×

விலங்குகள் வழிபட்ட தலங்கள்

* நெல்லைக்கு அருகில் உள்ள சங்கரன்கோயிலில், அம்பிகை பசு வடிவில் தேவர்கள் சூழ ஈசனை வணங்கினாள். ‘கோ’ எனும் பசுவாக தேவி வழிபட்டதால் அன்னை ‘கோமதி’ என்றே வணங்கப்படுகிறாள்.

* திருச்சி, திருவெறும்பூரில் சிவசக்தி வடிவ ஈசனை, எறும்புகள் வணங்கி, பிரசாதத்தை எடுத்துச் செல்லும் அற்புதம் இன்றும் நிகழ்கிறது.

* ஈ பூஜித்து பேறு பெற்ற தலம் முசிறி அருகே உள்ள திருஈங்கோய்மலை. யோகினிகளே (பெண் அர்ச்சகர்கள்) இங்கு பூஜை, ஹோமங்கள் போன்றவற்றை செய்கின்றனர்.

* பாம்பு பூஜித்த தலம் திருப்பாம்புரம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தல ஈசனை ஆதிசேஷன் என்ற பாம்பு வழிபட்டிருக்கிறது.

* அணில், குரங்கு, காகம் மூன்றும் பூஜித்து நன்மையடைந்த தலம் திருக்குரங்கணில் முட்டம். சாபத்தால் காகமாக மாறிய யமனும், அணிலாக மாறிய தேவேந்திரனும், குரங்காக மாறிய வாலியும், சாபவிமோசனம் பெற்ற இத்தலம், காஞ்சிபுரம், மாமண்டூர் தூசி எனும் இடத்தில் உள்ளது.

* சாபம் காரணமாக மயில் உருவில் அம்பிகை பூஜை செய்த தலம், மயிலாடுதுறை. இங்கு ஈசனின் விமானம் மூன்று தளங்களைக் கொண்டு த்ரிதளமாக உள்ளதும் நடராஜர் கௌரி தாண்டவம் ஆடுவதும் தனிச் சிறப்புகள்.

* கழுகு பூஜை செய்து வளங்கள் பெற்ற தலம் திருக்கழுக்குன்றம். நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் இங்கு கழுகுகள் பூஜித்து வருகின்றன.

* சிலந்தி பூஜித்து முக்தி பெற்ற தலம் திருக்காளத்தி. பஞ்சபூதத் தலங்களுள் வாயுத்தலமாக இது போற்றப்படுகிறது.

* திருவாரூர், திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு உருவில் ஈசனை பூஜித்தார். இன்றும் கருவறையில் வண்டின் ரீங்கார ஒலி கேட்கிறது.
 
* சாபத்தால் நண்டாக மாறிய தேவேந்திரன் ஈசனை வணங்கி பேறு பெற்றான். திருந்துதேவன்குடி எனும் இத்தலத்தை நண்டாங்கோயில் என்றும் அழைப்பர். இது கும்பகோணத்திற்கு அருகேயுள்ளது.

* தஞ்சாவூர், அய்யம்பேட்டைக்கு அருகேயுள்ள திருச்சக்கரப்பள்ளியில் அருளும் ஈசனை சக்ரவாகப் பறவை பூஜித்து பேறு பெற்றது.

* திருவாரூர், திருக்கொட்டாரத்தில் அருள்புரியும் ஈசனை, துர்வாசரால் சாபம் பெற்ற ஐராவத யானை பூஜித்து விமோசனம் பெற்றது.

* தஞ்சாவூர், பட்டீஸ்வரத்தில் காமதேனுவின் மகளான பட்டி எனும் பசு வழிபட்ட லிங்கம் உள்ளது.

* காஞ்சிபுரம், திருக்கச்சூரில் அருளும் ஈசனை திருமால் தரிசித்து, தேவாசுரர்கள் அமிர்தம் கடைந்தபோது மந்தார மலையைத் தான் கூர்மமாக (ஆமை) தாங்குவதற்கு சக்தி பெற்றிருக்கிறார். அதனால் இத்தல ஈசன் கச்சபேஸ்வரர் என வணங்கப்படுகிறார். கிளியாக மாறிய சுகமுனிவர் பூஜை செய்த சுகவனேஸ்வரர், சேலத்தில் அருள்கிறார்.

* ராமாயணத்தில் முக்கிய பங்கேற்ற ஜடாயு வழிபட்ட தலம் வைத்தீஸ்வரன் கோயில். இத்தல சாந்துருண்டையும் சித்தாமிர்த தீர்த்தமும் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சாத்தப்பட்ட சந்தனமும் தீரா நோய்களைத் தீர்க்கும் அருமருந்துகள்.

Tags : worship places ,
× RELATED வழிபாட்டு தலங்களில் அன்னதானம் வழங்க அனுமதி கட்டாயம்