×

நல்வாழ்வு அருள்வார் நவநீதகிருஷ்ணன்

கடையநல்லூர், நெல்லை

தென் பொதிகை தென்றல் வீசும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்த அழகே உருவான ஊர் கடையநல்லூர். கருப்பாநதி பாயும் கடையநல்லூருக்கு பல சிறப்புகள் உண்டு. கரும்புசாறு போல் இனிப்பாக இருக்கும் நீர்வளம் உடையதால் கருப்பாநதி எனப்பெயர் பெற்றது. கருப்பாநதி பாயும் கடையநல்லூரில் நவநீத கிருஷ்ணன் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார். கடையநல்லூர் பெயர் வரக்காரணம். அகத்திய மாமுனி தென்னாடு விஜயம் மேற்கொண்டபோது ஒருமுறை கடையநல்லூருக்கு வந்தார். அப்போது இடையர்கள் பால் கொடுத்து உபசரித்தனர். அந்த பாலை மூங்கில் கடாகாலில் ஊற்றி கொடுத்துவிட்டு தாங்கள் மாடு மேய்க்க சென்று விட்டனர். இவர் அந்த கடகாலையே கவிழ்த்து சிவலிங்கமாக பிரதிஷ்டை செய்து வழிபட்டார். வழிபாடு முடித்து அகத்தியர் சென்றுவிட்டார். மாடுகள் மேய்ச்சல் முடித்து மாலையில் இல்லம் திரும்பிய இடையர்கள் இந்த கடகாலை நிமிர்த்தியபோது அதை நிமிர்த்த முடியவில்லை. முடியாததால் கோடாரி கொண்டு வெட்டினர். அப்போது கடகாலையில் கோரை ஏற்பட்டு ரத்தம் வந்தது. இதை பார்த்து பயந்து போய் இடையர்கள், மன்னர் வல்லப பாண்டியனிடம் போய் முறையிட்டனர்.

பார்வை குறைபாடுடைய அம்மன்னர் வந்து அந்த கடகாலை தம் இரு கரங்களால் தடவி பார்த்து கண்களில் ஒற்றிக் கொள்ளவும் கண் பார்வை கிடைத்தது. இதனால் மனமகிழ்ந்து, கண் கொடுத்த கமலேசா என வாயார புகழ்ந்து இந்த கடகாலீஸ்வரர் கோயிலை கட்டினார். சிவன் கடகாலில் தோன்றியதால் கடகாலீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். அதுவரை வில்வபுரி என்றும் திருமலை கொழுந்துபுரம் என்றும் அழைக்கப்பட்ட இந்த ஊர், கடகால் நல்லூர் என்றும் நாளடைவில் கடையநல்லூர் என மருவியதாகவும் தல வரலாறு கூறுகிறது. இந்த பகுதியில் இடையர்கள் மிகுதியாக வசித்து வந்தமையால் கிருஷ்ணர் வழிபாடு மற்றும் அவரது சகோதரியான சக்தி வழிபாடும் உருவானது. இத்தல கிருஷ்ணன் நவநீத கிருஷ்ணன் என்ற நாமத்துடன் வழிபப்படுகிறார். கோயில் பூஜைக்காக குடியமர்த்தப்பட்ட அந்தணர்கள், சக்தி வடிவான கருமாஷி அம்பாளுக்கு நிலையம் கொடுத்து வழிபடலாயினர். அவ்வாறு வந்த தெய்வம் தான் கருமாஷி.

இத்தல அம்மனுக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு. கருவை காப்பவள், மாட்சிமை படுத்துபவள் என பொருள். இப்பகுதி பெண்கள் கர்ப்பமுற்றால் இந்த தாயிடம் வேண்டி கொள்வார்கள். தாயும் சேயும் நல்லபடியாக பிறந்தால் மஞ்சளை சாத்தி வழிபடுவதாக வேண்டிக்கொள்வார்கள். நல்லபடியாக பிரசவம் ஆகும். பக்தர்களும் வேண்டுதலை நிறைவேற்றுவர். இதுபோல் மாடு கன்று போட்டாலும் அம்மனுக்கு மஞ்சளை சாத்தி நன்றி செலுத்தும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது. இக்கோயிலில் நவராத்திரி பூஜை, பவுர்ணமி பூஜை, சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் ஆகியவையும் மாசி மாத பவுர்ணமி பூஜை காலையில் ஹோமங்கள், அபிஷேகங்கள் ஆராதனைகளும் மாலையில் திரிசதி அர்ச்சனை பாராயணங்களும் வெகு சிறப்பாக ஆண்டு
தோறும் நடந்து வருகின்றன. இதுதவிர செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் வேண்டுதல் பூஜைகளும் விமரிசையாக நடந்து வருகின்றன.

இதுபோல் இங்குள்ள நவநீத கிருஷ்ண சுவாமி கோயிலில் கடந்த 1994ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. தற்போது திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் நித்யபூஜை, திருவோணம் சிறப்பு பூஜை, மார்கழி தனுர்மாத பூஜை, கோகுலாஷ்டமி போன்றவை வெகு சிறப்பாக நடைபெறும். சந்நதி தெரு பிருந்தாவனமாக ஆகிவிடும். ஏறத்தாழ சாதி மத பேதமின்றி அனைத்து குழந்தைகளும் ராதை கிருஷ்ணர் வேடமிட்டு மகா மந்திரத்தை உச்சரித்து வருவதும் பெண்கள் கோலாட்டம் அடித்துகொண்டு வருவதும் கண்கொள்ளா காட்சியாகும். புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இத்தலத்தில் திருவோண நட்சத்திரத்தன்று பால் பாயாசம் வைத்து வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது இன்றளவும் நடக்கும் உண்மையாகும். இவ்வளவு சிறப்புமிக்க நவநீத கிருஷ்ணன், கருமாஷி அம்மன்கோயில் கும்பாபிஷேகம் தை மாதத்தில் நடைபெற முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகின்றன. பக்தர்கள் தாராளமாக பொருளுதவி வழங்கி திருப்பணிக்கு உதவலாம் என விழா குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

V.குருசாமி,
படங்கள்: முத்தையா

Tags : Navaneethakrishnan ,
× RELATED கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்