×

பலன் தரும் ஸ்லோகம்

(சனிதோஷம் நிவர்த்தி பெற...)

தசரத சக்ரவர்த்தி அயோத்தியை ஆண்ட போது ஒரு முறை சனிகிரகம் ரோகிணி நட்சத்திரத்தைப் பிளந்து கொண்டு செல்லும் கிரக அமைப்பு உருவானது. அதன் காரணமாக நாட்டில் 12 வருடம் பஞ்சம் தலைவிரித்தாடும் என பலனும் கூறப்பட்டது. நாட்டு மக்களை அந்த பஞ்சத்திலிருந்து காப்பாற்ற தசரதர் தேரில் ஏறி சனிகிரக மண்டலத்திற்கே சென்று இத்துதியால் சனி பகவானை துதித்து அந்த ஆபத்தை போக்கினார். இத்துதியை சனிக்கிழமைகள் தோறும் பாராயணம் செய்து வந்தால் சனிகிரக பாதிப்புகள் விலகி மங்களங்கள் பெருகும். அந்த அபூர்வமான ஸ்லோகம் இதுதான்.

நம: க்ருஷ்ணாய நீலாய ஸிதிகண்ட நிபாயச
நம: நீல மயூகாய நீலோத்பல நிபாயச
நமோ நிர்மாம்ஸதேஹாய தீர்க்கஸ்ருதி
ஜடாயச
நமோ விஸால நேத்ராய ஸுஷ்கோதர
பயானக
நம: பௌருஷகாத்ராய ஸ்தூலராம்னே
ச தே நம:
நமோ நித்யம் க்ஷுதார்த்தாய
ஹ்யத்ருப்தாய ச தே நம:
நமோ கோராய ரௌத்ராய பீஷணாய
கராளிநே
நமோ தீர்க்காய ஸுஷ்காய கால தம்ஷ்ட்ர
நமோஸ்துதே
நமஸ்தே கோர ரூபாய துர்நிரீக்ஷ்யாய தே நம:
நமஸ்தே ஸர்வபக்ஷாய வலீமுக நமோஸ்துதே
ஸூர்யபுத்ர நமஸ்தேஸ்து பாஸ்கரே
பயதாயினே
அதோத்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக
நமோஸ்துதே
நமோ மந்தகதே துப்யம் நிஷ்ப்ரபாய
நமோ நம:
தபனாஞ்ஜாத தேஹாய நித்ய யோகதராயச
க்ஞாநசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்யபாத்மஜ
ஸூனவே
துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் க்ருதோ
ஹரஸி தத்க்ஷணாத்
தேவாஸுர மநுஷ்யாஸ்ச ஸித்த வித்யா
ரோரகா:
த்வயா விலோகிதஸ்தேபி நாஸம் யாந்தி
ஸமூலத:
ப்ரஸாதம் குருமே ஸௌரே ப்ரண்த்யா ஹி
த்வமர்த்தித:
ஏவம் ஸ்துதஸ்ததா ஸௌரிர் க்ரஹராஜோ
மஹாபல:
அப்ரவீச்ச சனிர் வாக்யம் ஹ்ருஷ்டரோமா
து பாஸ்கரி:
ப்ரீதோஸ்மி தவ ராஜேந்த்ர ஸ்தோத்ரேணா
னேன ஸம்ப்ரதி
அதேயம் வா வரம் துப்யம் ப்ரீதோஹம்
பிரதாமிச

பொதுப்பொருள்: மயில் கழுத்து போன்ற நீல நிறமுள்ள சனிபகவானே, தங்களுக்கு வணக்கம். கறுமை நிறம் கொண்டாலும், ஈர்க்கும் சக்தியுள்ளவரே தங்களுக்கு வணக்கம். நீலோத்பல மலர் போன்ற நிறமுள்ளவரே தங்களுக்கு வணக்கம். மெலிந்த உடல், நீண்ட காது, நீள்முடி கொண்டவரே! தங்களுக்கு வணக்கம். குறுகிய வயிறுள்ளவரும், சற்றே அச்சுறுத்தும் தோற்றமும் நீண்ட கண்களையும் உடைய தங்களுக்கு வணக்கம். கோபமாகவும், பயத்தை உண்டாக்குபவருமாக உள்ள தங்களுக்கு வணக்கம்.

சூரிய பகவானின் புத்திரரும், அபயம் அளிப்பவரும், கீழ்ப்பார்வை கொண்டுள்ள தங்களுக்கு வணக்கம். பிரளயத்தை உண்டாக்குபவரும் நிதானமாகச் செல்பவரும் ஞானக்கண் கொண்டவருமான தங்களுக்கு வணக்கம். தாங்கள் மகிழ்ந்தால் அரசபதவியைக் கொடுப்பீர்கள். கோபம் கொண்டால் அந்த நிமிடமே அதை பறிப்பீர்கள். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், சித்தர்கள், கல்விமான்கள், யாவரும் தங்கள் பார்வை பட்டால் துன்பத்தை அடைகிறார்கள்.

சூரியபகவானின் புத்திரனே! வணங்கி உங்களை யாசிக்கிறேன். எனக்கு அருள்புரிய வேண்டும். தங்களால் ஏற்படும் பாதிப்புகள் எங்களைப் பெரிதும் பாதிக்காது பாதுகாத்தருள வேண்டும். இத்துதியால் மனமகிழ்ந்த சனிபகவான் இதை யார் பாராயணம் செய்கின்றனரோ அவர்களுக்கு தன்னால் எந்த வித கேடுகளும் விளையாது என வாக்களித்தார்.

Tags : Slocum ,
× RELATED பலன் தரும் ஸ்லோகம் (கடன்கள் தீர, சகல தோஷங்களும் விலக)