×

தன பலம் கூட்டுவார் ஸ்ரீ தர்ம சாஸ்தா

கூத்தூர், தஞ்சை

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்துள்ளது கூத்தூர். நடனபுரி என்று முன்பு அழைக்கப்பட்டு தற்போது கூத்தூர் என அழைக்கப்படும் ஊரின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயம். பெரிய திருமதிற்சுவர்களால் சூழப்பெற்று கிழக்கு நோக்கி அமைந்துள்ளது ஆலயத்தின் முன்புறம் இரண்டு குதிரை, இரண்டு யானைகள், தர்மசாஸ்தாவின் வாகனங்களாக விளங்குகின்றன. இடப்புறம் காவல் தெய்வமான கருப்பர் என்று அழைக்கக்கூடிய பதினெட்டாம்படி கருப்பரான சங்கிலி கருப்பர் சந்நதி உள்ளது. வடக்கு நோக்கி மதுரை வீரன் சந்நதி உள்ளது. உள்ளே நுழைந்ததும் வாகன மண்டபம் உள்ளது.

இங்கே யானை, பலிபீடம் உள்ளது. அடுத்துள்ளது ஸ்தபன மண்டபம். இங்கு இடதுபுறம் ஆலயத்தின் மூல முதல்வரான விநாயகர் அருட்பாலிக்கிறார். அடுத்துள்ள மகா மண்டபத்தில் தர்ம சாஸ்தாவின் உற்சவ மூர்த்தி சிலைகள் உள்ளன. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் தர்மசாஸ்தா கிழக்கு திசை நோக்கி அருட் பாலிக்கிறார். தர்மசாஸ்தாவின் வலதுகால் தொங்கிய நிலையிலும் இடது கால் மடிந்து குறுக்காக இடது முழங்கால் மேல் இடது கை நீட்டி அருட்பாலிக்கிறார். இவரின் வலதுபுறம் பூர்ணாம்பிகை திருமண கோலத்தில் அமர்ந்துள்ளார். இடதுபுறம் புஷ்கலாம்பிகை அமர்ந்துள்ளார்.

கேரள வணிகர்கள் வியாபாரம் செய்யும் பொருட்டு அப்போதைய சோழ நாட்டுக்கு வருவது வழக்கம். அதேபோல் ஒரு முறை வந்த கேரள வணிகர்கள் வியாபாரம் செய்ய தங்களுடன் விலையுயர்ந்த பொருட்களை ஏற்றிக்கொண்டு மாட்டு வண்டிகளில் வந்தனர். அவர்கள் தங்களுடன் தாங்கள் வழிபாட்டு தெய்வமான தர்மசாஸ்தாவின் உற்சவர் சிலைகளையும் உடன் கொண்டு வந்தனர். நடனபுரிக்கு அந்த வணிகர்கள் வந்தபோது வானம் கருத்து மழைவரும் போல் இருந்தது. உடனே வணிகர்கள் தங்கள் பொருட்களுடனும் தர்மசாஸ்தாவுடனும் அருகே இருந்த விநாயகர் ஆலயத்தில் அன்று தங்கினர். இரவு வந்தது.

தர்மசாஸ்தா தனது சகோதரரான விநாயகரிடம் தான் இரு மனைவிகளுடன் வந்திருப்பதால் தங்க வசதியான இடம் வேண்டுமென கேட்டார். உடனே விநாயகரும் தன் இடத்தை சாஸ்தாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு தள்ளி சென்று அமர்ந்தார். தள்ளிச்சென்று அமர்ந்த அந்த விநாயகர் ஆதி சித்தி விநாயகர் என்று இன்றும் இந்த ஆலயத்தில் போற்றப்படுகிறார். மழைவிட்டதும் வணிகர்கள் புறப்பட்டனர். அவர்கள் தங்களுடன் கொண்டு வந்த பொருட்களை மறவாது எடுத்து சென்றனர். ஆனால் தர்மசாஸ்தாவின் சிலையை மறந்துவிட்டு சென்று விட்டனர்.

தஞ்சை வந்த வியாபாரிகள் தாங்கள் கொண்டு வந்த மிளகு ஏலக்காய் போன்ற மூட்டைகளை வியாபாரம் செய்ய பிரித்த போது அவர்கள் அதிர்ந்து நின்றனர். காரணம் அந்த மூட்டைகள் யாவும் உப்பு மூட்டைகளாக மாறி இருந்தன. மின்வெட்டாய் அவர்கள் மனதில் அதன் காரணம் புரியத் தொடங்கியது. தாங்கள் கொண்டு வந்த தர்ம சாஸ்தாவின் சிலையை நடனபுரியில் விட்டுவிட்டு வந்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டது என உணர்ந்த வணிகர்கள் உடனே புறப்பட்டு நடனபுரி வந்தனர். தர்ம சாஸ்தாவை எடுக்க முயன்றனர் முடியவில்லை.  

தர்ம சாஸ்தா அசரீரியாக ‘‘ இது என்னுடைய திருவிளையாடல், அஞ்ச வேண்டாம். உங்க பொருட்கள் மறுபடியும் அதே நிலையை அடைந்திருக்கும். நான் இங்கே இருக்க விரும்புகிறேன். இனி, வணிகம் செய்யும் பொருட்டு நீங்கள் இவ்விடம் வரும் போது என்னை தரிசித்து செல்லுமாறும். நான் இவ்விடம் நிலையம் கொண்டதை உங்களுக்கு தெரிவிக்கும் விதமாகவே நான் திருவிளையாடல் நடத்தினேன் என்றும் அந்த அசரீரி மூலம் தர்மசாஸ்தா கூறினார். அதுமுதல் தர்மசாஸ்தா இவ்விடம் அருட்பாலிக்கிறார். இத்தலத்தில் குழந்தை பேறு வேண்டி பிரார்த்தனை செய்யும் பெண்களுக்கு அந்தப்பேறு நிச்சயம் கிடைக்கிறதாம்.
அவர்கள் தங்களுக்கு வளைகாப்பு விழா முடிந்ததும் நூற்றுக்கணக்கில் வளையல்களை கொண்டு வந்து இங்குள்ள அம்பிகைக்கு சாத்தியும் குழந்தை பிறந்தவுடன் ஆலயமணியை வாங்கி கட்டியும் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி மகிழ்கின்றனர். தர்மசாஸ்தா பூர்ணாம்பிகை, புஷ்கலாம்பிகையுடன் அருள் பாலிக்கும் இத்தலம், தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து 3 கி.மீ.தொலைவில் உள்ள கூத்தூரில் அமைந்துள்ளது. கல்லனை மற்றும் திருக்காட்டுப்பள்ளியிலிருந்து பேருந்து வசதி உள்ளது.

ஜெயவண்ணன்

Tags :
× RELATED சுந்தர வேடம்