×

அறிவோம்: தவன உற்சவம்

ஆலயங்களிலுள்ள நந்தவனத்தில் சுவாமி எழுந்தருளி அங்குள்ள செடி, கொடி, மலர் உள்ளிட்ட தாவரங்களுக்கு அனுக்கிரஹம் செய்வதற்காக நடத்தப்படும் உற்சவமே தவன உற்சவம் என்றழைக்கப்படுகிறது. தவன எனும் மரிக்கொழுந்தானது மலர்களிலேயே அதிக நறுமணம் தரக்கூடியது. மரிக்கொழுந்து மலர்களாலேயே சுவாமிக்கு மாலை, தோரணம் கட்டி அதிக நறுமணம் கொண்ட அனைத்து அலங்காரங்களும் செய்யப்பட்டு பூஜை நடைபெறும். மனதை சுண்டி இழுக்கும் மரிக்கொழுந்து மலரின் வாசத்தால் இறைவன் மனம் குளிர்ந்து கேட்ட வரத்தை அருட்பாலிப்பார் என்றும், அந்த மரிக்கொழுந்து மலர் காயக்காய அதன் நறுமணம் அதிகரிப்பது போல, மனிதர்கள் கஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு இறைவனை வணங்கக்கூடிய நேரத்தில் கஷ்டங்கள் நீங்கும் வகையில் இறைவனையும் குளிரவைத்து, பக்தனையும் குளிரவைக்கும் வகையில் நடத்தப்படுவதே தவன உற்சவம்.

மாசி மாதத்தில் காஞ்சி பகுதியில் அதிக அளவில் பூக்கக்கூடிய மரிக்கொழுந்து மலரை கொய்து அதன் அறுவடையை கொண்டாடும் விதத்தில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் மாசி மாதத்தில் தவன உற்சவம் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடையும்போது, திருமால் ஆமையாக (கச்சபம்) இருந்து மந்தர மலையைத் தாங்கி உதவினார். அமுதம் கிடைத்தவுடன் செருக்குற்ற திருமால் உயிர்கள் அனைத்தும் அஞ்சுமாறு கடல்களைக் கலக்கினார். இதைக் கண்ட சிவபெருமான் ஆமையை அழித்து அதன் ஓட்டை, தான் அணிந்திருக்கும் வெண்டலை (தசை நீங்கி எலும்பு மட்டுமான தலை) மாலையின் இடையில் கோர்த்து அணிந்துகொண்டார்.

தம் செயலுக்கு வருத்தமுற்ற திருமால், காஞ்சியை அடைந்து சிவனை வழிபட்டு நீங்காத பக்தியும், வைகுந்த தலைமைப் பதவியும் திரும்பவும் வரப்பெற்றார். திருமால், கச்சபம் (ஆமை) வடிவில் வழிபட்டதால் இது கச்சபேசம் எனப்பட்டது. சுவாமியும் கச்சபேஸ்வரர் (கச்சபேசர்) என விளங்குகிறார். இத்தகைய சிறப்பு பெற்ற கச்சபேஸ்வரர் கோயிலில் மாசி மாதத்தில் தவன தோட்ட உற்சவம் சிறப்பாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தெப்ப உற்சவத்தினால் குளத்தில் சுவாமி எழுந்தருளி குளத்தில் உள்ள மீன், ஆமை உள்ளிட்ட நீர்வாழ் உயிரினங்களுக்கு அனுக்கிரஹம் செய்கிறார். அதேபோன்று தவன உற்சவத்தை முன்னிட்டு கோயில் நந்தவனத்தில் சுவாமி எழுந்தருளி அங்குள்ள செடி, கொடி, மலர் உள்ளிட்ட தாவரங்களுக்கு அனுக்கிரஹம் செய்வதற்காக இந்த உற்சவம் நடத்தப்படுகிறது.

தவன உற்சவத்தன்று காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் சுந்தராம்பிகை சமேத உற்சவர் கச்சபேஸ்வரர் கோயிலில் உள்ள நந்தவனத்தில் வைத்து சிறப்பு அலங்காரம் செய்யப்படும். இதனைத் தொடர்ந்து விசேஷ பூஜைகள் நடைபெற்று சுந்தராம்பிகை சமேத உற்சவர் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருட்பாலிப்பார். இந்த நிகழ்ச்சி மூன்று நாட்கள் நடைபெறும்.

Tags : festival ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!