×

குழந்தை வரம் அருளும் இரட்டை லிங்கேஸ்வரர்

பல்லவர்காலம் முதல் பிற்கால சோழர்காலம் வரை சிறப்புற்று விளங்கிய சென்னியமங்கலம் 13-ஆம் நூற்றாண்டில் மாலிக்காபூர் படையெடுப்பால் கொள்ளையடிக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் சீர்குலைந்தது. தற்போது மூன்று வருடங்களுக்கு முன் ஊருக்கு பொதுவான திடலில் செடி கொடிகளை சுத்தம் செய்தபோது சிறியதாக கல் போன்று தெரிந்தது. அதை வெளியே எடுத்து பார்க்கும்போது மிகப் பெரிய சிவலிங்கம் ஒன்று கிடைத்தது. இதன் உயரம் 4 அடியிலும் அடிபீடம் 5 அடி சுற்றளவிலும் இருந்தது.

அங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் மற்றொரு சிவலிங்கம் இதைவிட சற்று சிறியதாக 4 அடி சுற்றளவில் தாமரை வடிவில் கிடைத்தது. இரண்டையும் ஒரே இடத்தில் வைத்து அதற்கு சிறிய கீற்று கொட்டகை அமைத்து அதற்கு ஸ்ரீஉண்ணாமுலை அம்பிகா சமேத ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் மற்றும் ஸ்ரீமீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சொக்கநாதர் என்று பெயர் வைத்து இரட்டை லிங்கேஸ்வரர்களாக அருட்பாலித்து வருகின்றனர். இந்த திருக்கோயிலில் சோமாவாரம், அமாவாசை, பெளர்ணமி ஆகிய நாட்களில் அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது. மற்றும் மகா சிவராத்திரி, கார்த்திகை கடைசி சோமாவாரம், கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை தீபம், ஐப்பசி அன்ன அபிஷேகம், சித்ரா பெளர்ணமி சுமங்கலி பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இக்கோயிலின் தலவிருட்சமாக வில்வ மரமும், அரச மரமும் இணைந்து உள்ளது. குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த மரத்ைத சுற்றி வந்தால், இரட்டை லிங்கேஸ்வரர் அருளினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். இரவு நேரங்களில் பாம்பு ஒன்று ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் மேல் படுத்துவிட்டு பகல் நேரங்களில் வெளியே செல்கிறது. இத்திருக்கோயிலை கட்ட தீர்மானித்து சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இரட்டை லிங்கேஸ்வரரை ஒரே நேரத்தி வழிபட்டால் புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், கடன் நிவர்த்தியாகும். மனக்கஷ்டம் தீரும். இக்கோயில் கும்பகோணம் அடுத்த ஆலங்குடி - மன்னார்குடி சாலையில் திப்பிராஜபுரம் அருகேயுள்ள சென்னியமங்கலம் கிராமத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.

தொகுப்பு: ஆர்.அபிநயா

Tags :
× RELATED சுந்தர வேடம்