×

மகாமகக் குளம் 20/ 20

1. மாசி மாத மக நட்சத்திர தினத்தன்று கும்பகோணம் மகாமகக் குளத்தில் நீராடினால் பாவங்கள் தொலையும், புண்ணியங்கள் பெருகும்.

2. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குருபகவான் சிம்ம ராசியில் பிரவேசிக்கும் நாள் மகாமகமாகக் கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் அன்று இத்திருக்குளத்தில் நீராடி புண்ணியம் பெறுகின்றனர்.

3. பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமிர்தத்தைப் பெற தேவர்-அசுரர் போராட்டம் நிகழ்ந்த போது, அமிர்த குடத்திலிருந்து அமிர்தத் துளிகள் தெறித்துச் சிதறிய 12 இடங்களுள் இத்திருக்குளமும் ஒன்று.

4. ‘மாமாங்கமாடி, மதுரைக்கடலாடி, ஸ்ரீரங்கமாடி, திருப்பாற்கடலாடி’ என்ற சொற்றொடர் மாமாங்கப் பெருமையை விளக்கவல்லது.

5. கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதா காவேரி, சிந்து, கோதாவரி, சரயூ, தாமிரபரணி ஆகிய புண்ணிய நதிகளும் ஒன்பது கன்னிகளாக உருமாறி, பக்தர்கள் தங்களிடம் விட்டுச் சென்ற பாவங்களை, இந்த மகாமக குளத்தில் நீராடிக் கழித்து, குளக்கரையிலேயே ஆலயமும் கொண்டருள்கின்றனர்.

6. அமிர்த குடத்தை கும்பேஸ்வரராக மாற்றிய ஈசன், கிராத மூர்த்தியாக கும்பேஸ்வரர் ஆலயத்தில் அருள்கிறார். சுதைமூர்த்தியான இவருக்கு விசேஷ நாட்களில் தங்கக் கவசம் சாத்தப்படுகிறது.

7. நவகன்னியரும் இந்தக் குளத்தில் நீராடியதால் கன்னியர் தீர்த்தம் என்ற பெயராலும் இத்திருக்குளம் அழைக்கப்படுகிறது.

8. கும்பகோண மகாத்மியத்தில், இந்த மகாமகக் குளத்தின் வடக்கில் 7 தீர்த்தங்களும், கிழக்கில் 4 தீர்த்தங்களும், நடுவில் அநேக புண்ணிய தீர்த்தங்களும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

9. மகாமக நந்நாளில் இத்தீர்த்தத்தில் அமிர்தம் கலப்பதாக ஐதீகம் உள்ளதால் இத்தீர்த்தம் அம்ருதசரோருகம் எனவும் அழைக்கப்படுகிறது.

10. இத்திருக்குளம் பதினைந்து ஏக்கர் பரப்பளவும், அதன் நான்கு கரைகளிலும் 16 சிவ சந்நதிகளையும் கொண்டு விளங்குகிறது.

11. இத்திருக்குளத்தைச் சுற்றிலும் பிரம்மதீர்த்தேசம், முகுந்தேசம், தனேசம், ரிஷபேசம், பாணேசம், கோணேசம், பக்தேசம், பைரவேசம், அகத்தீசம், வியோகேசம், கங்காதரேசம், பிரம்மேசம், மூத்ததீர்த்தேசம் ஆகிய ஆலயங்கள் உள்ளன.

12. மகாமக திருக்குளத்தையும் அதைச் சுற்றியுள்ள சிவாலயங்களையும் கட்டி திருப்பணி செய்தவர் அச்சுதப்ப நாயக்க மன்னனின் அமைச்சரான கோவிந்த தீட்சிதர். இவர் தன்  எடைக்கு எடை கிடைத்த துலாபர தங்கத்தைக் கொண்டு இத்திருப்பணிகளைச் செய்தவர்.

13. கோவிந்த தீட்சிதரின் திருவுருவை லிங்க வடிவில் கும்பேஸ்வரர் ஆலயத்தில் தரிசிக்கலாம்.

14. மாசிமகத்தன்று இத்திருக்குளக் கரையில் உள்ள வீரபத்திரரின் ஆலயத்திற்கு கும்பேஸ்வரர் எழுந்தருள்வார். அப்போது வீரபத்திரரே அவருக்கு பூஜை செய்வதாக ஐதீகம். அர்ச்சகர் வீரபத்திரர் பிரதிநிதியாக பூஜை செய்கிறார். நவநதிகளான நவகன்னியருக்கு காவலாக இவர் இருப்பதால் கங்கை வீரபத்திரர் என இவர் வணங்கப்படுகிறார்.

15. இத்திருக்குள மேல்கரையிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள பிரம்மஞானபுரீஸ்வரர் ஆலயம் அவிட்ட நட்சத்திர பரிகாரத் தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்தில் அருளும் இரட்டை நந்திகளுக்கு முந்திரிப்பருப்பு, நிலக்கடலை இரண்டையும் சேர்த்து மாலை கட்டி அணிவித்து பிரார்த்தனை செய்தால் நினைத்தது நிறைவேறுகிறது.

16. கோடி அன்னதான கர்த்தா, தேப்பெருமாநல்லூர் மகானான அன்னதானசிவன், மகாமகத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்க தயிர் தேவைப்படுமே என்று முதல் வருடமே மரப்பீப்பாய்களில் தயிரை தோய்த்து மகாமகக்குளத்தினுள் சேமித்து வைப்பாராம். அடுத்த வருடம், அந்த மரப்பீப்பாய்களில் உள்ள தயிர் புளிக்காமல் இருந்ததும், தயிர் தட்டுப்பாடே ஏற்படாததும் இறையருளே திருவருள் புரியும் என்பது காஞ்சி மகாசுவாமிகள் திருவாக்கு.

17. கிருஷ்ணதேவராயர் இத்திருக்குளத்தில் நீராடியதாக செங்கல்பட்டு மாவட்டம் நாகலாபுரம் வேதநாராயணசுவாமி ஆலயகல்வெட்டில் காணப்படுகிறது.

18. மாசிமக தினத்தன்று இத்திருக்குளத்தில் நீராடி விரதமிருந்து எளியவர்களுக்கு அன்னதானம் செய்தால் ஆண்வாரிசு பிறக்கும் என்பது நம்பிக்கை.

19. மாசி மகத்தன்று இங்கு நீராடி ஒன்பது சுமங்கலிப் பெண்களுக்கு மங்கலப்பொருட்களை தானம் செய்தால் நவகன்னியர் அருளால் சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
 
20. மகாமகம் முடிந்து 48 நாட்கள்வரை இக்குளத்தில் நீராடினால் மகாமக ஸ்நானம் செய்த பலன் கிட்டும் என்பது நம்பிக்கை.

Tags : Mahamagak Pond ,
× RELATED கருடன் கருணை