×

சாதுவுக்கு பாடம் கற்பித்த சாய்பாபா

ஒரு புனித யாத்திரை ஒன்றில் கலந்து கொள்வதற்காக சாது ஒருவர் அவர் தனது சிஷ்யர்கள் உடன் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு நாள் அவர்கள் ஷீரடியை அடைந்தனர். 'இங்கு சாய்பாபா என்ற ஒருவர் சாதுவாக இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன் என்றார். வாருங்கள், அவரைப் போய்ப் பார்த்துவிட்டு நமது யாத்திரையைத் தொடர்வோம்' என்றார் அந்த சாது. உடனே சாதுவை சுமந்து வந்த பல்லக்கினையை சீடர்கள் சாய்பாபா தங்கி இருக்கும் மசூதியை நோக்கி வந்தனர். அவரை உடையப் புடைசூழ குதிரைகளும் அங்கு வந்து கொண்டிருந்தன.  

தனது புகழை நானிலம் நன்கு அறிந்து கொள்ளும் நோக்கில் கூட்டமாக வந்த அவர்  துவாரகா மயியைப் பார்த்தார். அதன் மீது இரண்டு கொடிகள் பறந்து கொண்டிருந்தன. “ஒரு சாதுவிற்கு கொடி எதற்கு?  இப்படியொரு தேவையற்ற பெருமை தேவையா? இப்படிப்பட்ட சாதுவைப் பார்ப்பதற்காக வந்ததை நினைத்து வெட்கப்படுகிறேன் பல்லக்கை நிறுத்துங்கள்.  நாம் அடுத்த ஊருக்குச் செல்லலாம்” என்று சீடர்களுக்கு ஆணையிட்டார் அந்த சாது. உடனே அங்கிருந்த சீடர்களில் ஒருவர், ' கொடி வைத்திருப்பது ஒன்றும் ஆடம்பரமல்ல.

அப்படிப்பார்த்தால் நாம் பல்லக்கு, குதிரைகள் என்று ஆரவாரம் செய்தே யாத்திரை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த சாய்பாபாவை மக்கள் பெரிதும் மதித்துப் போற்றி வருகிறார்கள். ஆக இவ்வளவு தொலைவு வந்து விட்டு அந்த மகானைத் தரிசிக்காமல் செல்வது நல்லதல்ல' என்று சீடர்கள் சாதுவிடம் கூறினர் . அவரும் அரைகுறை மனதுடன் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். அவர் சாய்பாபாவைப் பார்த்து நமஸ்காரம் செய்தார் சாது. உடனே சாய்பாபா, ”மசூதியில் கொடிகட்டி வைத்துக் கூத்தடிக்கும் ஒருவனைத் தேடி எதற்காக நீ வரவேண்டும்?

இதுபோன்ற வறட்டு ஜம்பவாங்களுக்கு இங்கு இடம் கொடுப்பது சரியல்ல. ஆகவே, நீ இனி மேல் இந்த மசூதியைத் தேடி இனி ஒருபோதும் வரவே கூடாது. போ, முதலில் இங்கிருந்து போய்விடு” என்று ஆத்திரத்தோடுகூறினார் சாய்பாபா.  அரண்டு போனார் அந்த சாது. சாய்பாபா, தான் கருதியது போல சாதாரண மகான் அல்ல என்பதைத் தெளிவாகவே புரிந்து கொண்டுவிட்டார். அப்புறம் என்ன? அனைத்து யாத்திரைத் திட்டங்களையும் சாது கைவிட்டு, சாய்பாபாவுடனேயே தங்கி இருக்கத் தொடங்கிவிட்டார்.

Tags : Saibaba ,Sadhu ,
× RELATED திண்டுக்கல் சாய்பாபா ஆலயத்தில் அன்னதானம் வழங்கல்