை போன்ற வீடு, தோட்டம், தோப்பு என சுகபோக வாழ்க்கை அமையும். என்றாலும் ஊழ்வினை காரணமாக அவ்வப்போது சில துன்பங்கள், இழப்புக்கள் வந்து போகும்.

சனி - சந்திர யோகம்

வாரே நீ இன்ன மொன்று வழுத்தக் கேளு
 வளர்மதியும் நல்லவனாய் அமர்ந்திட்டாலும்.
சீரே நீசனி அவனைப் பார்த்திட்டாலும்.
செழுமையுள்ள சந்திரனார் திசையைக்கேளு
கூற நீகுமரனுக்கு பசும் பொன் கிட்டும்.
குலவயத்தில் கடன் கொடுப்பான் வேந்தனுக்கு
பாரே நீயாய் மதியும் பூசம் மூணில்
பகருவாய் புலிப்பாணி குறித்திட்டேனே !

விளக்கம்: வளர்பிறை சந்திரன் உச்சம், ஆட்சி, நட்பு. வீடுகளில் இருக்க. அவரை சனி பார்த்தால் சந்திர தசையில் ஜாதகங்களுக்கு ராஜயோகம் உண்டு. அரசாங்க உயர் பதவி கிடைக்கும். தொட்டது துலங்கும். மேலும் சந்திரன் பூசம் நட்சத்திரம் 3ஆம் பாதத்தில் இருந்தால் பல நிறுவனங்களுக்கு சொந்தக் காரராக இருப்பார். நிதி நிறுவனம் நடத்தும் யோகம் அமையும். வைரம், ரத்தினக் குவியல் பொன், பொருள் குவியும்.

நான்கும் - பத்தும் சேர்க்கை

சூடப்பா இன்ன மொன்று செப்பக் கேளு
 சுகம் உள்ள நாலோனை கருமன் கூடில்
கூடப்பா கோயில் திருப்பணிகள் செய்வன்.
கொற்றவனே வாகனம், செம்போன் கிட்டும்.

விளக்கம்: ஜாதக கட்டத்தில் இந்த நான்காம் இடமும், பத்தாம் இடமும் மிக முக்கிய ஸ்தானங்கள் . நான்காம் இடம் சுகஸ்தானம், பூமி, வீடு, நிலம் போன்றவற்றை குறிக்கும். பத்தாம் இடம் வியாபாரம், தொழில் , புகழ், கீர்த்தி, பதவி போன்றவற்றை குறிக்கும். இந்த நான்காம் அதிபதியும். பத்தாம் அதிபதியும் சேர்ந்து யோக ஸ்தானத்தில் இருந்தால். சகல வசதி வாய்ப்புக்களோடு ராஜ கம்பீரமாக பவனி வருவார்கள். எல்லாத்துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். பட்டம், பதவி கிடைக்கும். குபேர சம்பத்தை அனுபவிப்பார்கள். கோயில் அறங்காவலர், கோயில் திருப்பணிகள் செய்வார்.

அயல் நாட்டில் பொருளீட்டும் யோகம்

பாரப்பா ஈராறோன், இருநான்கோறும்.
பகருகின்ற செவ்வாயும் மூவர் சேர்ந்து
கூறப்பா எவ்விடத்தில் கூடிட்டாலும்.
கொற்றவனே பரதேசம் போவான் காளை
சீரே நீ சந்திரனும் கண்ணுற்றாலும்.
சில காலம் தங்கியி ருந்து செம்பொன் தேடி
ஆரப்பா அவன் பதியில் வந்து வாழ்வான்.
அப்பனே புலிப்பாணி அறைந்திட்டேனே !

