×

மயில் வாகனன்

பிப்ரவரி  29, சனி : சஷ்டி விரதம்.  காங்கேயநல்லூர் முருகப்பெருமான் மயில் வாகனத்தில் திருவீதியுலா.

தேவந்திரனும், சூரனும் மயில் வடிவம் கொண்டு அவரை வாகனமாகத் தாங்கியதற்கு முன்பாக ஓங்கார (மந்திரம்) மயில் வடிவுடன் அவருக்கு வாகனமாக இருந்து வந்தது. இவ்வகையில் முருகனுக்கு தேவ மயில், அசுரமயில், இந்திர மயில், பிரணவாகார மயில் எனப் பலவிதமான மயில்கள் வாகனமாக இருக்கின்றன. நமக்கு நேராக முகம் காட்டி வரும் நேர்முகமாக மயில் பிரணவாகார மயில் (ஓங்கார மயில்) என்றும், முருகனுக்கு வலப்புறம் தலையும் இடப்புறம் தோகையும் கொண்டது. அசுரமயில் என்றும், முருகனுக்கு இடப்புறம் தலையும் வலப்புறம் தோகையும் கொண்டது. இந்திரமயில் என்று அழைக்கப்படுகின்றது.

முருகன் மயிலில் வரும் போது வள்ளியும் தெய்வயானையும் தனித்தனி மயிலில் வருகின்றனர். இந்த மூன்று மயில்களையும் யோக, போக, வீர மயில்கள் என்று அழைக்கின்றனர். சில தலங்களில் விநாயகர் மயில் மீது இருபெரும் தேவியருடன் வலம் வருகின்றார். அவருக்கு மயூர கணபதி, சிந்துர  கணபதி என்பது பெயர்களாகும். இவர் சிந்துரன் என்பனை அழிப்பதற்காகச் செய்த வேள்வியில் இருந்து தோன்றிய மயிலை வாகனமாகக் கொண்டதாக விநாயக புராணம் கூறுகின்றது.

முருகன் ஆலயங்களில் நடைபெறும் திருவிழாவில் விநாயகர், தனிவள்ளி, வள்ளி- தெய்வயானை உடனாய முருகப் பெருமான், தனி தெய்வயானை, சுமந்த ரீஸ்வரர் ஆகியோர் தனித்தனி மயில்களில் பவனி வந்து காட்சி தருவது பஞ்சமயில் வாகனக் காட்சியாகும். பிள்ளையார் பட்டியில் வெள்ளி மயில் வாகனத்தில் விநாயகர் பவனி வருகிறார். சென்னை கந்தகோட்டம், மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முதலியவற்றில் தங்க மயில்
வாகனங்கள் இருக்கின்றன. தென்மாவட்டச் சிவாலயங்கள் பெரும் பாலானவற்றில் முருகனுக்கு வெள்ளி மயில் வாகனம் உள்ளது.

சிவாலயத் திருவிழாவில் நடை பெறும் பெருந்திருவிழாக்களில் விநாயகர், வெள்ளி பெருச்சாளியிலும், முருகன் வெள்ளி மயில் வாகனத்திலும், அம்பிகை, சிவபெருமான், சண்டேஸ்வரர் ஆகியோர் வெள்ளி ரிஷபங்களிலும் பவனி வந்து காட்சி தருகின்றனர். சிவாலயங்களில் வெற்றி இடபவாகனக் காட்சி சிறப்பாக இருப்பதைப் போல், முருகன் ஆலயங்களில் தங்க மயில்வாகனக் காட்சி சிறப்பிடத்தைப் பெற்றுள்ளது.

தொகுப்பு: ஆட்சி லிங்கம்

Tags : Peacock ,
× RELATED ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் படம்