×

பாம்பு கடித்து சிறுவன் பலி பிரேத பரிசோதனைக்கு சடலத்தை தர மறுத்து உறவினர்கள் வாக்குவாதம்-ஆரணியில் பரபரப்பு

ஆரணி :  திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த களம்பூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(26). ரைஸ் மில்லில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா(23). இவர்களது மகன்கள் திவாகர்(6), உதயரசன்(4). கடந்த சில தினங்களுக்கு முன்பு சரண்யா தனது மகன்கள் திவாகர், உதயரசன் ஆகியோரை அழைத்து கொண்டு நாராயணமங்கலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு களம்பூர் வளையல்காரக்குன்று பகுதியில் உள்ள கோயிலுக்கு குழந்தைகளுடன் சென்றார். பிறகு, அங்குள்ள விவசாய நிலம் வழியாக வீடு திரும்பினார்.வீட்டிற்கு வந்த சிறுவன் உதயரசனுக்கு திடீரென காலில் வலி ஏற்பட்டு துடித்தார். இதை பார்த்த பிரியா, நடந்து வந்த வலியாக இருக்கும் என நினைத்து ஆறுதல் கூறி, சமாதானம் செய்து தூங்க வைத்துள்ளார். இரவு 9 மணியளவில் உதயரசனுக்கு வாயில் நுரை தள்ளியது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரியா, மகனை உடனடியாக களம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்தபோது சிறுவன் உதயரசன் கோயிலுக்கு சென்று நிலத்தின் வழியாக வந்தபோது பாம்பு கடித்திருக்கலாம் என தெரிவித்தனர். உடனே, முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். ஆனால், சுமார் ஒருமணி நேரம் கழித்து ஆம்புலன்ஸ் வந்ததாக தெரிகிறது. தொடர்ந்து, ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் உதயரசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால்தான் சிறுவன் இறந்துவிட்டதாக கூறினர். மேலும், பிரேத பரிசோதனை செய்ய சிறுவன் சடலத்தை வழங்க மறுத்து டாக்டர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஆரணி டவுன் இன்ஸ்ெபக்டர் கோகுல்ராஜ் மற்றும் டாக்டர்கள் வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு சமாதானத்தை ஏற்ற உறவினர்கள், சிறுவன் உதயரசன் சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது….

The post பாம்பு கடித்து சிறுவன் பலி பிரேத பரிசோதனைக்கு சடலத்தை தர மறுத்து உறவினர்கள் வாக்குவாதம்-ஆரணியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Arani Arani ,Saravanan ,Kalampur ,Arani ,Thiruvannamalai district ,
× RELATED புதுக்கோட்டை அருகே மின்னல் தாக்கி இளைஞர் பலி..!!