பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே இவ்வுலகில் இல்லை என்பதே உண்மை. மன அமைதி இழந்து கவலை கொள்ளும் நம்மில் பலருக்கு இறுதி புகலிடமாக இருப்பது கோவில் வழிபாடு மட்டுமே. நமது மதத்தில் பல தெய்வங்களை வழிபடும் முறைகள் இருக்கின்றது. அந்த வகையில் அனைவரையும் காக்கும் கடவுளான “பைரவரை” பற்றியும் அவரை “தேய்பிறை அஷ்டமி” தினத்தில் வழிபடுவதால் ஏற்படும் பலன்களை பற்றியும் இங்கு தெரிந்து கொள்வோம்.
பைரவர் உக்கிர தெய்வம் ஆவார். எனவே அவரை தனது இஷ்ட தெய்வமாக வழிபட நினைப்பவர்கள் அனைத்திலும் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். தன்னை உண்மையாக வழிபடுபவர்களை அனைத்து விதமான துன்பங்களிலிருந்தும் காக்கிறார் பைரவ மூர்த்தி. திருட்டு, கொள்ளை, தீய ஆவிகள், மாந்த்ரீக ஏவல்கள் போன்றவற்றால் பாதிப்பு ஏற்படுமோ என பயப்படுபவர்கள் பைரவ மூர்த்தியை வணங்கி வந்தால் மேற்கூறிய எதுவும் அவர்களை ஒன்றும் செய்யாது.
பைரவரின் வாகனமாக கருதப்படுவது மனிதர்களின் தோழனும், நமது உடமைகளை காக்கும் விலங்கான நாய் ஆகும். வீட்டில் வளர்க்கும் நாய்களை முறையாக பராமரிக்காதது, தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீணாக துன்புறுத்துவது, அவற்றை கொல்வது போன்றவற்றை செய்பவர்கள் கடுமையான பைரவரின் சாபத்திற்கு ஆளாவார்கள். இச்செயலால் அவர்கள் தங்கள் வாழ்வில் பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும். இந்த நாய்களுக்கு தினமும் உணவிடுபவர்களுக்கு புண்ணியம் சேரும். பைரவரின் அருட்கடாட்சத்திற்கும் இது வழிவகுக்கும். தமிழ் நாட்டில் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பாடகச்சேரி ஸ்வாமிகள் தன்னை அண்டி வாழும் நாய்களுக்கு தினமும் வயிறார உணவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேய்பிறை அஷ்டமி தினத்தில் காலை வேளையில் பைரவரை வழிபடுவதால் நீண்ட நாட்களாக நோய்களால் பீடிக்கப்பட்டவர்கள் அந்த நோயில் இருந்து படிப்படியாக விடுபடுவர். வறுமை நிலை மாறி வளங்கள் பொங்கும். நண்பகல் வேளையில் வழிபடுவதால் நமது நீண்ட நாள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். மாலை வேளையில் வழிபடுவதால் நமது பித்ரு தோஷங்கள் நீங்கும். நாம் இதுவரை அறியாமல் செய்த பாவங்களை பைரவ மூர்த்தி மன்னித்து அருள்வார். இரவு நேரத்தில் பைரவரை வழிபடுவதால் நமக்கு ஆன்மீக ஞானத்தையும், எதிலும் உண்மை நிலையை அறிந்து கொள்ளும் திறனையும் பெறலாம்.
சனிக்கிழமைகளில் வரும் தேய்பிறை அஷ்டமி பைரவ வழிபாட்டிற்குரிய மிகவும் ஒரு சிறந்த தினமாகும். இந்த தினத்தில் காலையில் பைரவரின் கோவிலுக்கோ அல்லது கோவிலிலுள்ள சன்னிதிக்கோ சென்று விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி, செவ்வரளி பூக்களை பைரவருக்கு சாற்றி, செவ்வாழை பழங்கள் இரண்டை நிவேதனமாக வைத்து பைரவரை அவருக்குரிய மந்திரங்களை கூறி வழிபட ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம சனி, பாத சனி போன்ற சனி கிரகத்தின் கேடான பலன்கள் நீங்கி சனி பகவானால் ஏற்படும் சோதனைகளும் துன்பங்களும் குறையும்.