×

வேண்டினாலும் கிடைக்காத வரம் கூட, தூங்காமல் இருந்தால் கிடைக்கும். மகாசிவராத்திரியின் வரலாறு

சிவராத்திரியில் பல வகைகள் இருந்தாலும் மகா சிவராத்திரிக்கென்று தனித்துவம் உண்டு. சிவபெருமானை வேண்டி பார்வதி தேவி விரதமிருந்து மானிடர்களுக்கு பெறற்கரிய பாக்கியத்தை பெற்று தந்தார். இத்தகைய அற்புதம் வாய்ந்த மகா சிவராத்திரியின் வரலாறு என்ன? எதனால் அந்நாள் ஆலயங்களில் விஷேஷமாக பார்க்கப்படுகிறது? மகா சிவராத்திரி பூஜை முறையை முறையாக கடைபிடித்தால் என்ன பலன் கிடைக்கும்? என்பதை பற்றி இப்பதிவில் விரிவாக காண்போம் வாருங்கள்.

ஒரு முறை பூமியில் மகா பிரளயம் ஏற்பட்டது. அப்போது பிரம்ம தேவரும், மற்ற பிற உயிர்களும் முற்றிலும் அழிந்து போயின. அவர்களை காப்பாற்ற அன்னை பார்வதி தேவி இரவு பூஜையில் சிவ பெருமானை நினைந்து பூஜிக்க ஆரம்பித்தார். அன்று இரவு முழுவதும் சிவ நாமத்தை உச்சரித்து பூஜை செய்ததன் பலனாக அனைத்து உயிர்களும் காப்பாற்றபட்டன. அன்னையானவள் சிவனை வணங்கி பூஜை செய்த அந்த ராத்திரி சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. மாசி மாதம் இந்த நிகழ்வு நடைபெற்றதால் இன்றும் மாசியில் வரும் சிவராத்திரிக்கு மகத்துவம் வாய்ந்த பலன்கள் உண்டு. அதனால் தான் மாசியில் வரும் சிவராத்திரி மகா சிவராத்திரியாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பார்வதி தேவி வழிபட்ட இந்நாளில் தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், மனிதர்களும் கூட சிவ பெருமானை நினைந்து சிவ நாமம் ஜெபித்து இரவு முழுவதும் வழிபட்டால் தெரியாமல் செய்த பாவங்கள், தெரிந்தே செய்த பாவங்கள் என அனைத்தும் நீங்கும் என்கிறது புராணம். அன்னை நமக்காக வங்கி தந்த வரம் இது. அனைத்து பாக்கியமும் பெற்று இறுதி காலத்தில் மோட்சம் கிட்டுமாம். தெரியாமல் செய்த பாவங்கள் நீங்கும் என்பது சரி. அதென்ன தெரிந்தே செய்த பாவங்கள்? அப்படி என்றால் எந்த விதமான பாவத்தையும் செய்து விட்டு மகா சிவராத்திரி பூஜை செய்தால் போதுமா? செய்த பாவத்திற்கு தண்டனை இல்லையா? என்று கேட்கலாம். சரியான கேள்வி தான். அப்படி தப்பித்து கொள்ள விட்டுவிடும் அளவிற்கு கடவுள் நியாயம் இல்லாதவர் இல்லை. தெரிந்தே செய்யும் பாவங்கள் என்பது வேண்டுமென்றே செய்வது கிடையாது. இதோ ஒரு உதாரணத்திற்கு மகா சிவராத்திரியை வைத்தே ஒரு கதை சொல்லலாம்.

அடர்ந்த வனத்தில் வேடன் ஒருவன் வேட்டையாட சென்றான். அன்றைய நாளில் அவனுக்கு எந்த வேட்டையும் சிக்கவில்லை. நெடுந்தூரம் பயணம் செய்தும் பயன் இல்லை. செய்வதறியாது நின்ற வேடனை நெருங்கி ஒரு புலி வந்தது. புலி நெருங்குவதை உணர்ந்த அந்த வேடன் அருகில் இருந்த வில்வ மரத்தில் எறிக் கொண்டான். அப்போதும் அந்த புலி போவதாக தெரியவில்லை. அங்கேயே நின்று கொண்டிருந்தது. இரவு நேரம் நெருங்கி விட்டது. பயண களைப்பில் வேடனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு கணம் கண் அசந்து விட்டால் அவ்வளவு தான் கீழே விழுந்து விடுவோமே என்று யோசித்தான். மரத்தில் உள்ள இலைகளை ஒவ்வொன்றாக பறித்து கீழே போட்டு கொண்டே இருந்தான். கீழே சிவலிங்கம் ஒன்று இருந்தது. சூரியன் உதித்ததும் புலி சென்று விட்டது. மரத்தில் இருந்து கீழே இறங்கிய வேடனுக்கு அசரீரி ஒன்று ஒலித்தது.

“மகா சிவராத்திரி அன்று நீ உன்னை அறியாமலே கண் விழித்து வில்வ இலைகளை கொண்டு பூஜித்து பலன்களை பெற்றுள்ளாய். உன் பாவங்கள் அனைத்தும் நீங்கப்பெற்று மோட்சம் அடைவாய்”. என்றது அந்த ஒலி. வேடனை பொறுத்தவரை வேட்டையாடுவது அவனது தொழில். அவன் பாவம் செய்வதற்காக வேட்டையாடவில்லை. எனினும் ஒரு உயிரை கொள்வது பாவம் தான். இல்லை என்றும் கூறி விட முடியாது அல்லவா? தெரிந்தே தான் வேடன் கொல்கின்றான். இவை இறைவனால் தீர்மாணிக்கப்பட்டவை. எனவே தான் பாவம் நீங்கி முக்தி கிடைத்தது.

Tags : Mahashivaratri ,
× RELATED மகாசிவராத்திரி ஊர்வலத்தில் மின்சாரம் தாக்கி 14 சிறுவர்கள் காயம்