×

நலமருளும் நவராத்திரி பூஜை

தீமைகளை அழித்து தர்மம் வெற்றிபெறுவதை குறிப்பதை தான் “நவராத்திரி” விழாவாக  கொண்டாடுகின்றனர். பண்டைய காலத்தில் அதிகளவில் கடைபிடிக்க பட்ட “சக்தி” வழிபாடு எனப்படும் பெண் தெய்வங்களின் வழிபாட்டை இந்த ஒன்பது நாட்களிலும் மேற்கொள்ளும் விழாவாக நவராத்திரி விழா இருக்கிறது. இக்காலத்தில் நவராத்திரி வழிபாட்டை எப்படி செய்தால், எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு அறியலாம். நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாள் மாலை நேரத்திலும்  பூஜையறையில் உள்ள சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை படத்திற்கு விளக்கேற்றி, ஊதுவத்தி ஏற்றி, பழம் அல்லது கற்கண்டுகள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து, தேவியருக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.
இந்த நவராத்திரி விழாவின் சிறப்பு அம்சமே வீடுகளில் வைக்கப்படும் “நவராத்திரி பொம்மை கொலு” தான். நவராத்திரி பொம்மை கொலு வைத்து, ஒன்பது நாட்களும் விரதம் இருந்து வழிபடுபவர்களின் வீட்டில் அனைத்து ஐஸ்வரியங்களும் சேரும் என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் நம்பிக்கை ஆகும்.  

நவராத்திரி கொலு வைப்பவர்கள் ஒன்பது படிகள் கொண்ட கொலு பீடத்தை அமைத்து முதல் படியில் ஓரறிவு கொண்ட மரம், செடி போன்ற பொம்மைகளையும், இரண்டாம் படியில் ஈரறிவு கொண்ட நத்தை, கடற்சங்கு போன்றவற்றின் பொம்மைகளையும், மூன்றாம் படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, ஊர்வன போன்றவற்றின் பொம்மைகளையும், நான்காம் படியில் வண்டு, நண்டு போன்றவற்றின் பொம்மைகளையும், ஐந்தாம் படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகளின் பொம்மைகளையும், ஆறாம் படியில் உயர்ந்த மனிதர்களின் பொம்மைகளையும், ஏழாம் படியில் சித்தர்கள், மகான்கள் போன்றவர்களின் பொம்மைகளையும், எட்டாம் படியில் தேவர்கள், அஷ்டதிக் பாலகர்கள் போன்றவர்களின் பொம்மைகளையும், ஒன்பதாம் படியில் பிரம்ம, விஷ்ணு, சிவன் போன்ற கடவுளர்களின் உருவ பொம்மைகளை வைக்க வேண்டும். ஓரறிவு உயிர் கூட பரிணாம வளர்ச்சியில் மனித நிலையை அடைந்து, பின்பு “ஞானம்” பெற்று இறுதியில் இறைநிலை அடையலாம் எனும் விஞ்ஞானம் மற்றும் மெய்ஞ்ஞான தத்துவத்தை உணர்த்துவதே கொலு வைப்பதின் முக்கிய நோக்கமாகும்.

கொலு வைத்திருக்கும் வீடுகளில் இருப்பவர்கள் 9 ராத்திரி காலத்திலும் 9 விதமான மலர்களை கொண்டு தேவியரை பூஜிக்கவேண்டும். முதல் நாள்  வெண்தாமரை, இரண்டாம் நாள்  மல்லிகை மலர், மூன்றாம் நாள்  மரிக்கொழுந்து, சம்பங்கி, நான்காம் நாள்  ஜாதி மல்லி, ஐந்தாம் நாள்  முல்லை மலர், ஆறாம் நாள்  சிவந்த நிறமுள்ள மலர்கள், ஏழாம் நாள்  முல்லை மலர், எட்டாம் நாள்  ரோஜாப்பூ, ஒன்பதாம் நாள்  செந்தாமரை மேற்கண்ட முறையில் கூறப்பட்ட மலர்களை கொண்டு தேவியரை பூஜித்தால் வீட்டில் தரித்திரம், வறுமை போன்றவை நீங்கும் அனைத்து விதமான செல்வங்களும் வீட்டில் சேர தொடங்கும். பத்தாம் நாளான விஜய தசமி அன்று 3 சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் தந்து, புடவை, ரவிக்கை துணி போன்றவற்றை தானம் அளித்தால் உங்களுக்கு மிகுந்த புண்ணியத்தை பெற்று தரும். பொருளாதார வளமை ஏற்படும். இந்த ஒன்பது நாட்களும் சுண்டல், பழம், பொரி போன்றவற்றை பொம்மை கொலுவை காண வரும் அக்கம் பக்கம் வீட்டு குழந்தைகளுக்கு பிரசாதமாக தருவதும் நற்பலன்களை கொடுக்கும்.

Tags : Navratri ,pooja ,
× RELATED அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை