×

சார்வரி வருட பொதுப்பலன்கள்

13.4.2020 திங்கள் கிழமை இரவு மணி 7.20க்கு துலாம் லக்கினத்தில்  புதன் ஒரையில் சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கிறார். சார்வரி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது, சஷ்டி திதி, மூலம் நட்சத்திரம், தனுசு ராசியில் சந்திரன் உள்ளார். கேது மகா தசையில், சனி புக்தி, சுக்கிரன் அந்தரம். இந்த வருட கிரக அமைப்புக்கள் காரணமாக உலக அரங்கில் இந்தியா பலம் வாய்ந்த நாடாக நிமிர்ந்து நிற்கும். மக்களிடையே மத சம்பந்தமான கருத்து வேறுபாடுகள் இருக்கும். வெளிநாட்டில் பணி புரிபவர்களுக்கு வேலையில் பிரச்னைகள் வரும். பலர் சொந்த நாட்டிற்கு திரும்புவார்கள். இயற்கை சீற்றங்கள் இருக்கும். பலத்த மழை பொழியும், புயல் வெள்ளம் அதிகமாக இருக்கும். சிறு நிலநடுக்கம் ஏற்படும். அரசங்கத்திற்கு பூமிக்கு அடியில் புராதன புதையல் கிடைக்கும். நீர் நிலைகளில் படகு விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.

இந்திய ராணுவத்தின் பலம் அதிகரிக்கும் புதிய ராக்கெட் ஏவுகனைகளை தயாரிக்கும். தங்கம், வெள்ளி விலை திடீர் சரிவு ஏற்படும். பங்கு வர்த்தம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும். சமையல் எரிவாயு விலை குறையும். ரியல் எஸ்டேட் துறையில் தேக்க நிலை நீங்கி அபிவிருத்தி உண்டாகும். சாப்ட்வேர், கம்ப்யூட்டர், தகவல் தொழில் நுட்பம் செல்போன் எலக்ட்ரானிக் சம்பந்தமான பொருட்கள் உச்சமடையும். விளையாட்டுத்துறையில் இந்தியா உலகளவில் சாதனைகள் புரியும். வைரஸ் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. கொசுக்கள் மூலம் புதிய நோய்கள் வரலாம். மூலிகை மருத்துவம், சித்தா, நாட்டு மருந்துகள் பயன்பாடு அதிகரிக்கும். மக்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கோயில்கள், புண்ணிய தலங்களில் கூட்டம் அதிகரிக்கும். இந்த தமிழ் புத்தாண்டு எல்லா பிரிவினருக்கும் நிறைவாக அமையும்.

சிறப்பு பரிகார கோயில்கள்

இந்த புத்தாண்டில் இருந்து எல்லாவளமும், நலமும் பெற்று நோய் நொடிகள் தீர்ந்து சுப விஷயங்கள் கூடி வரவும் அஷ்ட லட்சுமி தசம தனலட்சுமியின் அருள் கிடைக்க சென்று தரிசிக்க வேண்டிய அருள் தரும் ஆலயங்கள். சென்னை பூக்கடை அருகே கந்த கோட்டம் கந்த சுவாமியை தரிசிக்கலாம். செவ்வாய்க்கிழமை விசேஷ பன்னீர் அபிஷேகம் நடக்கும். வள்ளலார் வணங்கி பாடிய திருத்தலம்.அடிமுடி காணா அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மனை தரிசித்து வழிபடலாம். மன அமைதி, ஆத்ம  சந்தோஷம் கிடைக்க பகவான் ரமணர், சேஷாத்திரி சுவாமிகள், யோகிராம் சுரத்குமார். ஜீவ சமாதிகளுக்கு சென்று தியானம் செய்யலாம்.திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரரை தரிசிக்கலாம். 60ம் வயதில் அடி எடுத்து வைப்பவர்கள் தரிசிப்பது சிறப்பு. சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்யும்  ஸ்தலம்.

திருச்சி சமயபுரம் அருகில் திருப்பட்டூர் பிரம்ம புரீஸ்வரரை தரிசிக்கலாம். இங்கு நம் ஜாதக புத்தகத்தை வைத்து வழிபடும் வழக்கம் உள்ளது. சக்தி வாய்ந்த பரிகார ஸ்தலம். ராகு, கேது தோஷம் உள்ளவர்கள். 7,16,25 ஆம் தேதி பிறந்தவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோயில்.சென்னை மயிலாப்பூர் வெள்ளீச்சரம், வெள்ளீஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் நடக்கும் சரபேஸ்வரர் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபட சகல தோஷங்கள் நீங்கும். திருநெல்வேலியை சுற்றியுள்ள நவ திருப்பதி பெருமாளை புதன் அல்லது சனிக்கிழமைகளில் தரிசிக்கலாம்.

தஞ்சை நீடாமங்கலம் அருகே கோயில் வெண்ணி கரும்பேஸ்வரரை தரிசிக்கலாம். சர்க்கரை நோய் குறைபாடுகள் நிவர்த்தியாகும். திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாளை. அமாவாசை அன்று தரிசித்து வழிபடலாம். அங்குள்ள திருக்குளத்தில் வெல்லம் கரைக்க நாட்பட்ட நோய் நொடிகள் குணமாகும். சென்னை திருவான்மியூர் பாம்பன் சுவாமியை பௌர்ணமி அன்று தரிசிப்பது மிகவும் சிறப்பாகும்.
திருபுவனம், சூலின், பிரத்தியங்கிரா சமேத சரபேஸ்வரரை தரிசித்தால் மனக்குழப்பம், மன உளைச்சல் நீங்கும்.சிவங்கை மாவட்டம் திருப்பத்தூர் பெரிச்சி கோயில் சுகந்தவனேஸ்வரரை தரிசிக்கலாம். இத்தலத்தில் நவபாஷண பைரவரை தரிசிப்பது சிறப்பு. பௌர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
 
2020 ஆம் வருட முக்கிய கிரக பெயர்ச்சிகள்.

குருப்பெயர்ச்சி : 15-11-2020 ஞாயிற்றுக்கிழமை இரவு மணி 9.48க்கு மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
சனிப்பெயர்ச்சி : 26-12-2020 சனிக்கிழமை காலை மணி 5.22க்கு மகர ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
ராகு - கேது : 1-9-2020 செவ்வாய்க்கிழமை பகல் மணி 2.16க்கு  ராகு ரிஷப ராசிக்கும், கேது விருச்சிக ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

Tags :
× RELATED தெளிவு பெறுவோம்