×

யுகாதி பண்டிகை (தெலுங்கு வருடப்பிறப்பு)

ஆந்திரா, கர்நாடகா, மற்றும் வட மாநிலங்களில் வாழும் மக்கள் தங்களது புத்தாண்டு பிறப்பை யுகாதி என்ற பெயரில் கொண்டாடி வருகின்றனர். ஆண்டின் தொடக்கத்தையே யுகாதி என்று அழைக்கிறார்கள். அன்று அதிகாலையில் எழுந்து வாசலில் வண்ணக் கோலமிட்டு எண்ணெய் தேய்த்துக்
குளித்து, புத்தாடை அணிந்து, இறைவனை வழிபடுவார்கள். யுகாதி பச்சடி என்ற ஒரு உணவை தயாரிப்பார்கள். அதாவது வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சர்யம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு வேப்பம்பூ, துவர்ப்புக்கு மாங்காய், புளிப்புக்கு புளி, உரைப்புக்கு மிளகாய் அல்லது மிளகு, இனிப்புக்கு வெல்லம் ஆகிய 6 சுவை கொண்ட பச்சடி செய்து சுவாமிக்கு படைத்து அனைவருக்கும் உணவில் பரிமாறுவார்கள்.இந்த பச்சடி ஆந்திராவில் யுகாதி பச்சடி என்றும், கர்நாடகத்தில், தேவுபெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. யுகாதி பச்சடி தயாரித்து இறைவனுக்கு படையல் இட்டு சூரியனை வழிபடுவார்கள்.

 மகாராஷ்டிர மக்கள் இதே நாளை குடிபாட்வா எனவும் சிந்தி மக்கள் சேதி சந்த் எனவும் பலவற்றாகக் கொண்டாடுகின்றனர். யுகத்தின் ஆரம்பம் யுகாதி என அழைக்கப்படுகிறது. பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமையில் யுகாதி கொண்டாட வேண்டும். அன்று அமாவாசை ஒரு நாழிகை இருந்தால் கூட மறுநாள் தான் யுகாதி கொண்டாட வேண்டும். சனிக்கிழமையின் நாயகனான வெங்கடாஜலபதி ஆட்சிபுரியும் திருப்பதியில் கோயில் உற்சவம் அனைத்தும் யுகாதி முதல் தொடங்கப்படுவது வழக்கம். யுகாதி தினத்தையொட்டி யுகாதி ஆஸ்தானம் என்னும் சிறப்பு வழிபாடு நடக்கும். அன்றைய தினம் ஆஸ்தான பண்டிதர்கள் பஞ்சாங்கம் படித்து புத்தாண்டின் பலன் கூறுவர். கோயில்களில் ராமாயண சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடக்கும். இன்று ராமாயணம் கேட்டால் புத்தாண்டு சுபிட்சமாக அமையும் என்பது நம்பிக்கை.

சைத்திர மாதத்தின் முதல் நாள் தான் பிரம்மன் உலகத்தைப் படைத்ததாகப் பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்நாளில் புது முயற்சிகளை மேற்கொள்ள நல்ல நாளாகக் கருதப்படுகிறது. மேலும் சைத்திர மாதத்தின் முதல் நாள் வசந்த காலத்தின் பிறப்பைக் குறிப்பதால், இந்நாள் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் 0 டிகிரி புள்ளியில் இணைவதைத் தான் ஜோதிடத்தில் ‘யுகம்’ என்று குறிக்கின்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனும் சந்திரனும் மேஷ ராசியில் அதே ஆரம்ப இடத்தில் இணையும். ஆனால் சூரிய, சந்திர சுழற்சி நாட்காட்டியைப் பயன்படுத்துபவர்கள் முறையே சூரியன், சந்திரன் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் அந்த 0 டிகிரியைத் தொடும் தினங்களை அவரவர் வருடப் பிறப்பாகக் கொண்டாடுவர். அனைத்து தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களுக்கும் யுகாதி தின நல்வாழ்த்துகள்!!

- கிருஷ்ணா

Tags : Yukadi Festival ,Telugu New Year ,
× RELATED தெலுங்கு வருடபிறப்பை ஒட்டி மதுரை...