×

மங்களம் அருள்வாள் மேல்வெண்பாக்கம் மகாலட்சுமி

பாரத தேசம் முழுமையையும், கிழக்கும் மேற்குமாகவும், வடக்கும் தெற்குமாகவும் ஆயிரமாயிரம் திருக்கோயில்கள் அலங்கரிக்கின்றன. ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு கருத்தாக்கம் உண்டென்றும், பாரத தேசத்திற்கு மதம் (சனாதன தர்மம்) என்பதே அந்தக் கருத்தாக்கம் என்றும் சுவாமி விவேகானந்தர் கூறுவார். நம்முடைய திருக்கோயில்கள் நம்முடைய கலாசாரத்தின் பிரதிபிம்பமாய், காவலனாய் விளங்கி வருகின்றன. அத்தகைய திருக்கோயில்களில் பன்னெடுங்காலமாய் ஆட்சி புரிந்து பின்னர் கால ஓட்டத்தில் கவனிப்பாரின்றி சிதிலமடைந்த கோயில்கள் பல்லாயிரம். அவற்றுள் ஒன்று தான் மேல்வெண்பாக்கம் ஸ்ரீ லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயில். இங்கு மூலவர் ஸ்ரீலட்சுமிநாராயணப் பெருமாள்.

மகாலட்சுமி தாயார். இங்கு உற்சவர் ஸ்ரீ தேவி பூதேவி ஸமேத கல்யாண கோவிந்தராஜப் பெருமாள். பெருமாளின் திருநட்சத்திரம் உத்திராடம். வைகானச ஆகமம். வடக்கு நோக்கிய திருச்சேவை. நித்ய சொர்க்க வாசல். பெருமாள் ஸ்வயம்புத் திருமேனி. சாளக்ராம திருமேனி. மஹா பக்த ஹனுமன் ஸ்வாமி மூன்று மண்டலங்கள் தவம் புரிந்த க்ஷேத்ரம். எப்பேர்ப்பட்ட கொடிய தோஷத்தையும் போக்கும் ஸர்வ தோஷ நிவர்த்தி க்ஷேத்ரம். தாயாரும் பெருமாளும் ஐக்கிய பாவத்தில் சேவை. இதன் தத்துவம் என்னவென்றால் மன ஒற்றுமை இல்லாத தம்பதியர் இந்த திவ்ய தம்பதியை வழிபட்டால், மன வேற்றுமை விலகி மன ஒற்றுமையும் அன்யோன்யமும் கை கூடும் என்பது ஐதீகம்.

பெருமாள் தன் திருமார்பில் ஆதிசேஷனையே வைஜயந்தி மாலையாய் சூடிய அதிசயம். ஆதிசேஷன் தனக்கு ஆற்றும் திவ்ய கைங்கர்யத்தில் மனமகிழ்ந்து அவருக்கு ஒரு ஏற்றம் தர எண்ணி அவரைத் தன் திருமார்பிலேயே சூடியிருக்கிறார் மேல்வெண்பாக்கம் பெருமாள். இதனால் நம்மை சூழ்ந்துள்ள ராகு, கேது, கால, அங்காரக மற்றும் சர்ப்ப தோஷங்களிலிருந்து நாம் விமோசனம் பெறலாம் என்பது ஐதீகம். எங்கும் இல்லாத அதிசயமாய் தாயார் இங்கு பெருமாளின் திருத்தொடையிலே தன் வலது திருக்கையை ஊன்றி ஸ்வதந்திர லட்சுமியாய் திருச்சேவை. ஸ்ரீ சூக்த ஸ்ரீ மந்த்ரமே இங்கு தாயார் வடிவில் வீற்றிருப்பதாக ஐதீகம். அஷ்ட லட்சுமிகளும் ஒருமுகப்பட்டு மகாலட்சுமியாய் ஸேவை ஸாதிப்பதாக ஐதீகம். காஞ்சி மஹாபெரியவா இந்தப் பெருமாள் தாயாரின் பேரழகில் ஈர்க்கப்பட்டு, சந்நதிக்குப் பக்கத்தில் இருந்த உபநிஷத் ப்ரம்மேந்திர மடத்தில் தங்கி அடிக்கடி பெருமாள் தாயாரை தரிசித்து மகிழ்ந்ததாக வரலாறு.

