×

டியூசன் முடிந்து வீடு திரும்பியபோது விபத்து; டிராக்டரில் சிக்கி 2 சிறுவர்கள் பலி: தாய் கவலைக்கிடம்

சென்னை: மொபட் மீது டிராக்டர் மோதியதில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். டியூசன் சென்டரில் இருந்து வீட்டுக்கு சென்றபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. மறைமலைநகர் அடுத்த கருநீளம் கிராமத்தை சேர்ந்தவர் தேன்மொழி (35). இவரது மகன்கள் சித்தார்த் (4), லோகேஷ் (3). நேற்று முன்தினம் மாலை, அங்குள்ள டியூசன் சென்டரில் இருந்து தனது குழந்தைகளை மொபட்டில் அழைத்துகொண்டு தேன்மொழி வீட்டிற்கு புறப்பட்டார். அங்குள்ள பிரதான சாலையில் சென்றபோது, அவ்வழியாக சென்ற டிராக்டரை முந்தி செல்வதற்காக தேன்மொழி, தனது மொபட்டை வலது பக்கமாக திருப்பியதாக தெரிகிறது. இந்நிலையில், எதிர் திசையில் வந்த லலிதா என்பவரின் மொபட் மீது, இவரது மொபட் நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் மொபட்டுடன் தேன்மொழி, அவரது இரண்டு குழந்தைகள் சாலையில் விழுந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக, அவர்கள் டிராக்டருடன் இணைக்கப்பட்டுள்ள டிரெய்லர் சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். இதைக்கண்ட அப்பகுதியினர், அவர்களை மீட்க முயன்றனர். அப்போது, சித்தார்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். லோகேஷ், தேன்மொழி ஆகியோரை அப்பகுதியினர் மீட்டு உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு லோகேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்ட நிலையில், லோகேஷ் பரிதாபமாக உயிரிழந்தான். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தேன்மொழிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி மறைமலைநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது….

The post டியூசன் முடிந்து வீடு திரும்பியபோது விபத்து; டிராக்டரில் சிக்கி 2 சிறுவர்கள் பலி: தாய் கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Tags : Tucson ,Chennai ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...