×

தாய்பால் குடித்துவிட்டு தூங்கியபோது விபரீதம், மூச்சுத்திணறி ஆண் குழந்தை பலி; போலீசார் விசாரணை

சென்னை: சென்னை அண்ணாநகர் அன்னை சத்யா நகர், 3வது தெருவை சேர்ந்தவர் எழிலரசன் (32). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சவுமியாஸ்ரீ (26). இவர்களுக்கு 8 மற்றும் 4 மாத குழந்தைகள் மற்றும் மூன்றரை மாதமான தேஜாஸ் ஆண் குழந்தையும் உள்ளது. நேற்று முன்தினம் சவுமியாஸ்ரீ, தனது குழந்தை தேஜாஸ்க்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு, தூங்க வைத்தார். சிறிது நேரம் கழித்து, தனது வேலைகளை முடித்துவிட்டு, தூங்கி கொண்டிருந்த குழந்தை தேஜாஸை பார்த்தபோது, மூச்சு பேச்சின்றி இருந்தது. குழந்தையை எழுப்பியும் எழுந்திருக்கவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். சத்தம் கேட்டு விரைந்து வந்த குடும்பத்தினர், குழந்தையை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து டாக்டர்கள் அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். அதில்,  தாய்ப்பால் புகட்டிய உடனே குழந்தையை தூங்க வைத்ததால், மூச்சு திணறல் ஏற்பட்டு, உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. குழந்தை உயிரிழந்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். தாய்ப்பால் குடித்து விட்டு தூங்கிய மூன்றரை மாத குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது….

The post தாய்பால் குடித்துவிட்டு தூங்கியபோது விபரீதம், மூச்சுத்திணறி ஆண் குழந்தை பலி; போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Viritham ,Chennai ,Annagar ,Satya Nagar ,3rd Street Aelarasan ,32 ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...