1957ம் ஆண்டு, மஹாபெரியவா மூன்று நாட்கள் இந்தத் திருச்சந்நதியிலேயே இருந்ததாக இவ்வூர் மக்கள் பெருமையுடன் நினைவு கூறுவர். பிரதி மாதம் உத்ராட திருநட்சத்திரத்தன்று மிகவும் பவித்ரமான ஸ்ரீ லட்சுமிநாராயண நவ கலச ஹோமம் நடைபெறும். இதில் கலந்து கொள்வதினால் நம் வாழ்க்கையிலுள்ள அமங்கலங்கள் எல்லாம் விலகி மங்களங்களை நிரப்பச் செய்யக்கூடிய ஹோமம். எப்பேர்ப்பட்ட கொடிய தோஷத்தினாலும் ஏற்பட்ட சந்தான பாக்கியமின்மை, விவாஹ ப்ராப்தியின்மை, தாம்பத்ய அன்யோன்யக் குறைவு ஆகியவை நீங்கி, நல்ல வரங்களை நல்கும் மகத்தான புண்ய பலன்களைத் தரக் கூடிய ஹோமம். மிக முக்கியமாக, குழந்தைப்பேறு வேண்டி வரும் தம்பதியருக்காக, ஸ்ரீ லட்சுமிநாராயண ஹ்ருதய மந்த்ரத்தில் ஜபிக்கப்பட்ட பால் பாயசம் பிரசாதமாக வழங்கப்படும்.

64 மிக அரிய மூலிகைகளைக் கொண்டு ஹோமம் செய்யப்படுவதால், நாள்பட்ட தீராத வியாதிகள் தீர்கிறது. காலை எட்டு மணியிலிருந்தே பொங்கல் பிரசாதம் வழங்கப்படும். மதியம் இரண்டு மணிக்கு ஹோமம் முற்றுப்பெறும். பிரசாதமும் வழங்கப்படும். காலை 8.15 மணிக்கு மூலவருக்குத் திருமஞ்சனமும் ஸஹஸ்ர நாம அர்ச்சனையும் செய்து வைக்கப்படும். பின்னர் பரம பவித்ரமானதும், அங்க ஹீனம் புத்தி ஹீனம் இல்லா குழந்தைப் பேற்றை நல்குவதும், ஸ்ரீ மன் நாராயணனுக்கு சமமான தேஜஸ் உள்ள குழந்தைப் பேற்றை சம்பவிக்க வல்லதும் ஆன ஸ்ரீலட்சுமிநாராயண ஹ்ருதய மந்த்ர பாராயணம் செய்விக்கப்பட்டு, குழந்தை சந்தான கிருஷ்ணன் மூர்த்தம் தம்பதிகள் கையில் தரப்படும்.

அதி சீக்கிரம் குழந்தை பாக்கியம் வேண்டி பெருமாள் தாயாரிடம் நடத்தப்படும் சக்தியுள்ள பிரார்த்தனை இது. இந்த மிகப்பழமையான புனித தலம் வேலூர் மாவட்டம் அரக்கோணம் தாலுக்கா நெமிலி ஒன்றியத்தில் பனப்பாக்கத்திற்கு அருகில் உள்ளது. கடந்த 7.2.2020  வெள்ளிக்கிழமை அன்று கும்பாபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரத்திலிருந்து 17 கி.மீ தொலைவில் பனப்பாக்கம் செல்லும் பாதையில் மேல்வெண்பாக்கம் உள்ளது. அரக்கோணம் ரயில் மற்றும் பஸ் நிலையத்திலிருந்து 24 கி.மீ. தொலைவிலும், வேலூர் பஸ் நிலையத்திலிருந்து 49 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

Tags : Mangalam Arulwal Ippenpakkam Mahalakshmi ,
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?