×

தாயமங்கலம் - முத்துமாரி

முத்துச் செட்டியாருக்கு மழலைச் செல்வம் தவிர மற்ற எல்லா செல்வங்களும் இருந்தன. மதுரை மீனாட்சியிடம் வேண்டிய வண்ணம் இருப்பார். அப்படி மதுரையிலிருந்து வரும்போது சின்னக் கண்ணணூர் காட்டுப் பகுதியை கடக்கும்போது மூன்று வயது சிறுமியின் அழுகுரல் கேட்டது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை யாரையும் காணவில்லை. குழந்தையை தூக்கிக் கொண்டார். இது மீனாட்சி பிரசாதம் என்று நடக்கத் தொடங்கினார். கோடையின் வெம்மை தொண்டையின் தாகத்தை கூட்டியது.

ஓரிடத்தில் நின்று ஊருணியில் நீர் அருந்தி விட்டு திரும்பிப் பார்த்தார். குழந்தையை காணவில்லை. அதிர்ந்தார். சோகத்தோடு வீடு வந்து சேர்ந்தார். அன்றிரவு கனவில் குழந்தை தோன்றினாள். தான் கத்தாழை காட்டிற்குள் தங்கியிருப்பதாகவும், தன்னைப்போன்றே உருவம் செய்து வழிபடுமாறு கூறியது. மறுநாள் ஊர்ப் பெரியவர்களோடு சென்றபோது சிறுமியின் காலடித் தடம் தெரிந்தன. தடம் காட்டும் பாதையில் சென்றவர்கள் ஓரிடத்தில் சென்று அமர்ந்தார்கள்.

அங்கிருந்த மண்ணை குழைத்து மாரியம்மனை வடித்தார்கள். முத்துச் செட்டியாரின் கனவில் வந்து கூறியதால் முத்துமாரி என்றழைத்தார்கள். இந்த தாயமங்கலத்து முத்துமாரி ராமநாதபுரத்து மக்களின் கண்கண்ட தெய்வமாக மாறினாள். குழந்தைப் பேறுக்காக இங்கு குவிவது சகஜமானது. மதுரையிலிருந்து மானாமதுரை வழியாகவும், மதுரையிலிருந்து சிவகங்கை சென்றும் தாயன்மங்கலத்தை அடையலாம்.

குன்றத்தூர் - கல்யாணதேவி காத்யாயனி

தெய்வத் திருமுறைகள் பாடி சைவத்தை தழைத்தோங்கச் செய்த பெரியபுராணத்தை இயற்றிய சேக்கிழாரின் இல்லத்திற்கு நேர் எதிரில்தான் இந்த காத்யாயனி தேவியின் ஆலயம் உள்ளது. இதனாலேயே இத்தலத்தை திருமுறைக்காடு என்கிறார்கள். பார்வதிக்கும் பரமேஸ்வரனுக்கும் திருமணத்திற்கு முன்பு தடைகள் ஏற்பட்ட போது காத்யாயன மகரிஷியை அணுகி வழிகேட்டார்கள். அப்போதுதான் காத்யாயனி தேவியையும், மந்திரத்தையும் உருவாக்கினார்.

மந்திரத்தை ஜபித்தவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடியது என்கிறது, புராணம். அதனாலேயே இவளை கல்யாணதேவி என்கிறார்கள். இக்கோயிலில் உள்ள மூன்று கிளை வேம்பின் கீழுள்ள நாகராஜரை தரிசித்து கருவறையில் அருளும் அன்னையை தரிசிக்க வேண்டியது நிறைவேறும். கோயிலின் சக்தி தீர்த்தத்தின் புனித நீரை தெளித்துக் கொண்டு கரையேறலாம். குன்றத்தூர் முருகன் மலைக்கோயிலிலிருந்து திருநீர்மலைக்குப் பிரியும் தெருவில் திருமுறைக்காடு தேவி காத்யாயனி தேவியின் கோயில் உள்ளது.

தொகுப்பு: கலைச்செல்வன்

Tags : Thayamangalam - Muthumari ,
× RELATED காமதகனமூர்த்தி