விளக்கம்: ஜாதக கட்டத்தில் ஜோதிட விதிப்படி 6,8,12 க்குரியவர்கள். சேர்க்கை பார்வை பெறுவது வபரீத ராஜயோகமாகும். ஏதாவது ஒரு வகையில் கோடீஸ்வரயோகம் அமையும். அந்த வகையில் எட்டாம். அதிபதியும், பன்னிரெண்டாம் அதிபதியும், செவ்வாயுடன் சேர்ந்து எந்த ராசி வீட்டில் இருந்தாலும். ஜாதகர் வௌிநாடு சென்று பணம் சம்பாதிப்பார். எல்லா வகையிலும் தனம் குவியும். மேலே சொன்ன மூவரையும் சந்திரன் பார்த்தால் தனலட்சுமி யோகம் அமையும். வெளிநாட்டிலும் சொந்த ஊரிலும் சொத்து வாங்குவார். சில காலம் வெளிநாட்டில் தங்கி பின் சொந்த ஊர் திரும்பி செல்வாக்குடன் வாழ்ந்திருப்பார்.
   
4- கிரகங்கள் மறைவு

வீரப்பா இன்னமொரு வினையைக் கேளு
விளம்பு கின்றேன் நிதி, கருமம், தனமும், நாலோன்.
நாரப்பா நால்வர்களும் மூடமானால் நரபதிபோல்.
இருப்பதற்கு வகையைக் கேளு.
ஆரப்பா அருக்கன் பின் புந்தி சேயும்.
அப்பனே அடைவாகத் தணித்திருக்க
சீரப்பா போகருட கடாட் சத்தாலே
சிறப்பாக மேதினியில் இருப்பராமே.

விளக்கம்: ஒரு ஜாதகத்தில் மிக மிக முக்கியமான இடங்கள் 2, 4, 9,10. இந்த அதிபதிகள் என்று சொல்லப்படும் கிரகங்கள் தான் யோகத்தையும் செல்வத்தையும், செல்வாக்கையும் தருபவர்கள், இப்படிப்பட்ட இந்தநால் வரும் மறைந்து, நீசமாக இருந்தாலும். அந்த ஜாதகர் வாழ்க்கையில் யோக சாலியாக, பாக்கிய சாலியாக எல்லா இன்பங்களையும் அனுபவிக்க முடியும். எப்படி என்றால் சூரியனுக்கு 12 ல் புதனும், செவ்வாயும் சேர்ந்து தனித்திருந்தால் மேலே சொல்லப்பட்ட யோக கிரகங்கள் நால்வரால் உண்டான குறைகள், தோஷங்கள், தீயபலன்கள் நசிந்து, நீங்கி பிரபல ராஜ யோகம் உண்டாகும்.

புதனுடன் குரு,
சுக்கிரன், சனி
போன்றோரின் சேர்க்கை.

பாரப்பா குரு புந்தி சேர்ந்து நிற்கப்
பாக்கியங்கள் கிட்டுமடா புனிதன் சேயின்
அசுர குரு புந்தி சேர அப்பனே பாடகனாம்
பெரியோர் நேசம் கூரப்பா கொடுஞ்சனியும்
 புந்திமேவ கொற்றவனே கன தனவான் சத்ரு இல்லை.
வெகு தனங்கள் உள்ளவனாம் விளம்பக்கேளு !

விளக்கம்: ஜாதக கட்டத்தில் குருவுடன், புதன் சேர்ந்து இருந்தால். வித்தியா யோகம், சாஸ்திர ஞானம், போக பாக்கிய முடையவன். உத்தமன் நிதியும், நீதியும் இருக்கும். அதாவது வங்கி, கணக்கு, வக்கீல், நீதிபதியாக உயர்வான். சுக்கிரனுடன் , புதன் சேர்ந்து இருந்தால் இசையில் வேந்தன், பார்புகழும் பாடகனாக இருப்பான். பெண்களிடம் நேசம் உள்ளவன். பட்டம், பதவி பெரியோர், உயர்ந்தோர் நட்பை உடையவன். சனியும், புதனும் சேர்ந்து இருந்தால் தொழில்கள் பலவும் செய்திடுவான். கலைத்திறன் உள்ளவன், ஓவியன், வரைபடம் வரைபவன். கம்ப்யூட்டர், மெக்கானிசம். உடல் குறை உள்ளவன், நரம்புத் தளர்ச்சி போக சுகம் குறைந்தவன்.
(தொடரும்)

Tags : doshas ,planets ,
× RELATED ஜோதிட ரகசியங்கள்